ஞாயிறு, 7 நவம்பர், 2010

சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் - 1

சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் .

  • ஷரீஅத் – (மார்க்கம் .)
  • தரீக்கத் — ( ஆன்மீகப் பயிற்சி பெறல்)
  • ஹக்கீக்கத் — ( யதார்த்தத்தை அறிதல் )
  • மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல் )



ஷரீஅத் .

ஸூபிகளிடத்தில் ஷரீஅத் எனப்படுவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற சாதாரண மார்க்க அனுஷ்ட்டானங்களைக் குறிக்கும். இவர்களின் கருத்துப்படி ஆரம்ப நிலையிலுள்ள, உண்மை – யதார்த்தத்தை அறியாத பண்படாத சாதாரண பாமர மக்களுக்குரிய ஆத்மீகப் பயிற்சி நெறிகளே இவ்வகை வணக்கங்களாகும் . இவற்றால் மனிதனுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை , நெல்லை மூடியிருக்கும் உமி போன்றதே ஷரீ அத் சட்டங்கள். உள்ளேயிருக்கும் அரிசியைப் போன்றதுதான் ஹக்கீக்கத். ஆரம்பப் பருவத்தில் உள்ளிருக்கும் அரிசியைக் கெடாமல் காக்க உமி அவசியம்தான் . எனினும் காலப்போக்கில் கதிர் முற்றியதும் அறுவடையின் பின் உமியை நீக்கித் தூர வீசி விடுவது போன்று ஹக்கீக்கத்தை அறிந்தவுடன் ஷரீஅத்தை – மார்க்க அனுஷ்ட்டானங்களைத் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்பதே இவர்களின் கோற்பாடு . ஆரம்பத்தில் ஒரு பயிற்சி நோக்கிலேயே இவற்றை ஒருவன் செய்கின்றான். நெல்லின் உள்ளிருக்கும் அரிசியை அடைய விரும்புபவன் உமியைத் தூக்கி வீசி விடுவது அவசியம் போன்று ஒருவன் யதார்த்தத்தை அறிந்ததும் வெளிப்படையான அமல்களை – மார்க்க அனுஷ்ட்டானங்களை விட்டு விட வேண்டும் என்பதே இவர்களது கோற்பாடு.

பிரபல ஸூபியான கஸ்ஸாலி இமாம்தான் இவ்வாறான ஒரு கொள்கையை அப்பாவி சமூகத்தின் மத்தியில் புகுத்தி லட்சக் கணக்கான மக்களின் வழிகேட்டுக்குக் காரணமாயிருந்தவர் . இவர் ஒரு மார்க்க அறிஞரும் கூட . எனினும் ஸூபித்துவத்தால் கவரப்பட்டு இந்நிலைக்கு ஆளாகி விட்டார். இவர் இறுதித் தருவாயில் இவ்வழிகெட்ட கொள்கைகள் அனைத்தையும் விட்டு மீண்டு தவ்பாச் செய்து விட்டதாகவும், ஸூன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கைக்கு மாறி விட்டதாக வாக்குமூலம் கொடுத்ததாகவும் வரலாறு உண்டு என்பது தனி விடயம். இவர் எழுதிய’ இஹ்யா உலூமுத்தீன்’ எனும் நூல் பிரபலமானது. இதை இவர் நான்கு பகுதியாகப் பின்வருமாறு வகுத்திருக்கின்றார் .

அ- இபாதாத் – வணக்கங்கள் .
ஆ- ஆதாத் – பழக்க வழக்கங்கள் .
இ- முஹ்லிகாத்- மனிதனை அழித்துவிடத்தக்க பாவங்கள் .
ஈ- முன்ஜியாத் – நரகை விட்டும் பாதுகாக்கக் கூடியவைகள் .

இப்படி நான்கு பகுதிகளாகப் பிரித்து விட்டு நான்காவது பகுதி இருக்கின்றதே – அதாவது முன்ஜியாத் – நரகை விட்டும் பாது காக்கக் கூடியவைகளின் பட்டியலில் அவர் குறிப்பிடுவது என்ன தெரியுமா ? நரகை விட்டும் பாதுகாக்கும் ஒரே வழி தரீக்கத் மாத்திரமே !! தரீக்கத்தை -அதாவது ஆத்மீகப் பாதையை அடைய வேண்டுமா ? ஷைக்கிடம் பைஅத் செய் ,அவருக்கு அடிமையாகு , அவரிலே அல்லாஹ்வைக் காண் , அவர் சொல்வதைச் செய். அப்படி நீ தரீக்கத்தின் வழி நடந்தால்தான் உன்னால் ஹக்கீக்கத்தை அடைய முடியும் , ஹக்கீக்கத்தை அறிவதுதான் நரகை விட்டும் உன்னைக் காக்கும் என்பதே அதன் விளக்கம் . இதன் படி இபாதத்கள் , தொழுகை நோன்பு , ஹஜ் போன்ற வணக்கங்கள் செய்வது எதுவுமே ஒரு முஸ்லிமை நரகை விட்டும் காப்பாற்றாது . மாறாக ஹக்கீக்கத்தைத் தெரிந்தால்தான் சுவர்க்கம் என்பது தான் கஸ்ஸாலியின் கொள்கை என்பது தெளிவாகின்றது .

ஆனால் அல்குர்ஆனிலோ அல்லாஹ் கூறுகையில் …
நரக வாதிகளைப் பார்த்து சுவர்க்க வாதிகள் நீங்கள் நரகத்துக்கு வரக் காரணம் என்ன என்று கேட்ட போது அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்று இவ்வாறு கூறுகின்றான் ..

சுவன வாதிகள் நரகுக்குச் சென்ற பாவிகளிடம் ‘ நீங்கள் நரகம் வரக் காரணம் யாது’ என்று வினவுவார்கள் . அதற்கு அவர்கள் நாங்கள் தொழக் கூடியவர்களில் இருக்கவில்லை , ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை ,வீணர்களுடன் கூடித்திரிந்தோம், நியாயத் தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தோம்’ என்பார்கள் . (ஸூரா முத்ததிர் 41)

நபி (ஸல் ) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே.. நான் கடமையான தொழுகையைத் தொழுது ,ரமழானில் நோன்பு நோற்று, ஹலாலானவற்றை எடுத்தும் ,ஹராமானவற்றைத் தவிர்ந்தும் வாழ்கின்றேன் .இது தவிர வேறு எதுவுமே நான் செய்யவில்லை . இப்படியிருக்க நான் சுவர்க்கம் செல்வேனா? என்று கேட்க நபியவர்கள் ஆம் என்று கூறினார்கள் .
( ஆதாரம் முஸ்லிம் 18 )

இவ்விரு ஆதாரங்களின் மூலமாகத் தொழாதிருத்தல், இபாதத் செய்யாதிருத்தல்தான் ஒருவன் நரகம் செல்லக் காரணமாகின்றது என்பதும் தொழுவதும் இதர இபாதத்களைச் செய்வதும் சுவனம் சேர்க்கும் என்பதும் தெளிவாகின்றது . ஆனால் கஸ்ஸாலியோ தரீக்காவில் சேராவிட்டால் சொர்க்கமேகிடையாதுஎன்கின்றாரே ??

- kadayanalluraqsha


தொடரும்.. இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக