செவ்வாய், 30 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 11)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 11


சஹாபாக்களிடமும் தவறுகள் ஏற்படும் (தொடர்ச்சி)


லுஹா தொழுகை :


முற்பகலில் லுஹா என்ற தொழுகை உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகையை நிறைவேற்றியதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.

எனது தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களை வலியுறுத்திக் கூறினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விட மாட்டேன். அவைகளாவன : ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது; லுஹா தொழுவது; வித்ரு தொழுத பின்னர் உறங்குவது என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1178, 1981

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தில் எனது வீட்டுக்கு வந்து குளித்து விட்டு எட்டு ரக்அத்கள் தொழுதனர். அந்த நேரம் லுஹா நேரமாக இருந்தது என்று அபூ தாலிபின் மகள் உம்மு ஹானி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 357, 3171, 6158

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் தொழுது மற்றவருக்கும் வலியுறுத்திய ஒரு தொழுகையை சில நபித் தோழர்கள் அடியோடு மறுத்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

நூல் : புகாரி 1128, 1177

நீங்கள் லுஹா தொழுவதுண்டா? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இல்லை என்றனர். உமர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். அபூபக்ர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்களா? என்று கேட்டேன். அதற்கவர் அவர்கள் தொழுததாக நான் நினைக்கவில்லை என்றார்கள். இதை முவர்ரிக் என்பார் அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 1175

நபி (ஸல்) அவர்களின் வணக்கம் தொடர்பான செய்தி அவர்களின் மனைவிக்கும் தெரியாமல் இருந்துள்ளது. நபி (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுவதில் தனித்து விளங்கிய இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெரியாமல் இருந்துள்ளதால் நபித்தோழர்கள் எந்த நடவடிக்கைக்கு நபிவழியை ஆதாரமாகக் காட்டுகிறார்களோ அதை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.
நபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவற்றையோ, சொன்னவற்றையோ பின்பற்றும் அவசியம் நமக்கு இல்லை என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.

நபித் தோழர்கள் எல்லாரும் 100 சதவிகிதம் நபி (சல்) அவர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்கவில்லை என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் சான்றாக நிற்கின்றன.
இது அவர்கள் தரப்பில் குற்றமுமில்லை. அவர்கள் வாழ்ந்த கால சூழலில் எல்லா நேரங்களிலும் நபி (சல்) அவர்கள் பேசுவதும் செய்வதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைந்து கொண்டே இருக்காது.
ஆனால், இன்று தகவல் தொடர்பு வசதிகள் பெருகியிருக்கும் காலத்தில் வாழ்கிற நமக்கு லுஹா தொழுகையை நபி (சல்) அவர்கள் அனுமதித்த செய்தியும் சேர்த்து கிடைக்கும் போது அது தான் நாம் பின்பற்ற வேண்டியது.

சஹாபாக்களுக்கு சில விஷயங்கள் தெரியாமலும் இருந்திருக்கின்றன என்று சொல்வது அவர்களை இழிவுப்படுத்துவதோ திட்டுவதோ ஆகாது. ஏனெனில், அவர்கள் சில விஷயங்களை அறியாமல் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் சுயமாக சொல்லவில்லை, நாமும் நம்மை எதிர்க்கிறவர்களும், அனைத்து முஸ்லிம்களும் ஏகமனதாய் அங்கீகரிக்கக் கூடிய ஹதீஸ் நூற்களில் தான் அவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

எனவே, இது போன்ற விமர்சனங்களில் எள்ளளவும் அர்த்தமில்லை.



பிறரது இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டல் :

அபூ மூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஏதோ வேலையில் இருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா (ரலி) திரும்பி விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது வேலையை முடித்த பின் ``அபூ மூஸாவின் குரல் கேட்டதே! அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் எனக் கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார் எனக் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்து வரச் செய்து உமர் (ரலி) விசாரித்தார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் ``இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது எனக் கூறினார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் ``இதற்கான ஆதாரத்தை நீர் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் அன்ஸாரிகள் கூட்டத்தில் வந்து இதைக் கூறினார்கள்.

வயதில் சிறியவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர யாரும் உமக்காக இந்த விஷயத்தில் சாட்சி கூற மாட்டார்கள் எனக் கூறினார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்களை அழைத்து வந்து அபூ மூஸா (ரலி) சாட்சி கூற வைத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ``கடை வீதிகளில் மூழ்கிக் கிடந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்தச் செய்தி எனக்குத் தெரியாமல் போய் விட்டதே எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 2062, 6245, 7353

உமர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர் என்றாலும் அவர்களால் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை. வியாபாரம் தொடர்பான பணிகளில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளனர் என்பதற்கு அவர்களே வாக்குமூலம் தந்து விட்டனர்.

இந்த நிலையில் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் நபிவழியில் தான் அமைந்திருக்க வேண்டும் என்று வாதிடுவது சரியாகுமா?
என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


தயம்மும் சலுகையை மறுத்த இப்னு மஸ்வூத்


மிகச் சிறந்த நபித்தோழர்களான உமர் (ரலி) , இப்னு மஸ்வூத் ஆகியோருக்கு குளிப்புக்காக தயம்மும் செய்வதை அறியாமல் இருந்துள்ளார்கள்.

நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) , அபூ மூஸா (ரலி) ஆகயோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``ஒருவருக்கு குளிப்பு கடமையாகி தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று அப்துல்லாஹ் பின் மவூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார் கள். தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்ன? என்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த 5:6 வசனத்தை என்ன செய்யப் போகிறீர்? என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் ``நாம் இதை அனுமதித்தால் ஒருவர் குளிர் அடிக்கும் போது கூட தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 346, 347

உளுச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்து தொழலாம். அது போல் குளிப்பு கடமையாகி குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிப்பதற்குப் பகரமாகவும் தயம்மும் செய்யலாம். இது இன்றைக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் தெரிந்து வைத்திருக்கின்ற சட்டமாகும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதனை மறுக்கிறார்கள். அபூ மூஸா (ரலி), இப்னு மவூதுக்கு எதிராக ஒரு நபி மொழியையும், ஒரு திருக்குர்ஆன் வசனத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

தக்க ஆதாரங்கள் கிடைக்காத நேரத்தில் தவறான தீர்ப்பு அளிப்பது மனிதர்களின் பலவீனம் என்று எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய தவறுகள் நிகழாத மனிதர்களை நாம் காண முடியாது.

ஆனால் மேற்கண்ட செய்தியில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் தக்க ஆதாரங்களை அபூ மூஸா (ரலி) எடுத்துக் காட்டிய பிறகு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தமது கருத்தை உடனே மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தமது கருத்துக்கு ஆதரவான ஆதாரத்தை எடுத்துக் காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தக்க ஆதாரத்தை அறிந்த பின்பும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அனுமதி அளித்தால் சாதாரண குளிருக்குப் பயந்து தயம்மும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது அல்லாஹ் அனுமதித்த ஒன்றை தவறான காரணம் கற்பித்து இப்னு மஸ்வூத் (ரலி) மறுக்கிறார்கள்.

சொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித் தோழரிடம் காணப்பட்டால் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? இது போல இன்னும் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா?
சலுகையை தவறாக பயன்படுத்தி விடுவார்கள் என்கிற நல்ல நோக்கம் இதற்கு பின்னால் இருக்கின்றது என்கிற வகையில் அலலஹ் அவர்களை மன்னிப்பான். ஆனால், நாம் எப்படி இதை மார்க்க ஆதாரமாக கொள்வது?
குளிர் அடித்தால் தயம்மும் செய்து கொள்ளலாம் என்பதல்லவா மார்க்கம்?
அதற்கு மாற்றமாக, நல்லெண்ணத்தை மனதில் கொண்டே கூட ஒரு சஹாபி ஒரு சட்டத்தினை வகுத்தாலும் நாம் அதை ஏற்க முடியாது தானே?


பிளேக் ஏற்பட்ட ஊருக்குள் நுழைவது

உமர் ரலி) அவர்கள் சிரியாவை நோக்கிப் பயணமானார் கள். சரக் என்ற இடத்தை அடைந்த போது அபூ உபைதாவும், அவரது சகாக்களும் வந்து சிரியாவில் பிளேக் ஏற்பட்டதாகக் கூறினார்கள். இதற்கு என்ன செய்வது? என்று முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளிடம் உமர் (ரலி) ஆலோசனை கேட்ட போது யாருக்கும் இது பற்றிய விளக்கம் தெரியவில்லை. எனவே சிரியாவுக்குச் செல்ல உமர் (ரலி) ஆயத்தமானார்கள். வெளியூர் சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் திரும்பி வந்தார்கள். உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிய நபிமொழி தமக்குத் தெரியும் என்றார்கள். ஒரு ஊரில் பிளேக் நோய் வந்துள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கும் ஊரில் பிளேக் ஏற்பட்டால் ஊரை விட்டு வெளி யேறாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு திரும்பி விட்டார்கள்.


நூல் : புகாரி 5729

சில விஷயங்கள் ஒரே ஒரு நபித்தோழருக்கு மட்டும் தெரிந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் இந்த நபி மொழியை எடுக்காட்டியிருக்கா விட்டால் உமர் (ரலி) உட்பட நபித்தோழர்கள் சிரியாவுக்குச் சென்றிருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.

ஆக, ஒரு செய்தியை ஒரு சஹாபி நபி (சல்) அவர்கள் வாயிலாக அறிகிறார் என்றால் அவர் தாமாக முன்வந்து ஒவ்வொருவரிடம் சென்று நான் இன்று ஒரு ஹதீஸை கேட்டேன், இன்று ஒரு ஹதீஸை கேட்டேன் என்று சொல்லிக் கொண்டே இருக்க மாட்டார்.
மாறாக, அவர் தமது வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்கும் போது அது தொடர்பான ஹதீஸ்களை நினைவில் கொண்டு செயல்படுவார், பிறருக்கும் அறிவுரை கூறுவார்.

இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசுதல்

ஹஜ், உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்த பின் நறுமணம் பூசக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம். இஹ்ராம் அணிவதற்கு முன்னர் நறுமணம் பூசி, அந்த நறுமணம் நீங்குவதற்கு முன் இஹ்ராம் அணியலாமா?

இது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது இவ்வாறு செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்து வந்தார்கள். இவ்வாறு முடிவு செய்வதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இஹ்ராம் அணிந்த பின்னர் நறுமணம் பூசக் கூடாது என்பதால் முன்னர் பூசிய நறுமணமும் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் கருதியதே இதற்குக் காரணம்.

இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது ``இப்னு உமருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசி விடுவேன். பின்னர் தமது மனைவியரிடம் செல்வார்கள். பின்னர் அவர்கள் மீது நறுமணம் வீசும் நிலையில் காலையில் இஹ்ராம் அணிவார்கள் என்று விடையளித்தார்கள்.

பார்க்க : புகாரி 267, 270, 1754

நேரடி ஆதாரங்கள் இல்லாத போது நபித் தோழர்கள் சுயமாகக் கருத்து கூறியுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகும் போது நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று எப்படிக் கூற முடியும்?

உமர் (ரலி) அவர்கள் சொன்னது அவரது சொந்த கருத்து என்று பளிச்சென்று தெரிகிறது.
அதே சமயம, ஆயிஷா (ரலி) அவரக்ளோ வஹீ செய்தியை கூறுகிறார்கள்.
இப்போது, நாம் பின்பற்ற வேண்டியது உமர் (ரலி) அவர்களது சொந்த கருத்தையா அல்லது அலலஹ்வின் வஹீயையா? என்பதே நம் முன்னால் நிற்கும் கேள்வி.


ஒரே நேரத்தில் கூறப்படும் மூன்று தலாக்

மனைவியைப் பிடிக்காத கணவர்கள் தாமாகவே மனைவியை விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆண்களைப் பொருத்த வரை இவ்வாறு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

முதல் தடவை விவாக ரத்து செய்து, மனைவிக்கு மூன்று மாதவிடாய் முடிவதற்குள் மனமாற்றம் ஏற்பட்டால் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மூன்று மாதவிடாய் கடந்து விட்டால் மனைவி சம்மதித்தால் மீண்டும் அவர்கள் தமக்கிடையே திருமணம் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது தடவை விவாகரத்து செய்தாலும் மேற்கண்ட அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம்.

மூன்றாவது தடவை விவாகரத்து செய்தால் அதன் பின்னர் மனைவியுடன் சேரவோ, திருமணம் செய்யவோ அனுமதி இல்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மற்றொருவனை மணந்து அவனும் விவாகரத்து செய்திருந்தால் முதல் கணவன் அவளைத் திருமணம் செய்ய அனுமதி உண்டு.

ஒரு கணவன் முதல் தடவை விவாகரத்து செய்யும் போது முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அது மூன்று தடவை தலாக் கூறியதாக ஆகாது. மூன்று தலாக் என்று கூறினாலும், மூவாயிரம் தலாக் என்று கூறினாலும் தனக்கு இஸ்லாம் வழங்கிய ஒரு வாய்ப்பைத் தான் அவன் பயன்படுத்தியுள்ளான். இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறை இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இது தான் நடைமுறை என்று தெரிந்திருந்தும் உமர் (ரலி) அவர்கள் அதை மீறி நபிவழிக்கு மாற்றமான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை ஹதீஸ் நூலில் நாம் காண்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும், உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளும் மூன்று தலாக் எனறு கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. நிதானமாக முடிவு செய்யும் விஷயத்தில் மக்கள் அவசரப்படுகிறார்கள். எனவே மூன்று தலாக் என்று கூறுவதை மூன்று தலாக் என்றே சட்டமியற்றினால் என்ன? என்று கூறி அதை உமர் (ரலி) அவர்கள் சட்டமாகவும் ஆக்கினார்கள்.

நூல் : முஸ்லிம் 2689

ஆக, மூன்று முறை சொன்னாலும், ஏன், ஆயிரம் முறை சொன்னாலும் அது ஒரு தடவை சொன்னதாக தான் கருதப்படும் என்கிற கொள்கைக்கும், மூன்று முறை சொன்னாலும் அது மூறாகவே முடிக்கப்பட்டு விடும் என்று சொல்வதும் பாரதூரமான வேறுபாடு.

எனவே தான் "தடவை" என்கிற சொல்லாக்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு, ஒருவர் 40 இட்லியை ஒரே நேரத்தில் உண்ணுகிறார்.
இவர் உண்டது 40 இட்லி என்றாலும் இவர் எத்தனை முறை அல்லது எத்தனை தடவை உண்டார்? என்று கேட்டால் ஒரு தடவை என்று தான் சொல்வோம்.

அதே சமயம், இன்னொருவரோ ஒரு முறை கயை கழுகி விட்டு 2 இட்லி சாப்பிடுகிறார், பின் எழுந்து சென்று கையை சுத்தம் செய்து விடுகிறார்,
பிறகு மீண்டும் அமர்ந்து 2 இட்லி சாப்பிடுகிறார், மீண்டும் கையை கழுகி விடுகிறார்.
இப்படி மூன்று முறை அவர் செய்தால், அவர் சாப்பிட்டது மொத்தமாக 6 இட்லி தான் என்றாலும், அவர் எத்தனை தடவை சாப்பிட்டார்? என்று கேட்டால் மூன்று தடை என்று சொல்வோம்.
ஆக, ஒரு தடவை செய்தல் என்றால் அதற்கென்று துவக்கமும் முடிவும் இருக்க வேண்டும்.
உண்பதற்கு முன் கை கழுகுதல் துவக்கம் என்றால், உண்ட பிறகு எழுந்து சென்று கை கழுகி விடுவது அதனுடைய முடிவு.

அது போல், ஒரு தடவை தலாக் விடுவது என்றால், தலாக் விடுவதில் துவங்கி மீண்டும் அவளை மனைவியாக கருதி சேர்ந்து வாழ்வது தான் அதன் முடிவு.

இது தான் நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலாக இருந்தது.
உமர் (ரலி) அவர்கள், இந்த சட்டத்தை மக்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்கிற காரணத்திற்காக வேண்டுமென்றே இதை மாற்றுகிறார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரியாமல் சுயமுடிவு எடுப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல் இது தான் என்று தெரிந்து கொண்டே அதை ரத்துச் செய்வது பாரதூரமானது என்பதில் சந்தேகம் இல்லை. உமர் (ரலி) போன்றவர்களிடமே சில நேரம் இது போன்ற முடிவுகள் வெளிப்பட்டது என்றால் இதை ஏற்று நபிவழியைப் புறக்கணிக்க முடியுமா?

நபிவழியை அறிந்து கொண்டே அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்திருக்கும் போது நபித் தோழர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆகும்?



தொடரும், இன்ஷா அல்லாஹ்








திங்கள், 29 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 10)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 10



சஹாபாக்களை பின்பற்றுவது அவசியமா? (தொடர்ச்சி) :


கலிஃபாக்களை பின்பற்றுதல் :

சஹாபாக்களின் கூற்றும் மார்க்கம் தான் என்று கூற அவர்களை பின்பற்றக் கூடிய கூட்டமானது, தங்கள் கொள்கையை நியாயப்படுத்துவதற்காக சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
அவற்றை நாம் ஒவ்வொன்றாக காண்போம்.

எனது சுன்னத்தை பின்பற்றுங்கள், எனது கலிஃபாக்களின் சுன்னத்தை பின்பற்றுங்கள் என்பதாக நபி (சல்) அவர்கள்
கூறுவதாக திர்மிதி 2600, அபூ தாவூத் 3991, இப்னு மாஜா 42, 43, முனத் அஹ்மத் 16519, 16521, 16522, தாரிமி 95 மற்றும் பல நூல்களில் ஹதீஸ்கள் பதியப்பட்டதை எடுத்துக் காட்டி, சஹாபாக்களை பின்பற்றலாம்,சஹாபாக்களின் வழியும் மார்க்கம் தான் என்று வாதம் வைக்கின்றனர்.

சஹாபாக்களின் கூற்றை மார்க்கமாக கருதுவதற்கு இந்த ஹதீஸ் இடம் தருகிறதா என்பதை பார்ப்பதற்கு முன்னால், இவர்கள் காட்டும் ஆதாரத்திற்கும் இவர்கள் கூறும் கொள்கைக்கும் எந்த தொடர்பாவது இருக்கிறதா என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும்.

கலிஃபாக்களின் வழியும் மார்க்கம் என்று இந்த ஹதீஸ் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், கலிஃபாக்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று இவர்களது கொள்கையை இவர்கள் மாற்றி அறிவித்து விட்டு அதன் பிறகு தான் இந்த ஹதீஸை சான்றாக எடுத்து வைக்க வேண்டும்.

ஒட்டு மொத்த சஹாபாக்களின் சொல்லும் மார்க்கம் என்று ஒரு பக்கம் கூறி விட்டு, அதற்கு ஆதாரம் என்று சொல்லி நான்கு கலிஃபாக்களை பின்பற்றுங்கள் என்கிற ஹதீஸை காட்டுவது இவர்களது கொள்கைக்கே எதிரானது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சரி, இந்த ஹதீஸ் கலிஃபாக்களை மார்க்க அடிப்படையில் பின்பற்றுமாறு தான் நமக்கு சொல்கிறதா?
ஹதீஸின் ஒரு பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைத்து வியாக்கானம் கொடுப்பதால் நேர்ந்த விளைவு இது.
இந்த ஹதீஸை முழுமையாக வாசிக்கும் போது, கண்ணை மூடிக் கொண்டு கலிஃபாக்களை மார்க்க அடிப்படையில் பின்பற்றுவதை இது சொல்லவில்லை என்பதை எளிதில் புரியலாம்.

இந்த ஹதீஸில், நபி (சல்) அவர்கள் வசியத் செய்தது போன்று இந்த சமூகத்திற்கு சில எச்சரிக்கைகளை இடுகிறார்கள்.

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், செவியுறுங்கள், கட்டுப்படுங்கள், அவர் அபிசீனிய நாட்டு அடிமையாக இருந்தாலும் சரியே, என்று முதலில் கூறுகிறார்கள்.

இதன் பொருள் என்ன? இங்கு குறிப்பிடப்படும் "கட்டுப்படுதல்" என்பது மார்க்கத்தில் கட்டுப்படுவதை குறிக்காது. மாறாக, ஆட்சியாளருக்கு கட்டுப்படுதலை, இஸ்லாமிய அரசுக்கு கட்டுப்படுதலை தான் இது குறிக்கும்.

நாட்டின் ஜனாதிபதிகள் தான் கலீபாக்கள் எனப்படுகின்றனர். ஒருவர் முஸ்லிம்களால் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு சிதைந்து போய் விடும். ஜனாதிபதி என்ற முறையில் மார்க்க சம்மந்தமில்லாத நிர்வாக விஷயங்களில் அவர்கள் சில வழிமுறைகளை மேற்கொண்டால் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படிப் பொருள் கொண்டால் தான் மார்க்கம் முழுமையாகி விட்டது என்ற வசனத்திற்கும், வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த வசனங்களுக்கும் பொருள் இருக்கும்.


இதை சொல்லி விட்டு தொடர்ந்து அவர்கள் சொல்லும் போது,
நிறைய கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள், மார்க்கம் என்கிற பெயரில் புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் வழிகேடு, உங்களுக்கு ஏதேனும் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எனது சுன்னத்தையும் நேர்வழி பெற்ற கலிஃபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்கிறார்கள்.

மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவை அனைத்தும் வழிகேடுகள் என்ற வாக்கியத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் எனும் போது,
மார்க்க விஷயம் இல்லாத மற்ற விஷயங்களில் தான் நேர்வழி பெற்ற கலீபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட வாக்கியம் தெளிவுபடுத்தி விடுகிறது.


அபுதாவூதில் பதியப்பட்ட இதே ஹதீஸில், கலிஃபாக்களை பின்பற்றுங்கள் என்று கூறி விட்டு, புதிய காரியங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன் எனவும் சேர்த்து சொல்கிறார்கள்.

இதிலிருந்து தெரிவது, கலிஃபாக்கள் நேர்வழி பெற்றவர்கள், அவர்களை பின்பற்றலாம். எதுவரை? மார்க்கத்தில் புதிதாக ஏதும் உருவாகாதவரை பின்பற்றலாம்.
எப்போது புதிதாக ஒரு விஷயம் மார்க்க அடிப்படையில் உருவாகுமோ, அதை விட்டும் நாம் விலகி விட வேண்டும்.
ஆக, நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி கலிஃபாக்கள் செய்வதை மட்டும் தான் நாம் பின்பற்ற முடியும் என்பதற்கு தான் பல்வேறு எச்சரிக்கைகளையும் இணைத்து இந்த அறிவுரையை நபி (சல்) அவர்கள் சொல்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், எனது சுன்னத்தையோ அல்லது கலிஃபாக்களின் சுன்னத்தையோ பின்பற்றுங்கள் என்று அவர்கள் சொல்லியிருந்தால் தான் கலிஃபாக்களையும் தனியாக நாம் பின்பற்றலாம், எந்த நிபந்தனையுமின்றி பின்பற்றலாம் என்று கருத முடியும்.

எனது சுன்னத்தையும் கலிஃபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்று சொல்லும் போது, நபியின் சுன்னத் தான் கலிஃபாக்களின் சுன்னத், கலிஃபாக்களின் சுன்னத்தில் ஏதேனும் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் இருக்குமானால் நபியின் சுன்னத்தோடு உரசிப் பார்த்து விட வேண்டும்.

இது போக, நாம் இதுவரை கண்டு வந்த இஸ்லாத்தின் அடிப்படையான வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதையும், நபி (சல்) அவர்களுக்கு தவிர வேறு எவருக்கும் வஹீ அருளப்படாது என்பதையும் சாராம்சமாக கொண்டு இதை அணுகும் போது, அவைகளுக்கு முரணில்லாத வகையில் தான் இந்த ஹதீஸை நாம் புரிய வேண்டும்.

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து ``அபீஸீனிய அடிமை என்றாலும் கட்டுப்பட்டு நடங்கள் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.

இப்னு மாஜா 43, அஹ்மத் 16519

ஆட்சித் தலைவர் அபீஸீனிய அடிமை என்றாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து நிர்வாக விஷயங்களில் கட்டுப்பட்டு நடப்பது பற்றியே கூறியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.

நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது நான்கு கலீபாக்களைக் குறிக்கும் என்ற தவறான கருத்தும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது. நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை. அபீஸீனிய அடிமையாக இருந்தாலும் கட்டுப்படுங்கள் எனக் கூறினால் கியாமத் நாள் வரை ஆட்சி செய்யும் கலீபாக்கள் அனைவருக்கும் மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் கட்டுப்பட்டு நடங்கள் என்பது தான் இதன் பொருள்.



மார்க்க விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு கட்டுப்படுதல் என்பது கிடையாது.


மார்க்க சம்மந்தமில்லாத விஷயத்தில் மட்டும் நிர்வாகத் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதற்குத் தான் அந்த உதாரணத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

மார்க்கத்தில் வேறு யாரையும் பின்பற்றி நடக்கும் நிலையில் நான் உங்களை விட்டுச் செல்லவில்லை என்று கூறிவிட்டு நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்றுங் கள் எனக் கூறினால் அது நிர்வாக விஷயத்தைத் தான் குறிக்குமே தவிர மார்க்க விஷயத்தை அறவே குறிக்காது.


அபுபக்கர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டுமா?


மற்றோரு ஆதாரத்தையும் இவர்கள் சஹாபாக்களை பின்பற்றுவதற்கு சான்றாக முன் வைப்பர்.

எனக்குப் பின்னர் அபூபக்ர், உமர் ஆகிய இருவரையும் பின்பற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியையும் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த ஹதீஸ் திர்மிதி 3595, 3596, 3735, 3741, இப்னு மாஜா 94, அஹ்மத் 22161, 22189, 22296, 22328 மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனக்குப் பிறகு வரக்கூடிய இருவரை பின்பற்றுங்கள் என்பதாக அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரைக் குறிப்பிட்டு நபி (சல்) அவர்கள் சொல்வதாக இப்னுமாஜா, திர்மிதி உள்ளிட்ட பல்வேறு நூற்களில் பதிவாகியிருக்கும் ஹதீஸ் சஹாபாக்கள் அனைவரையும் பின்பற்றுவதற்கு சான்றா?

இதுவும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, இரண்டே இரண்டு சஹாபாக்களை பின்பற்றுவதைப் பற்றி தான் பேசுகிறது, எனவே, இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டக்கூடியவர்கள், இவ்விரண்டு சஹாபாக்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதாக தங்கள் நிலையை மாற்றி விட்டு அதன் பிறகு இதை முன்வைக்கட்டும்.
 சஹாபாக்கள் அனைவரையும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.

இந்த இருவரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றச் சொல்லும் ஆதாரம் இல்லை என்பதால் இவ்விருவரை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வாதம் செய்தால் மட்டுமே இதை ஆதாரமாக எடுத்துக் காட்ட முடியும்.

மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் இவ்விருவரையும் சிறந்த தலைவர்களாக ஏற்று நடங்கள் என்று தான் இதற்கும் பொருள் கொள்ள முடியும்.

அடுத்த ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுத் தான் அபூ பக்ரை மக்கள் கலீபாவாகத் தேர்வு செய்தனர். இது போன்ற விஷயங்களைத் தான் இது குறிக்குமே தவிர மார்க்க விஷயங்களில் பின்பற்றுவதைக் குறிக்காது.

தவிர, இதிலும் நாம் முந்தைய ஹதீஸுக்கு தந்த அதே புரிதலை தான் மேற்கொள்ள வேண்டும்.
வஹீ மட்டுமே மார்க்கம் என்பது இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம். அல்லாஹ் அருளியதை மட்டுமே மார்க்கமாக கருத வேண்டும் என்று பல்வேறு இடங்களில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
இந்த அடிப்படைக்கு எதிராக, சஹாபாக்கள் எதை சொன்னாலும் பின்பற்றுங்கள் என்கிற சித்தாந்ததை நிச்சயம் நபி (சல்) அவர்கள் சொல்ல மாட்டார்கள்.

மார்க்கம் முழுமையாகி விட்டது. வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்பன போன்ற எண்ணற்ற ஆதாரங்களுக்கு முரண்படாத வகையில் தான் இதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

எனக்குப் பிறகு மார்க்கம் என்று எதை நீங்கள் உருவாக்கினாலும் அது ரத்து செய்யப்படும் என்கிற நபியின் எச்சரிக்கையையும் இந்த தருணத்தில் சேர்த்தே சிந்திக்கும் போது, கலிஃபாக்கள் என்றாலும், சஹாபாக்கள் என்றாலும், இஸ்லாத்திற்கு மாற்றமான கூற்றுகள் வராத வரை தான் அவர்களை பின்பற்றுதல் ஆகுமாகும் என்பது தெளிவாகப் புரிகிறது.


சஹாபாக்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் ?

மற்றுமொரு ஹதீஸை இவர்கள் முன்வைப்பார்கள்.

என் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள், அவர்களில் நீங்கள் யாரை பின்பற்றினாலும் வெற்றி பெறுவீர்கள்.

இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட பலகீனமான ஹதீஸாகும்.

முனத் அப்துபின் ஹுமைத் என்ற நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு உமர் (ரலி) வாழியாக இதை ஹம்ஸா அன்னஸீபீ என்பவர் அறிவிக்கிறார். இவர் முற்றிலும் பலவீனமானவர்.

தாரகுத்னீ என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபிர், (நபித் தோழரான ஜாபிர் அல்ல) ஜமீல் பின் ஸைத் இவ்விருவரும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று தாரகுத்னியே கூறுகிறார். இதுவும் பலவீனமானதாகும்.

இதன் அறிவிப்பாளரான அபுபக்கர் பஸ்ஸார் என்பவர் இதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி சொல்லும் போது, இது மிகவும் பொய்யான ஹதீஸ், ஆதாரப்பூர்வமான நபர்கள் வழியாக இது வரவில்லை, இட்டுக்கட்டப்பட்ட மோசமான ஹதீஸ் என்று சொல்லியிருக்கிறார்.
இந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று அபூ பக்ர் அல்பஸார் கூறுகிறார். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கற்பனையான செய்தியாகும் என்று இப்னு ஹம் கூறுகிறார்.

இன்னும் சொல்லப்போனால், இந்த ஹதீஸை தங்களுக்கு சாதகமாக முன்வைக்கும் கூட்டத்தார் கூட இது பலகீனம் தான் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள்.

தவிர, இதன் கருத்தும் சரியாக பொருந்தும் வகையில் இல்லை. ஒரு சில நட்சத்திரங்கள் வேண்டுமானால் கடல் பயணத்தின் போது வழி காட்டும் என்றாலும், ஒட்டு மொத்தமாக எல்லா நட்சத்திரங்களும் நமக்கு வழி காட்டவா செய்கிறது? இல்லை.

அப்படியிருக்க, நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு வழிகாட்டியோ அது போல் ஒவ்வொரு நபித்தோழரும் வழிகாட்டுவார்கள் என்ற உவமையும் தவறாக அமைந்துள்ளது.

எந்த நட்சத்திரத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், அவை வழிகாட்டும் என்கிற கருத்துப் பட நபி (சல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.
கருத்தின் அடிப்படையிலும் இந்த ஹதீஸ் ஏற்கத்தகுந்ததல்ல !



சஹாபாக்களிடமும் தவறுகள் ஏற்படும் :


சஹபாக்களின் சிறப்பையும், அவர்கள் கொண்டிருக்கும் இறையச்சத்தையும் நம்மால் குறைத்து மதிப்பிடவே முடியாது.
அவர்களைப் பின்பற்றக் கூடாது என்று சொல்வது அவர்களது அந்தஸ்த்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஆகாது.

அவர்களை மதிப்பது என்பது வேறு, அவர்களைப் பின்பற்றுவது என்பது வேறு. இந்த வேறுபாட்டை நாம் தெளிவாக புரிந்தால் தான் இஸ்லாத்தின் அடிப்படையான வஹீ மட்டுமே மார்க்கம் என்கிற கொள்கையில் நாம் தெளிவாக நிற்க முடியும்.

சஹபாக்கள் என்றாலும் அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும், அவர்களிடமும் தவறான மார்க்க புரிதல் ஏற்பட்டிருக்கின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகளை நம்மால் காண முடிகிறது.

உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை இங்கு காணலாம்.

தமத்து ஹஜ் :

உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி, உம்ராவை முடித்து விட்டு இஹ்ராம் இல்லாத நிலையில் மக்காவில் தங்கிக் கொண்டு ஹஜ்ஜுடைய காலம் வந்ததும் மற்றொரு இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தமத்துவு ஹஜ் எனப்படுகிறது.

ஆனால், இந்த தமத்து ஹஜ் முறையை உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சி காலத்தில் தடை செய்கிறார்கள். அல்லது தவறாக விளங்கிக் கொண்டு இதை எதிர்த்துள்ளார்கள்.


தமத்துவு ஹஜ் பற்றிய வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் இறங்கியது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தமத்துவு முறையில் ஹஜ் செய்தோம். இதை ஹராமாக்கி அல்லது தடை செய்து எந்த வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்படவில்லை. மனிதர்கள் தம் விருப்பம் போல் எதையோ (இதற்கு மாற்றமாக) கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல் : புகாரி, 1572, 4518

தமத்துவு முறையில் ஹஜ் செய்வதையும், ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் தடை செய்தார்கள். இதைக் கண்ட அலி (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். ``எவரது சொல்லுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விட்டுவிடுபவனாக இல்லை என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் அல்ஹகம்,

நூல் : புகாரி, 1563

இதைப் பற்றி சிரியாவை சேர்ந்த ஒருவர் இப்னு உமர் ரலி) அவர்களிடம் வினவிய போது, தமத்து ஹஜ் இஸ்லாம் அனுமதித்த ஒன்று எனக் கூறுகிறார்கள்.


உங்கள் தகப்பனார் இதை தடை செய்திருக்கிறார்களே என்று மீண்டும் கேட்ட போது, அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய விடை தான் கவனிக்கத்தக்கது.
நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ஒன்றை அனுமதிக்கிறார்கள், அதை எனது தகப்பனார் தடுக்கிறார். இப்போது, இருவரில் யாரை நான் பின்பற்ற வேண்டும் என்பதற்கு நீ பதில் சொல், என்று அவரிடம் திருப்பிக் கேட்கிறார்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள்.
நபி (சல்) அவர்களை தான் பின்பற்ற வேண்டும் என்று அவர் பதில் சொல்கிறார்கள்.

தமத்துவு முறையில் ஹஜ் செய்வது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சிரியாவாசி கேட்டார். அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர்கள் விடையளித்தார்கள். உங்கள் தந்தை (உமர்) அவர்கள் அதைத் தடுத்திருக்கிறாரே அது பற்றிக் கூறுங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``என் தந்தை ஒரு காரியத்தைத் தடுக்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்துள்ளனர் என்றால் என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ``அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையே பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள் என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாலிம் பின் அப்துல்லாஹ்,

நூல் : திர்மிதி 753




வஹீ மட்டும் தான் மார்க்கம் என்பதில் சஹாபாக்கள் எந்த அளவிற்கு தெளிவான புரிதலில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.
சஹாபாக்களை பின்பற்றலாம் என்கிற தவறான கொள்கைக்கு சஹபாக்களே மறுப்பு தரக்கூடிய ஹதீஸ் இது.
நபியின் சுன்னத்தோடு ஒரு சஹாபியின் கூற்று மோதினால், நாம் பின்பற்ற வேண்டியது நபியை தான். சஹாபியின் கூற்றை ஏற்கக் கூடாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் விளக்கமளிக்கிறார்கள் என்றால் உமர் (ரலி) அவர்களை இப்னு உமர் திட்டி விட்டார் என்று இவர்கள் சொல்வார்களா?
சஹாபாக்களை இப்னு உமர் இழிவுப்படுத்தி விட்டார் என்று இதற்கு அர்த்தமா?

ஒரு போதும் கிடையாது.
நாம் என்ன கொள்கையை இன்றைக்கு பிரச்சாரம் செய்கிறோமோ அதை தான் இந்த ஹதீஸின் வாயிலாக இப்னு உமர் (ரலி) அவர்களும் தெரிவிக்கிறார்கள்.


 ருகூஹ்வின் போது கைகளை வைக்க வேண்டிய இடம் :


இதே இப்னு உமர் (ரலி) அவர்கள் தொடர்பாக மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.
துவக்க காலத்தில் தொழுகையில் செய்யப்படும் ருகூஹ்வின் போது கைகள் இரண்டையும் தொடைகளுக்கிடையே வைத்துக் கொள்ளும் வழக்கம் தான் இருந்தது,
அதை நபி (சல்) அவர்கள் மாற்றி முட்டுக்கால்களில் வைக்கும் சட்டத்தை கொண்டு வந்தார்கள்.


என் தந்தையின் அருகில் நான் தொழுதேன். அப்போது என் இரு கைகளையும் சேர்த்து அதை என் தொடைகளுக்கிடையே வைத்தேன். என் தந்தை அதைத் தடுத்தார். ``நாங்கள் இப்படிச் செய்து வந்தோம். பின்னர் தடுக்கப்பட்டோம். எங்கள் கைகளை முட்டுக்கால் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டோம் என்றும் என் தந்தை கூறினார்.

அறிவிப்பவர் : முஅப் பின் ஸஅத்,

நூல் : புகாரி 790

ஆனால், நபி (சல்) அவர்கள் மரணித்த பிறகும், இவ்வாறு மாற்றப்பட்ட சட்டத்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிந்திருக்கவில்லை.
தொடைகளுக்கிடையே கைகளை வைத்து தொழுது விட்டு இப்படி தான் நபி (சல்) தொழுது காட்டினார்கள் என்று சொன்னார்கள்.


அல்கமா, அல்அஸ்வத் ஆகிய நாங்கள் இருவரும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். ருகூவு செய்யும் போது எங்கள் இரு கைகளை முட்டுக் கால்கள் மீது வைத்தோம். அப்போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் எங்கள் கைகளைத் தட்டி விட்டார்கள். பின்னர் தமது கைகளைச் சேர்த்து அதைத் தொடைகளுக்கிடையே வைத்தார்கள். தொழுது முடிந்ததும், ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தனர் என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்போர் : அல்கமா, அல்அவத்

நூல் : முஸ்லிம் 831


ஆக, இதிலிருந்து நமக்கு விளங்குவது யாதெனில், சஹாபாக்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அனுப்ப மாட்டான், அவர்களிடம் ஏற்படும் பிழைகள், கவனக்குறைவுகள் போன்றவை அல்லாஹ்வால் சரி செய்யப்படாது, எனினும், அவர்களது தியாகத்தாலும், இறையச்சத்தாலும், ஈமானிய உறுதியினாலும், அத்தகைய சிறு குறைகளும் அல்லாஹ்வால் மன்னிக்கப்படும் என்பதில் தான் எந்த சந்தேகமுமில்லையே தவிர, அவர்களை பின்பற்றுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்கிற கொள்கையுடையவர்கள் மேல் குறிப்பிடப்பட்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் தொழுகை முறையை தான் பின்பற்றுகின்றார்களா?
எந்த மதுஹபுவாதிகளாவது இதை சரி என்பார்களா?
எந்த கூட்டத்தாராவது, இப்படி தொழுவதும் சரி தான் என்று ஃபத்வா கொடுப்பார்களா? மாட்டார்கள்.
ஆக, அனைவரும் ஏக மனதாய் சொல்கிறோம், இப்னு உமரின் கூற்று வஹீக்கு மாற்றமானது, எனவே அதை நாம் பின்பற்ற முடியாது என்பது தானே?


வாடகைத் திருமணம் :


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆரம்ப காலத்தில் வெளியூர்களுக்குச் செல்லும் ஆண்கள் அங்குள்ள பெண்களைக் குறிப்பிட்ட காலம் வரை வாடகை பேசி திருமணம் செய்து வந்தனர். அதாவது ஒரு மாதம் வரை உன்னை மனைவியாக வைத்துக் கொள்கிறேன் என்பது போல் காலக்கெடு நிர்ணயித்து திருமணம் செய்வார்கள். காலக்கொடு முடிந்ததும் அப்பெண்ணை விட்டுவிட்டு ஊருக்கு வந்து விடுவார்கள். அரபுகளிடம் காணப்பட்ட இந்த வழக்கத்தை ஆரம்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருந்தனர். அதனால் நபித் தோழர்களில் சிலர் இந்த வழக்தத்தைக் கடைப்பிடித்தனர்.

கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்தனர்.

வாடகைத் திருமணத்தையும், வீட்டுக் கழுதைகளைச் சாப்பிடுவதையும் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அலி (ரலி),

நூல் : புகாரி 4216, 5115, 5523, 6691


ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருடைய அறிவுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்தார்களோ அந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் இவ்வாறு வாடகைத் திருமணம் செய்யலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) மார்க்கத் தீர்ப்பு அளித்து வந்தார்கள்.


வாடகைத் திருமணம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். யுத்த காலத்திலும், பெண்கள் பற்றாக் குறையின் போதும் தான் இந்த அனுமதியா? என்று அவரது ஊழியர் கேட்ட போது இப்னு அப்பாஸ் (ரலி) ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு ஜம்ரா,

நூல் : புகாரி 5116

வாடகைத் திருமணம் கூடாது என்று நமக்கு இன்றைக்கு தெரிந்திருக்கிறது. இதை கூட அறியாமல் சஹாபாக்கள் இருந்திருக்கிறார்கள்.
இது அவர்களது குறையும் இல்லை. அன்றைக்கு இருந்த தகவல் தொடர்பு நிலை இது தான்.
அவர்களுக்கு வஹீ வராது என்பதால் அவர்கள் ஒன்றை தவறாக புரிந்திருந்தாலும் கூட அதை சரி செய்யும் பொருட்டு அல்லாஹ் வஹீ அருள மாட்டான்.
அப்படியிருக்க நாம் எப்படி சஹாபாக்களை பின்பற்றுவது?


அவர்கள் அனைத்தையும் சரியாக தான் புரிவார்கள் என்பதற்கு உத்திரவாதம் ஏதும் இல்லையே?

இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


நபி (சல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தார்களா?

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது; திருமணப் பேச்சும் பேசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)

நூல் : முஸ்லிம் 2522, 2524, 2525, 2526

இந்தத் தடையை இப்னு அப்பாஸ் (ரலி) அறியாமல் இருந்ததுடன் தமது சின்னம்மா மைமூனா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் திருமணம் செய்தார்கள் எனவும் கூறி வந்தார்கள்.

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1837, 4259, 5114

ஆனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள் இதை மறுத்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டாத நிலையில் தான் என்னைத் திருமணம் செய்தார்கள்.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி)

நூல் : முஸ்லிம் 2529

ஒரு பிரச்சனையில் சம்பந்தப்பட்டவரின் கூற்றும் சம்பந்தப்படாதவரின் கூற்றும் முரண்பட்டால் சம்பந்தப்பட்டவரின் கூற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்யக் கூடாது என்ற விபரமும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தனது சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.

தவறுகள் நிகழ வாய்ப்புள்ளவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று கூறுவது பொருத்தமானது தானா?


குளிப்பு கடமையான நிலையில் சஹரை அடைதல் :

ஒருவருக்கு குளிப்பு கடைமையாகி விட்டால் அந்த நிலையிலேயே சஹர் செய்து நோன்பு நோற்கலாம்.சுபுஹ் நேரம் வந்ததும் தொழுகைக்காகக் குளித்துக் கொள்ள லாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்.

ஆனால் அதிகமான ஹதீஸ்களை அறிந்திருந்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியாமல் இருந்து பின்னர் திருத்திக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் பஜ்ரு நேரத்தை அடைவார்கள். பின்னர் குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள் என்று ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் தன்னிடம் கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் மதீனாவின் ஆளுநரான மர்வானிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட மர்வான் ``அல்லாஹ்வின் மீது ஆணையாக இதைப் பற்றி அபூ ஹுரைராவிடம் நீ கூறி எச்சரிக்கை செய்ய வேண்டும் எனக் கூறினார். ஆனால் அப்துர் ரஹ்மான் அபூ ஹுரைராவிடம் இது பற்றி பேச விரும்பவில்லை. பின்னர் துல்ஹுலைபா எனும் இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அங்கே அபூ ஹுரைராவுக்குச் சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. அப்போது அப்துர் ரஹ்மான் ``நான் உங்களிடம் ஒரு செய்தியைக் கூறவுள்ளேன். மர்வான் உம்மிடம் கூறுமாறு சத்தியம் செய்திராவிட்டால் அதை உம்மிடம் நான் கூற மாட்டேன் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் கூறினார். பின்னர் ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைராவிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ``எனக்கு பழ்ல் பின் அப்பாஸ் தான் இதைக் கூறினார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரே இது பற்றி நன்கறிந்தவர்கள் என்று விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 1926

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை மகனான பழ்ல் பின் அப்பாஸ் அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை தெரியாமல் இருந்துள்ளது. அவர்கள் கூறியதை அபூ ஹுரைரா (ரலி) நம்பியும் இருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் நபித்தோழர்கள் சிலரிடம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.

இப்படியிருக்கும் போது, சஹாபாக்கள் என்ன சொன்னாலும், மார்க்கம், அவர்கள் எதை சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்கிற கொள்கை ஒரு போதும் நம்மை வெற்றியடைய செய்யாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.






ஞாயிறு, 28 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 9)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 9





குர் ஆன் மட்டும் தான் வஹியா? (தொடர்ச்சி)


குர் ஆன் மட்டும் தான் வஹீயாக ஏற்கப்பட வேண்டியது என்கிற கொள்கையுடையவர்கள் முன்வைக்கும் மற்றொரு வாதம், ஹதீஸ் என்பது மனிதர்களால் அறிவிக்கப்பட்டது, குர் ஆன் தான் அல்லாஹ் நேரடியாக அருளியது என்பதாகும்.

இது எந்த அளவிற்கு அபத்தமானதும் அர்த்தமற்றதுமாக இருக்கிறது?
ஹதீஸ்கள் மனிதர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதற்காக அதை ஏற்கக் கூடாது என்றால் இதே வாதம் குர் ஆனுக்கும் பொருந்தத் தான் செய்யும் என்பதை இவர்கள் புரியவில்லை.

குர் ஆனை அல்லாஹ்வே நேரடியாக தந்தான் என்கிறார்கள். நேரடியாக இவர்களது கைகளிலா அல்லாஹ் தந்தான்? ஏதோ அல்லாஹ் குர் ஆனை நம் ஒவ்வொருவரின் கைகளில் நேரடியாக ஜிப்ரீலை அனுப்பி அருளியதைப் போன்ற ஒரு தோரணையில் இவர்கள் பேசுகின்றனர்.

ஹதீஸ் எப்படி நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறியதாக மனிதர்கள் அறிவிக்கிறார்களோ அது போன்று இது தான் குர் ஆன் என்று நபி (சல்) அவர்கள் கூறியதையும் அதே மனிதர்கள் (சஹாபாக்கள்) தான் அறிவித்தனர்.
அவர்கள் அறிவித்ததை அடுத்த தலைமுறைக்கு கடத்தினர், பின் அடுத்த  தலைமுறை.. என மனிதர்கள் மூலமாக தான் குர் ஆன் வசனங்களும் நமக்கு கிடைத்தது.

அல்லாமல், குர் ஆனை இவர்கள் நேரடியாக ஜிப்ரீலிடமிருந்து பெற்று வரவில்லை.

ஒரே வேறுபாடு, குர் ஆனை அதிகமான அறிவிப்பாளர்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தினர், அதுவே ஹதீஸ்களைப் பொறுத்தவரை அதை அறிவித்ததும் அடுத்த தலைமுறைக்கு கடத்தியதும் ஒரு சிலராக இருப்பர்.

எனவே, இந்த வாதத்தை மையப்படுத்தி தான் இவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்றால் இவர்கள் குர் ஆனையும் ஏற்கக் கூடாது, ஏற்க முடியாது.

அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்,

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, ''சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்'' எனக் கூறி, அல்லாஹ் வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி  இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம் (4:150,151)


அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் வேற்றுமை பாராட்டுபவர்கள் காஃபிர்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் அறிவிக்கிறான்.
வேற்றுமை பாராட்டுவது என்றால் என்ன?
அதையும் இந்த வசனமே நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ் கூறியதை ஏற்போம், தூதர் சொல்வதை ஏற்க மாட்டோம் என்பதாக எவர்கள் அல்லாஹ்வின் வஹீ செய்தியையே வேறுபடுத்திப் பார்ப்பார்களோ அவர்களைப் பற்றி தான் இந்த வசனம் பேசுகிறது.

இன்னும், நபி (சல்) அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது,

அல்லாஹ்வையும், இறுதி நாளையும்  நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது (33:21)

என்கிறான்.

முன்மாதிரி என்று எப்போது சொல்வோம்? ஒருவர் ஒரு கட்டளையை பிறப்பிக்கிறார், அதை நாம் ஏற்று செயல்படுகிறோம். அப்படியானால் அவரை நாம் முன்மாதிரியாக கொண்டோம் என்று ஆகுமா?
ஆகாது.
அதுவே அவர் ஒரு செயலை செய்து காட்டி, இதே போன்று நீங்களும் செய்யுங்கள் என்று சொன்னால் அதில் நாம் அவரை முன்மாதிரியாக கருதினோம் என்று ஆகும்.

முன்மாதிரி என்கிற சொல்லாக்கமே ஒரு செயலை செய்து காட்டக் கூடியவரை பின்பற்றுவற்கு தான் பயன்படுத்தப்படும்

வேதத்தை தமது வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டி நமக்கெல்லாம் முன்மாதிரியாக ஒருவர் திகழ வேண்டும் என்று சொன்னால் அதை நம்மைப் போன்ற ஒரு மனிதரால் தான் செய்ய முடியுமே தவிர ஒரு மலக்கால் செய்ய முடியாது.
எனவே தான் மனிதர்களிலிருந்து தூதரை நியமித்ததாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
அவர்கள் நம் முன் வாழ்ந்து நமது அன்றாட செயல்பாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

இது போக, குர் ஆன் நெடுகிலும் ஏராளமான வசனங்களில், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள், அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்கிற எச்சரிக்கையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக் கும் கட்டுப்படுங்கள்!' எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை (24:54)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக் கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (3:32)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப் படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (5:92)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (9:71)

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4:65)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர்த் தியாகிகளுடன் மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.(4:69)


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்! (8:20)


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! (47:33)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (3:132)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூத ருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.(24:56)


மேற்கண்ட அனைத்து வசனங்களும் அல்லாஹ்வுக்கு கட்டுபடுவது எப்படி முக்கியமோ அதே போன்று அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவதும் முக்கியம் என்பதையும், அவ்வாறு கட்டுப்படுவதினால் கிடைக்கும் நற்பேறுகள் என்னென்ன என்பது பற்றியும், கட்டுப்படாமல் புறக்கணிப்போருக்கு நேரும் இழி நிலை பற்றியும் தெளிவுபடுத்துகிறது.

இவை அனைத்திற்கும் முத்தாய்பாக அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப் பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர் களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை. (4:80)

அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்படுவது என்பதன் பொருள் நாம் அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டோம் என்பதுதான்.
தூதரை புறக்கணித்தால் நாம் அல்லாஹ்வையே புறக்கணித்தோம் என்று பொருளாகும் என்பதாக அல்லாஹ் சொல்வதிலிருந்து குர் ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையில்லை என்கிற கொள்கையுடையவர்கள் எந்த அளவிற்கு வழிகேட்டில் சிக்கியிருக்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக புரிகின்றது.


இதுவரை, வஹீ என்றால் என்ன என்பதற்காக அடிப்படைகளை அறிந்தோம். இந்த அடிப்படைக்கு மாற்றமாக என்னன்ன சித்தாந்தங்கள் எல்லாம் சமூகத்தில் ஊடுருயிருக்கின்றன, அவை என்னன்ன வகைகளிலெல்லாம் தவறானவை என்பதை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்.


சஹாபாக்களை பின்பற்றுவது அவசியமா?

குர் ஆனும் ஹதீஸும் எப்படி மார்க்க ஆதாரமோ அது போன்று சஹாபாக்களின் கூற்றுக்களும் மார்க்க ஆதாரம் என்பதாக பிரச்சாரம் செய்கின்ற கூட்டம் தற்போது கிளம்பியிருக்கிறது.

இந்த கொள்கையானது நாம் இதுவரை அறிந்து வந்த இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான கொள்கையாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (சல்) அவர்களின் கூற்றுக்களும் மார்க்கம் என்று ஒரு பக்கம் சொல்கின்ற நாம், அதை கூட, அவர்கள் மார்க்கம் என்கிற முறையில் சொன்னவை, அவர்கள் மனிதன் என்கிற முறையில் சொன்னவை என இரண்டாக வகைப்படுத்தி மார்க்கம் என்று அவர்கள் எதை செய்து காட்டினார்களோ அவை மட்டும் தான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட வஹீ எனவும், மனிதன் என்கிற முறையில் அவர்கள் சொன்னவையோ செய்தவையோ வஹீயின் அடிப்படையில் இல்லை எனவும் தீர்க்கமான கொள்கையை வைத்திருக்கின்றோம்.

இப்படிப்பட்ட அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட நாம் எப்படி வஹீயே வராத சஹாபாக்களின் கூற்றை மார்க்கம் என்போம்?

வஹீயுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் நபி (சல்) அவர்களின் கூற்றிலேயே ஒரு சிலது தான் வஹீ, ஒரு சிலது வஹீ இல்லை என்று கூறி, வஹீ அல்லாதவற்றை நபியே சொல்லியிருந்தாலும் அதை ஏற்கத் தேவையில்லை என்று சொல்லும் போது வஹீயோடு எந்த தொடர்புமற்ற சஹாபாக்களின் சொல், செயலை எப்படி மார்க்கம் என்று சொல்வது?

சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இனி, சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்வோர் முன்வைக்கக் கூடிய ஆதாரங்கள் சிலவற்றையும் அவை எப்படி அவர்களது கருத்துக்கு எதிராக இருக்கின்றன என்பதையும் தொடர்ந்து காணலாம்.

முதலில் இவர்கள் முன்வைக்கும் வாதமானது, "என் தோழர்களை திட்டாதீர்கள்", என்று நபி (சல்) அவர்கள் சொல்லி விட்டார்கள், தவ்ஹீத் ஜமாஅத் சஹாபாக்களை திட்டுகிறது, என்றொரு வாதம் வைக்கிறார்கள்.

இது எந்த அர்த்தமுமற்ற வாதம்.

நபி (சல்) அவர்களின் கூற்றுக்களை இவை வஹீ, இவை வஹீ இல்லை என‌ இரண்டாக பிரிப்பது அவர்களை இழிவுப்படுத்தும் காரியமா? இல்லை.
அப்படி நாம் கருதுவதும் இல்லை.
அது போன்று, சஹாபாக்களுக்கு வஹீ வராது, எனவே அவர்களை பின்பற்ற முடியாது என்று சொல்வதும் அவர்களை இழிவுபடுத்தும் கருத்து அல்ல.

சஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்று சொல்வது எப்படி அவர்களை திட்டுவதாக ஆகும்? திட்டுதல் என்றால் என்ன என்கிற அடிப்படை கூட இவர்களுக்குத் தெரியவில்லை.

கீழ்காணும் மற்றொரு ஹதீஸையும் இவர்கள் தங்கள் கருத்துக்கு சாதகம் எனக் கருதி முன் வைப்பார்கள்.

என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல் : திர்மிதி : 3797

இந்த ஹதீஸுக்கும் சஹாபாக்களின் கூற்றும் மார்க்கம் என்று சொல்வதற்கும் ஏதெனும் தொடர்பு இருக்கின்றதா?

இந்த ஹதீஸி நபி (சல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள்? சஹாபாக்களுக்கு தொல்லை தராதீர்கள், அவர்களை வெறுக்காதீர்கள், அவர்களை நேசியுங்கள், அவர்களை மதியுங்கள்..
இது தானே அவர்கள் சொல்வது?

சஹாபாக்களுக்கு வஹீ வராது என்று சொன்னால் மேற்கண்டவற்றையெல்லாம் நாம் மீறுகிறோம் என்று ஆகுமா?

சஹாபாக்களுக்கு வஹீ வராது என்று சொன்னால் நாம் சஹாபாக்களை வெறுக்கிறோம் என்று பொருளா?
சஹாபக்களை பின்பற்றக் கூடாது என்று சொன்ன்னால் அவர்களை நேசிக்கவில்லை என்று பொருளா?

என்ன அர்த்தமற்ற வாதம் ?

சஹாபாக்களை மதிப்பது என்பது வேறு, அவர்களை பின்பற்றுவது என்பது வேறு.
சஹாபாக்களை மதிப்பதில் நாம் எந்த குறையும் வைக்கவில்லை, இவர்களையெல்லாம் விட மிகவும் உயர்வான அந்தஸ்தை நம் உள்ளத்தில் அவர்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறோம்.

இக்கட்டான நிலைகளில் உறுதியான ஈமானிய நம்பிக்கையை உள்ளத்தில் கொண்டு இந்த மார்க்கத்திற்காக தியாகங்கள் பல செய்தவர்கள் அவர்கள்.
நாமெல்லாம் அத்தகைய சோதனைகளை சந்தித்திருந்தோமேயானால், இஸ்லாத்தில் நீடிப்போமா என்று கூட உத்திரவாதம் கிடையாது.
அந்த அளவிற்கு உயிராலும், உடைமைகளாலும் எண்ணிலடங்கா தியாகங்களை செய்தவர்கள் அவர்கள்.

ஹிஜ்ரத் செய்து இந்த மார்க்கத்திற்காக வந்தவர்களுக்காக தன் சொத்தில் சரி பாதியை கொடுத்தவர்கள் அந்த உத்தம சஹாபாக்கள், இதுவெல்லாம் சாதாரண விஷயமா?
நாம் மலையளவு தர்மம் செய்தாலும் அது சஹாபாக்காளின் கையளவு தர்மத்திற்கு ஈடாகாது என்றூ அல்லாஹ் சொல்வதை முழுமையாக நம்பி அவர்களை நாம் மிக உயர்வாய் மதிக்கிறோம்.

அதே சமயம், இப்படி உயர்வாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதனால் அவர்கள் பின்பற்றவும் தகுதியானவர்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது?
பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வஹீ தான் என்று நாம் இதுவரை அறிந்து வைத்திருந்த எல்லா அடிப்படைக்கும் மாற்றமல்லவா அது?

ஒருவரை சிறந்தவர் என்று போற்றுவது என்பது வேறு, அவரை பின்பற்றுவது என்பது வேறு.

இந்த அடிப்படையை சரியாக புரியாததால் தான் இது போன்ற வாதங்களையெல்லாம் முன்வைத்து சஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்கின்றனர்.

சஹாபாக்களின் சிறப்பைப் பற்றி இன்னும் ஏராளமான குர் ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் நமக்கு விளக்கத் தான் செய்கின்றது.

உங்களில் சிறந்தவர் என் காலத்தவரே. அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். உங்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் வரும். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப் படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல் : புகாரி 2651


இதையும் நாம் மறுக்கவில்லை. நபி (சல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் அதிக தியாகம் செய்தவர்கள். அந்த வகையில் மற்ற எவரையும் விட சிறப்புக்குரியவர்கள் அவர்கள் தான்.
ஆனாலும், சிறப்புக்குரியவர் என்பதால் ஒருவர் பின்பற்ற வேண்டியவர் என்கிற நிலையை ஒரு போதும் அடைய மாடார்.

நாம் வாழும் காலத்தில் கூட எத்தனையோ பேர் தொழுகை நோன்பு என இபாதத்திலேயே வாழ் நாளை கழிப்பவராக காட்சி தருவார்.
கொடை வள்ளலாக காட்சி தருவார்.
மக்கள் எல்லாரும் அவரை சிறந்த மனிதர் என்றூ போற்றுவார்கள்.
அதற்காக அவர் என்ன சொன்னாலும் மார்க்கம் என்று கருதி விட முடியுமா?

இன்னும் சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு சான்றாக இவர்கள் முன்வைக்கும் இறை வசனங்களைப் பார்ப்போம்.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்.  (9:100)

அல்லாஹ் பொருந்திக் கொண்டான் என்று வசனம் இருக்குமானால்ல் பொருந்திக் கொண்டான் என்று மட்டும் தான் அர்த்தமாகும். அல்லாமல்,  சஹாபாக்களின் கூற்றும் மார்க்க ஆதாரம் என்று கூற இந்த வசனம் இடமளிக்கிறதா? இல்லை !



இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித் தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். (9:117)

சிரமமான காலகட்டத்தில் நபி (சல்) அவர்களுக்கு உறுதுணையாக நின்றது சஹாபாக்கள் தான் என்கிற வகையில் அவர்கள் சிறப்புக்குரியவர்கள், எனவே அவர்களை மன்னித்ததாக அலலஹ் இங்கு சொல்கிறான்.
அல்லாஹ் மன்னிக்கிறான் என்றாலே அவர்களும் தவறிழைப்பவர்கள், அவர்களுக்கு வஹீ வராது என்பது புரிகிறது.

எனவே சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு இந்த வசனத்திலும் எந்த சான்றும் இல்லை.

இன்னும்,

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். (57:10)

அவர்களுக்கு முன்பே நம்பிக்கை யையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக் கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர் களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். (59:9)


இது போன்ற பல்வேறு வசனங்கள் சஹாபாக்கள் சிறப்புக்குரியவர்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றவர்கள் என்கிற கருத்தினை தருகின்றன.
இவற்றை நாம் மறுக்கிறோமா? இவையெல்லாம் பொய், சஹாபாக்கள் எந்த சிறப்புமற்றவர்கள் என்றா நாம் சொல்கிறோம்??
இல்லை.
அவர்களது சிறப்பை நாம் மிகவும் உயர்வாய் தான் மதிக்கிறோம், சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் மதிப்பதை விடவும் அதிகமாக மதிக்கிறோம்.
அதே சமயம், வஹீ என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் மட்டும் உள்ளது என்கிற அடிப்படைக்கும்,
வஹீ செய்தியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்கிற அல்லாஹ்வின் கட்டளைக்கும் மாற்றமாக 
வஹீ செய்தி கிடைக்கப்பெறாத சஹாபாக்களின் கூற்றையும் மார்க்க சட்டமாக நாம் ஏற்க வேண்டும் என்பதை ஒரு போதும் நாம் அங்கீகரிக்க முடியாது.
சஹபாக்களே இன்றைக்கு உயிருடன் இருந்தால் கூட, நாம் கூறுகிற இந்த அடிப்படையை தான் சரி காண்பார்கள்.

தொடரும், இன்ஷா அல்லாஹ் !

சனி, 27 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 8)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 8



குர் ஆன் மட்டும் தான் வஹியா? (தொடர்ச்சி)


வஹீ என்பது குர் ஆன் மட்டுமல்ல, மாறாக நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்க்கையும் சேர்த்தது தான் வஹீ.
இதற்கு ஏராளமான சான்றுகளை குர் ஆனிலிருந்தே நாம் கண்டோம்.

சில தர்க்க ரீதியிலான சான்றுகளை முன்வைத்தும் இந்த கருத்தினை நிறுவலாம்.

நபிகள் நாயகம் (சல்) அவர்களை அல்லாஹ் தன் தூதராக நியமித்து மக்களிடையே பிரச்சாரம் செய்யுமாறு ஏவினான்.
அவர்களது பிரச்சாரம் மிகவும் இலகுவாகவா இருந்தது? இல்லை. 
சொல்லணா துயரங்கள், அடி உதைகள், போர்கள், படுகாயங்கள் என தமது தூதுத்துவ பணியை செவ்வனே செய்வதற்காக பல்வேறு தியாகங்களை நபி (சல்) அவர்கள் மேற்கொண்டார்கள்.

இந்த வழிகேடர்கள் சொல்வது போன்று, குர் ஆன் மட்டும் தான் நாம் பின்பற்ற வேண்டியது எனவும் நபி (சல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் நாம் பின்பற்ற தேவையில்லை எனவும் இருக்குமானால், நபி (சல்) அவர்களை அல்லாஹ் தூதராக அனுப்ப வேண்டிய அவசியமென்ன?

குர் ஆன் என்கிற நுலைக் கொண்டு நாம் நேர்வழியை அடைந்து விடுவோம், அதை விள‌க்குவதற்கு எவரும் தேவையில்லை என்பது தான் சரியான கொள்கையாக இருக்குமானால், குர் ஆனை அல்லாஹ் நேரடியாகவே அருளியிருக்கலாமே, ஒரு மலக்கை அனுப்பி இதை தந்து விட்டு செல்லுமாறு ஏவியிருக்கலாமே?

நமக்கு ஒரு தந்தி வருகிறது, அதை ஒரு தபால்காரர் நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார். அத்துடன் அவரது வேலை முடிந்து விட்டது.
அந்த தந்தியை பிரித்துப் படித்து நமக்கு விளக்கித் தருகிற கடமை அவருக்கு இருக்கிறதா என்றால் இல்லை.

அப்படியொரு தந்தியைப் போன்று தான் இந்த குர் ஆனை இவர்கள் கருதுவார்கள் என்றால் அதை தருவதற்கு ஒரு மலக்கு போதும், மனிதர்களிலிருந்து ஒருவரை நியமித்து அதை அருள வேண்டிய அவசியம் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், மனிதர்களிலிருந்து ஒருவரை தூதராக அல்லாஹ் நியமிக்கும் போது இங்கு இரண்டு வேலை. முதல் வேலை இந்த மனிதர் இறைத் தூதர் தான் என்று மக்களை நம்ப வைக்க வேண்டும்.
அதன்பிறகு தான் இவர் கொண்டு வந்த குர் ஆன் இறை வேதம் தான் என்பதை நிறுவ முடியும்.

இவ்வாறு நபி (சல்) அவர்கள் தன் நபி தான் என்று அம்மக்களிடம் நிரூபிப்பதற்கு கூட பல முயற்சிகள் எடுத்ததை திருக் குர் ஆன் எடுத்துக் காட்டுகிறது.

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' என்று அவர்களின் தூதர்கள் கூறினர். (14:11)

இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்ப தையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந் துவதையே இவரும் அருந்துகிறார்' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறை வனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (23:34)


குர் ஆனைத் தவிர வேறு வஹீ இல்லையென்று இருக்குமானால், குர் ஆனை நாமே படித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்றிருக்குமானால் 
மனிதரிலிருந்து தூதரை அனுப்பி, அவரை உண்மையாளர் என்று நிரூபித்து, பின் அவர் கொண்டு வந்த வேதத்தை உண்மை என்று நிரூபிப்பதற்கு பதில் நேரடியாக அந்த வேதத்தை மட்டும் நிரூபித்தால் போதும்.
ஒரு மலக்கை அனுப்பி வேதத்தை தந்து விட்டு செல்ல சொல்லியிருக்கலாம்.
இன்னும் சொல்லப்போனால், மக்கத்து காஃபிர்கள் கூட அதை தான் விரும்பினார்கள்.

இவருடன் ஒரு மலக்கு வந்திருக்கக் கூடாதா, இவருக்கு பதில் ஒரு மலக்கு வந்திருக்கக் கூடாதா? அல்லாஹ் வானிலிருந்து நேரடியாக இதை ஒரு புத்தகமாக அனுப்பியிருக்கக் கூடாதா? என்றெல்லாம் அவர்கள் கேட்டதாக குர் ஆன் நமக்கு சொல்கிறது.

(முஹம்மதே!) ''வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும்'' என்று வேதமுடையோர்  உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம் கேட்டுள் ளனர். ''அல்லாஹ்வைக் கண்முன்னே எங்க ளுக்குக் காட்டு'' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது. (4:153)


இந்த வேதமானது வானிலிருந்து இறங்கியிருக்கலாமே என்று வேதக்காரர்கள் கேட்டதாக அல்லாஹ் இங்கு சுட்டிக் காட்டுகிறான்.


இப்படி எளிமையாக அவர்களுக்கு சத்தியத்தை உணர்த்துவதற்கு வழி இருந்தும் அதை செய்யாமல், மனிதர்களிலிருந்தே தூதரை அனுப்புகிறான் என்றால் இந்த குர் ஆனை அவர்கள் தமது வாழ்வில் விளக்கிக் காட்ட வேண்டும் என்கிற ஒரு நோக்கத்தைத் தவிர வேறில்லை.

ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் மூஸாவையும் அவரது சகோதரர் ஹாரூனையும் நமது அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுடனும் அனுப்பினோம். அவர்கள் பெருமையடித்தனர். அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமாக இருந்தனர். 
'இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலை யில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?' என்றனர். (23:45 47)

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்' என்று (அவ்வூரார்) கூறினர் (36:15)

'நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!' (என்றும் கூறினர்) (26:154)

'நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.' (26:186)

நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழி கேட்டிலும், சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்.
நம்மிடையே இவருக்கு மட்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா? இல்லை. இவர் கர்வம் கொண்ட பெரும் பொய்யர். (என்றனர்) (54:24,25)

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களை புறக்கணித்தான். அல்லாஹ் தேவை யற்றவன்; புகழுக்குரியவன். (54:6)

மேற்கண்ட எல்லா வசனங்களும் நமக்கு சுட்டிக்காட்டுவது என்ன?

மனிதர்களிலிருந்து ஒரு தூதரை அல்லாஹ் தேர்வு செய்த காரணத்தால் அம்மக்கள் அவ்வளவு எளிதாக அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை.
எங்களைப் போல் உண்ணுகிறார், எங்களைப் போல தூங்குகிறார், எங்களைப் போல வியாபாரத்தில் ஈடுபடுகிறார், இவர் எப்படி தூதராக இருப்பார்? என்பதே அவர்களது முக்கியக் கேள்வி.

ஒரு வேளை நபி (சல்) அவர்களுக்குப் பதில் ஒரு மலக்கை நேரடியாக அனுப்பி குர் ஆனை அல்லாஹ் தந்திருந்தால் அப்போது இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது.

இருப்பினும், அல்லாஹ் அவ்வாறு செய்தானா? இல்லை.
நம்புவதற்கு மக்கள் சிரமப்படுவார்கள் என்றாலும் பரவாயில்லை, மனிதர்களிலிருந்து தான் தூதரை அனுப்புவேன் என்பதில் அல்லாஹ் மிகவும் உறுதியாகவே இருந்தான்.


அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்.

'மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?' என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது
'பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்' என்பதைக்  கூறுவீராக! (17:94,95)


மலக்குகளிலிருந்து தூதர் வேண்டும் என்று இவர்கள் கேட்பதாக இருந்தால் பூமியில் இவர்களெல்லாம் என்ன மலக்குகலாகவே இருக்கிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பதிலிருந்து என்ன புரிகிறது?

மலக்குகள் இருக்கும் சபைக்கு ஒரு வேதம் வந்தால் அதை விளக்கித் தர ஒரு மலக்கால் தான் முடியும்.
அதுவே, மனிதர்களுக்கு ஒரு வேதம் அருளப்பட்டால் மலக்கினால் அதை விளக்க முடியுமா?
குர் ஆனை விளக்குவது என்றால் மனிதர்களிடையே குர் ஆனின் போதனைகளின்படி வாழ்வதை தான் அது குறிக்கும்.
எப்படி வியாபாரம் செய்வது, எப்படி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது, எப்படி மலஜலம் கழிப்பது என்பன போன்ற காரியங்களை அவர் தமது வாழ்க்கையில் செய்து காட்ட வேண்டும்.
அப்படியானால் இதற்கு தகுதியானவர் மலக்கா அல்லது மனிதனா? என்று அல்லாஹ் கேட்கிறான்.

இன்னும் அழுத்தமாக அல்லாஹ் சொல்லும் போது, அப்படி ஒரு மலக்கையே நாம் அனுப்புவதாக இருந்தால் கூட அவரையும் மனிதராக மாற்றி தான் அனுப்புவோம் என்று சொல்லி, தூதர் என்பது மனிதர் தான் என்பதையும், மனிதராக இருந்தால் தான் வேதத்தை அவரால் விளக்க முடியும் என்பதையும் சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் தெளிவுப்படுத்துகிறான்.

இவருடன் வானவர் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா?' என அவர்கள் கூறுகின்றனர்.  வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டு விடும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள். 
வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தி யிருப்போம். (6:8,9)



வஹீ செய்தி என்பது குர் ஆன் மட்டுமல்ல, மாறாக அதை விளக்கும் தூதரின் வாழ்க்கையும் சேர்ந்தது தான்.
வேதம் மட்டும் போதும் என்றால் தூதரின் அவசியமே இல்லை.
இன்னும் சொல்லப்போனால், சில சமூகங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தூதர்கள் கூட அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

மூஸா நபிக்கு அல்லாஹ் தவ்ராத் எனும் வேதத்தை அனுப்பி, ஃஃபிர் அவ்ன் கூட்டத்தாரிடம் சென்று இந்த வேதத்தை விளக்குமாறு பணிக்கிறான்.
மூசா நபிக்கு இயல்பில் திக்கு வாய் எனும் குறை இருந்த காரணத்தால், இதை தெளிவாகவும் அழகாகவும் விளக்கிக் காட்டுவதற்காக தம்முடன் தமது சகோதரரான ஹாரூன் (அலை) அவர்களையும் அனுப்புமாறு மூஸா நபி வைத்த வேண்டுகோளை அல்லாஹ் ஏற்று ஹாரூன் நபியையும் சேர்த்து அனுப்புகிறான் என்றெல்லாம் குர் ஆன் சொல்கிறது என்றால் இங்கு நாம் புரிய வேண்டியது, வேதம் என்பது வெறுமனே வழிகாட்டாது. அதை விளக்கித் தந்து, வழிகாட்டுவதற்கு ஒரு தூதர் தேவை.

அல்லாஹ் திருக் குர் ஆனில் சொல்கிறான்

அவர்கள் முரண்பட்டதை அவர் களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்கு வதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது (16:64)

இந்த வேதமே எதற்கு தான் அருளப்பட்டது? நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அதை விளக்கித் தர வேண்டும் என்பதற்காக தான் இது அருளப்பட்டது என்கிறான் அல்லாஹ்.

ஆக, வெறுமனே வேதத்தை வாங்கி நமக்கு தருவதோடு நபி (சல்) அவர்களின் வேலை முடிந்து விடவில்லை, மாறாக அதை நமக்கு விளக்கித் தருகிற இன்னொரு வேலையும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம் (16:44)

இந்த வசனத்தின் வாயிலாகவும் இதே கருத்தை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

எப்படி அவர்கள் ஓதிக் காட்டக் கூடிய வேதம் என்பது வஹீயோ அது போன்று, நபி (சல்) அவர்கள் அந்த வேதத்திற்கு தருகிற விளக்கமும் வஹீ தான்.
இந்த அடிப்படையை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னும் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்.

அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் 67  கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார். (2:151)

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்  கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர் (3:164)

இந்த வசனங்களின் மூலமும் நபி (சல்) அவர்களின் பணிகள் என்னன்ன என்பதை அல்லாஹ் விளக்குகிறான்.

வேத வசனங்களை ஓதுவார், அதை கற்றும் தருவார் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்து வெறுமனே வேதத்தை தருவதோடு நபியின் பொறுப்பு நிறைவுபெற்று விடவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.
ஓதிக் காட்டிய வசனங்களை கற்றும் தர வேண்டும்.

கற்றுத் தருதல் என்றால் இவ்விடத்தில் என்ன பொருள்? அலிஃப், பே எனும் அரபு வார்த்தையை கற்றுத் தருவதையா அல்லாஹ் சொல்கிறான்? மொழியை கற்றுத் தருவதைப் பற்றியா அல்லாஹ் சொல்கிறான்?
இல்லை.
நபி (சல்) அவர்களுக்கு அரபுசொற்களை வாசிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது எனும் போது, வேதத்தை கற்றுத் தருதல் என்பது நிச்சயம் மொழியைக் குறிக்கவில்லை.
மாறாக, அந்த வசனங்களை விளக்குதல், தன் வாழ்க்கையில் அதை பிரதிபலிக்கச் செய்து நமக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்தல், இது தான் வேதத்தைக் கற்றுத் தருதல் என்பதற்கான பொருள்.

இதை அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் தெளிவுப்படுத்துகிறான்

அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் 67  கற்றுக் கொடுக்கிறார்.   அவர்கள் இதற்கு முன் தெளிவான வழி கேட்டில் இருந்தனர். (62:2)

எழுதப்படிக்காத சமூகத்தில் இருந்து வந்த தூதர் தான் இந்த வசனத்தை கற்றுக் கொடுத்தார்கள் என்று இந்த வசனம் தெளிவுப்படுத்துகிறது.

அந்த அடிப்படையில் நாம் சிந்திக்கும் போது, வஹீ என்பது குர் ஆன் மட்டுமல்ல, மாறாக, நபி (சல்) அவர்களின் வாழ்க்கையும் சேர்ந்தது தானென்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் புரிகிறது.

நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய உதாரணத்தின் படி, ஒரு தந்தியை ஒரு தபால்காரர் நம்மிடம் கொண்டு வந்து தருகிறார்.
அந்த தந்தியை விளக்கித் தர அந்த தபால்காரரின் உதவியை நாம் நாடுவோமா? மாட்டோம்.
நம்மிடம் கொண்டு வந்து தருவதோடு அவரது வேலை முடிந்து விட்டது.

ஆனால், இந்த வேதத்தை கொண்டு வந்த நபி (சல்) அவர்கள் அப்படியில்லை.

அல்லாஹ் இது பற்றி சொல்வதைப் பாருங்கள்.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பி னோம். (14:4)

தூதராக யாரை அனுப்பினாலும், அந்த சமுதாயம் என்ன மொழியை பேசுகிறதோ அந்த மொழி பேசுபவரையே அனுப்பினேன் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்தும் நமக்கு புலப்படுவது யாதெனில், வேதத்தை தந்து விட்டு செல்வது மட்டும் நபியின் வேலையல்ல, தந்ததோடு அதை விளக்கியும் காட்ட வேண்டும்.
அதனால் தான் அதே மொழி பேசக்கூடியவரை அல்லாஹ் தேர்வு செய்கிறான்.

மேற்கண்ட அடுக்கடுக்கான சான்றுகள் அனைத்தும் குர் ஆன் மட்டும் போதும் என்கிற வழிகேட்டுக் கூட்டத்தாருக்கு தெளிவான மறுப்பாக அமைந்திருக்கிறது.
குர் ஆன் மட்டும் தான் வஹீ என்பதை குர் ஆனே ஒப்புக் கொள்ளவில்லை.
குர் ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்கள் குர் ஆனையே நம்பவில்லை என்பது தான் இதன் இறுதி நிலையாக இருக்கிறது.

இந்த வழிகேட்டுக் கூட்டத்தாரின் கொள்கை அனைத்தும் தவறானது, கொடிய இறை நிராகரிப்பு என்பதையெல்லாம் நாம் புரிகிற அதே வேளை, ஏன் இந்த கொள்கையை இவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எந்த சித்தாந்தத்தை எடுத்துக் கொண்டாலும், அதை மேம்போக்காக சொல்லி, விட்டு விட்டால் அதில் மனிதன் தன் சுய கருத்துக்களை சொருகிக் கொள்ள பல வசதிகள் இருக்கும், அந்த சித்தாந்தத்தைப் பின்பற்றுவதற்கும் இலகுவாக இருக்கும்.

அதுவே, அதை தெளிவான முறையில் விளக்கிச் சொல்லும் போது, அதை பின்பற்றுவது என்று எடுத்துக் கொண்டாலும், சுய விருப்பு வெறுப்புகளை அதன் மீது மனிதன் திணிப்பதை எடுத்துக் கொண்டாலும், சாத்தியமில்லை.

தொழுகையை பேணுமாறு அல்லாஹ் குர் ஆனில் மேம்போக்காக சொல்கிறான்.
அதுவே, தமது தூதர் வாயிலாக தொழுகை என்றால் என்ன, அதை எப்படி தொழ வேண்டும், ஒரு நாளில் எத்தனை முறை தொழ வேண்டும், எந்தெந்த நேரத்தில் தொழ வேண்டும் என எல்லா சட்டதிட்டங்களையும் ஆழமாக விளக்கி விடுகிறான்.

இப்போது, குர் ஆன் மட்டும் போதும் என்று சொல்லக்கூடிய இந்த வழிகேடர்கள் தொழுகையை பேணுகிறார்களா? மாட்டார்கள்.

ஏனென்று சொன்னால், குர் ஆனில் சொல்லப்படும் தொழுகை என்பது அகராதிப்படி நாம் இன்று செய்கின்ற தொழுகையான ஒளு செய்து, தக்பீர் சொல்லி ருகூஹ், சஜதா என்று செய்கிறோமே அதை குறிக்காது, மாறாக, துஆ, பிரார்த்தனை என்கிற பொருளில் தான் பயன்படுகிறது என்று இவர்களாக சுய விளக்கமொன்றினை கொடுப்பார்கள்.

கொடுத்து விட்டு, இதோ நாங்களும் துஆ செய்கிறோம், ஆகவே நாங்களும் தொழுது விட்டோம் என்பார்கள்.

சகாத் கொடுக்குமாறு அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.
எப்படி கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது என்பதையெல்லாம் நபி (சல்) அவர்கள் தான் விளக்குகிறார்கள்.

இதைப் பற்றி இந்த வழிகேடர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?
சகாத் என்பதற்கான அகராதி பொருள் தூய்மை என்பது தான்.
நாங்கள் தூய்மையாக தான் இருக்கிறோம் என்பார்கள்.

அல்லாமல், ஹதீஸை பின்பற்ற சென்றால் சகாத் என்கிற பெயரில் பணம் செலவாகும், அதிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் மார்க்கத்தை இவர்களது சுய கருத்தின் மூலம் வளைக்க முனைகின்றனர்.

இன்னும் ஹஜ் பற்றி எடுத்துக் கொண்டாலும் கூட, அகராதிப் பொருள் என்று பார்க்கும் போது " நாடுதல்" என்பது பொருள்.
ஹதீஸே தேவையில்லை என்று சொல்லி, ஹஜ் எனும் மகத்தான புனிதப் பயனத்தையே மறுக்கும் இவர்கள், நாங்களும் உள்ளத்தால் அல்லாஹ்வை நாடத் தான் செய்கிறோம் என்று அல்லாஹ்வின் வஹீயை கேலிக்கூத்தாக்கும் நிலையை நாம் காண்கிறோம்.



தொடரும், இன்ஷா அல்லாஹ்