சனி, 6 நவம்பர், 2010

TMB க்கு PJ அனுப்பிய கண்டனக்கடிதம்..


தமிழ் குழும முஸ்லிமுக்குப் பதில்

தமிழ் முஸ்லிம் குழுமத்தில் இருந்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மடல் எழுதியுள்ளனர். என் பெயரிட்டு அனுப்பிய அந்த மடலை உள்ளது உள்ள படி கீழே தந்து விட்டு அதற்கான பதிலை அதன் கிழே பதிவு செய்துள்ளேன்

தமிழ் முஸ்லிம் குழுமத்தின் மடல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

கண்ணியத்திற்குரிய அறிஞர் சகோ. பி ஜே அவர்களுக்கு தமிழ் முஸ்லிம் குழும மாடரேட்டர்கள் சார்பாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கடந்த 17-01-2010 அன்று உங்கள் தளத்தில் வெளியிட்ட செய்தியில் டி எம் பி குழுமம் மற்றும் மாடரேட்டர்கள் சம்பந்தமாக ஏராளமான தவறுகளை குறிப்பிட்டுள்ளீர்கள்.

குறிப்பாக அதன் மாடரேட்டர்களை மடையர்கள் என்று தேவையின்றி் வசைபாடியுள்ளீர்கள்.

எந்தவொரு இயக்க சார்பும் இன்றி நடுநிலையுடன் செயல்பட்டுவரும் எமது குழும மாடரேட்டர்களும் உறுப்பினர்களும் உங்கள் வசை மூலம் மனம் நொந்துள்ளனர். தவறான தகவலின் அடிப்படையில் நீங்கள் முடிவெடுத்து விட்டீர்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக சில தகவல்களைத் தரவேண்டியுள்ளது.

எங்கள் அலுவல்களுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி, குழுமத்தில் வரும் நூற்றுகணக்கான மெயில்களில் ஒவ்வொரு மெயில்களாகப் பார்வையிட்டு வெளியிடப்படும் மெயில்கள் எந்த ஒரு சாராரையும் சிறுமைப்படுத்துவதற்காக வேண்டி செய்வதாக இருந்தால், அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் அல்ல நாங்கள்! அனைத்து மறைவானவற்றையும் இதயங்களையும் சூழ்ந்து அறியும் இறைவன், எங்கள் இதயங்களையும் அறிவான். ஆகவே, அதை நாங்கள் இறைவனைத் தவிர யாரிடமும் நிரூபிக்கவேண்டியதுமில்லை! எங்கள் குழுமம் பற்றி தாங்கள் கொண்டுள்ள அபிப்பிராயம் மிக அபத்தமானதாகும் என்ற ஒன்றைத் தவிர எங்களுக்கு உங்களிடம் கூற வேறு ஏதும் இல்லை. நாம் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்.

மேற்படி எங்கள் குழுமத்தைப்பற்றிய சந்தேகம் உங்களுக்கு இன்னும் தொடர்வதாக இருந்தால், விரும்பினால் நீங்களும் இக்குழும மாடரேட்டர்களில் ஒருவராக சில காலம் நீங்கள் இணைந்து பணியாற்றும்படி அன்புடன் கோரிக்கை வைக்கின்றோம்.

மாடரேட்டர்களுக்கான சில அடிப்படை தகுதிகளையும் குழும உறுப்பினர்களின் நலனுக்காக வகுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளையும் அல்லாஹ்வுக்கு பயந்து நீங்கள் கடைபிடித்தால் மட்டும் போதுமானதாகும்.

இக்குழுமத்தின் ஆரம்ப காலங்களில் செயல்பட்ட மாடரேட்டர்கள் சிலர் அவர்கள் சார்ந்த இயக்கம் (ததஜ அல்ல) சார்பாகவும் சிலர் ததஜ வை தாக்கியும் செயல்பட்டுவந்த நிலையில் அவர்களை நீக்கிவிட்டு குழுமத்தை நடுநிலையுடன் நடத்தவேண்டும் என நாங்கள் தீர்மானித்ததும் அதற்காக மாடரேட்டர்களுக்கிடையில் மெயில் பரிமாற்றங்கள் நடந்ததும் (பழைய தேதியுடன்) இன்றளவும் எம்மிடம் பத்திரமாக உள்ளது! எவருக்கு எதிராகவும் செயல்படும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்பதைத் தெரிவிக்கவே இதனைக் கூறுகிறோம்.

ஆகவே இந்த மடல் பற்றிய உங்கள் அபிபிராயத்தை விரைவாக எங்களுக்கு தனி மெயிலில் தெரிவிக்கும்படி எதிர்பார்க்கின்றோம்.

வஸ்ஸலாம்


தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம்.


இந்த மடலுக்கு எனது பதில்

அன்புள்ள தமிழ் முஸ்லிம் குழுமத்தினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களின் தனிப்பட்ட முறையில் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்தது. தனிப்பட்ட முறையில் பதில் அளிக்குமாறு நீங்கள் கேட்டுக் கொண்டிருந்த போதும் நான் எனது அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலம் பதில் அளிப்பதே முறையாகும்.

உங்கள் மடலில் எந்த ஒன்றையும் நான் விட்டுவிடவில்லை. அப்படியே முழுமையாக வெளியிட்டுள்ளேன்.

இது குறித்து எனது விளக்கம்.

நான் தவறான தகவலின் அடிப்படையில் முடிவு எடுத்து விட்டதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். நான் இன்னும் உங்கள் குழுமம் குறித்து வாதத்தை எடுத்து வைக்கவில்லை. தொடரின் இறுதியில் தான் அதை எடுத்து வைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளேன்.

நான் எழுதிய அனைத்தும் நூறு சதவிகிதம் உண்மை.

நானே பல விதங்களில் சோதித்து ஆதாரங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு தான் முடிவுக்கு வந்துள்ளேன்.

1-நீங்கள் சில கடிதங்களை நிராகரிப்பதற்கு இரட்டை அளவு கோல் வைத்துள்ளீர்கள். எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் எழுதும் மடலை என்ன காரணம் கூறி நிராகரித்தீர்களோ அதே காரணத்துடன் அமைந்த எனக்கு எதிரான மடலை வெளியிட்டுள்ளீர்கள். இரண்டுக்கும் என்னிடம் ஆதாரம் உண்டு.

2-தவ்ஹீத் சகோதரர் எழுதும் மடலை வெளியிட மறுத்து விட்டு பின்னர் எங்கள் எதிரிகளிடம் கொடுத்து பதிலை வாங்கிக் கொண்டு அந்தப் பதிலுடன் சேர்த்தே வெளியிட்டதற்கும் ஆதாரம் உண்டு. அதாவது வெளியிட தகுதி இல்லாதது என்று நிராகரித்தது பின்னர் எப்படி வெளியிட தகுதி உள்ளதாக மாறியது? உங்கள் மறுப்புடன் சேர்த்தே வெளியிடும் போது விதி வளையும் மர்மம் என்ன?

3-எனது இணைய தளத்தின் லின்கை அனுப்பினால் வெளியிட முடியாது என்று மறுத்துள்ளீர்கள். காரணம் லின்க் வெளியிடுவதில்லை என்றீர்கள். ஆனால் பாக்கர் இயக்கத்தின் லின்கை மட்டும் வெளியிட்டீர்கள். இதற்கும் ஆதாரம் உள்ளது.

4-எங்களைத் தரக் குறைவாக எழுதப்படுவதை வெளியிட்டு விட்டு அதற்குப் பதில் எழுதினால் அதை வெளியிட முடியாது என்று மறுத்ததற்கு ஆதாரம் உண்டு.

5-எந்தத் தரக் குறைவான வார்த்தைகளை வெளியிட மறுத்தீர்களோ அதே தரக்குறைவான வார்த்தை எங்களுக்கு எதிராக இருந்தால் அதை வெளியிட்டதற்கு ஆதாரம் உள்ளது.

6-எங்கள் சகோதரர்கள் எழுதுவதை உங்கள் இஷ்டத்துக்கு வெட்டி வெளியிட்டதற்கும் ஆதாரம் உள்ளது.

7-செட்டப் விவாதம் ஏற்பாடு செய்து எங்களுக்கு எதிரான கருத்தை மட்டும் எழுதி விட்டு மறுப்பை இருட்டடிப்பும் செய்துள்ளீர்கள். அல்லது கற்பனைப் பாத்திரத்தை உருவாக்கி நாடகமாடினீர்கள்.

8-இதை விட உங்களின் நாணயமின்மையை சந்தேகமற நிரூபித்துக் காட்டும் ஆதாரங்களை நானே திரட்டிய பிறகு தான் இது போன்ற ஆபத்தானவர்களை அடையாளம் காட்டியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்னும் ஏராளம். அவை இறுதியில் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.

நீங்கள் மனம் நொந்துள்ளதாக எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் இது வரை நடந்து கொண்ட தவறான முறைக்காகத் தான் மனம் நோக வேண்டும்.

இது வரை உங்கள் குழுமத்தில் இயக்கங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட அனைத்தையும் ஒரு தடவை திரும்பிப் பாருங்கள்! ஒவ்வொரு இயக்கம் பற்றி எழுதியதையும் தவ்ஹீத் ஜமாஅத் பற்றி எழுதியதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! பல வருடங்களாக இரட்டை வேடம் போட்டு ஒரு இயக்கத்தினரை மட்டும் டேமேஜ் பண்ணிய போது எங்கள் மக்கள் எப்படி மனம் நொந்து போய் இருப்பார்கள். என்னைப் பற்றி எழுதப்பட்ட அனைத்தையும் ஒரு தடவை தொகுத்து வாசியுங்கள்!

பல வருடங்களுக்கு முன்பே உங்கள் வக்கிர எழுத்துக்களால் எனக்கு மன உளைச்சல் ஏற்படக் கூடாது என்பதற்காக tmb என்ற எழுத்தைத் தாங்கி வரும் எந்த மெயிலை யார் எனக்கு அனுப்பினாலும் எனது இன்பாக்ஸுக்கு வராமல் தடுத்துக் கொண்டேன்.

இந்த முஸீபத்தைப் படிக்கக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டேன் உங்கலைப் போன்றவர்களைக் கடுமையாக நான் விமர்சிப்பது சிலருக்கு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஏனெனில் அவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தவில்லை. அதன் வலி எனக்குத் தான் தெரியும்.

இதன் பின்னர் தான் நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யாதவர்களையும், நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யும் போது வாதங்களை விட வசை மொழிகளை அள்ளி வீசுவோரையும் மிகவும் ஆபத்தானவர்கள் என்று உணர்ந்து அடையாளம் காட்ட முனைந்தேன். அதற்காகவே இணைய தளத்துக்குள் என் கவனத்தைச் செலுத்தினேன். அதன் இறுதிக் கட்டமாகத் தான் உங்கள் விஷயத்தைக் கையில் எடுத்துள்ளேன்.

மடையர்கள் என்று நான் குறிப்பிட்டதற்குக் காரணம் உண்டு உங்களின் சுய ரூபத்தை அறிவதற்காக நான் முயற்சித்த போது இவ்வளவு எளிதாக ஆதாரங்களை அள்ளித் தருவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. அதை நான் விளக்கும் போது உண்மையை உணர்வீர்கள்

இது போல் அம்பலப்படுத்துவதை நீங்கள் விரும்பாவிட்டால் அதற்கேற்ப உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டால் அம்பலப்படுத்தும் அவசியம் எனக்கு இல்லை. களை எடுக்க வேண்டியவர்களைக் களை எடுத்து சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் நடந்து கொள்வோம் என்று சொன்னால் அதை நான் மதிப்பவனாவேன்.

அதை விடுத்து என்னிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளதை இல்லை என்று நீங்கள் கூறினால் நான் உடன் பட மாட்டேன்.

19.01.2010. 02:15

onlinepj.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக