புதன், 3 நவம்பர், 2010

தீர்வை தேடிய தீவு திடல்.. !



அல்லாஹ்வின் மகத்தான அற்புதம் ஒன்று ஜூலை நான்கு அன்று நிகழ்திருக்கிறது என்று சொல்வது மிகையானதல்ல!

மாநாட்டில் கலந்துக்கொண்ட லட்சோபலட்சம் மக்களும் இதை உணர்திருப்பார்கள்.
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு அற்புதத்தை நிகழ்த்திக்காட்டுவதைபோல நாம் வாழும் இந்த சமுதாய மக்களுக்கு அல்லாஹ் காட்டித்தந்த ஒரு அற்புதம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!!

மாநாடு என்றால், அதில் நிகழ்த்தப்படும் உரைகளின் முக்கியத்துவம் கருதி மக்கள் குழுமுவார்கள், தலை சிறந்த பேச்சாளர்கள் பேசினால் அதை கேட்க மக்கள் அணி திரள்வார்கள், அறிவுக்கு தீனி போடும் வகையில் இம்மையிலும் மறுமையிலும் நன்மையை ஈட்டித்தரும் வகையில் மார்க்கம் சார்ந்த பயான்கள் இடம் பெற்றால் அதில் முஸ்லிம்கள் அணியணியாக குழுமுவது நாம் வழக்கமாக பார்க்கும் ஒன்று.

ஆனால், ஜூலை நான்கு, சென்னையை ஸ்தம்பிக்க வைத்த இந்த மாபெரும் மக்கள் வெள்ளம் குழுமியதன் நோக்கம் தான் என்ன? தஞ்சையில் இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்ததை போல் தவ்ஹீத் மாநாடு என்றா? பல மார்க்க பயான்கள் நிகழ்த்தப்படும் என்றா? குர் ஆன் வகுப்புக்கள் நிகழ்த்தப்படும் என்றா? இல்லை!!

எந்த தனிநபருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படாமல், எந்த மார்க்க சொர்ப்போழிவுகளும் இல்லாமல், இட ஓதிக்கீட்டுக்கான கோஷம் விளித்து பின் கலைந்து செல்ல வேண்டும என்ற ஒற்றை குறிக்கோளுடனே தவ்ஹீத் ஜமாஅத் மக்களை அழைத்தது..

தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் சாரை சாரையாக மக்கள் அணிதிரண்டதை பார்த்த போது எனது கண்கள் கலங்கின..

தவ்ஹீத் ஜமாத்தின் மீது மக்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கையும் அன்பையும் தவிர வேறு எதையும் அங்கு என்னால் காண முடியவில்லை.

கர்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள், நடந்து செல்லவே சிரமப்படக்கூடிய வயதானோர் என்று அந்த திடலை நிரப்பியவர்களை பார்க்கும் போது, "தவ்ஹீத் ஜமாஅத் கூப்பிடுகிறதா?, நாங்கள் வருவோம்! எப்பாடு பட்டாவது வருவோம்!! , என்ற மனக்கண்ணோட்டம் தான் அவர்களிடம் வெளிப்பட்டது.

5 கிலோமீட்டராக முதலில் அறிவிக்கப்பட்ட பேரணி, பின்பு மக்களின் சிரமத்தை குறைப்பதற்காக ஒரூ கிலோமீட்டராக குறைக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்திலிருந்து துவங்கிய பேரணி, தீவுத்திடலை சென்றடைவதுக்குள் காவல் துறையினரும் தவ்ஹீத் ஜமாஅத் பிரதிநிதிகளும் திக்கு முக்காடி போய் விட்டார்கள்.

கூட்டத்தினிடையே நுழைந்து கொண்டு மக்களை ஒழுங்குப்படுத்தும் வேலையை செய்துக்கொண்டிருந்தார் பிஜே!

மிகப்பெரிய அறிஞர், தலைவர் என்ற பகட்டு சிறிதும் இல்லாமல், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் நிலையிலும் இத்தனை வெளிப்படையாக அவர் இயங்கிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது அவர் மீது நாம் கொண்ட அன்பும் மரியாதையும் இன்னும் அதிகமாகிறது.

பேரணி முடிவுற்றது தீவுதிடலின் வாயிலில். லட்சோப லட்சம் மக்களை எதிர்ப்பார்த்து ஏற்பாடு செய்யப்பட மாநாடு என்ற வகையில் ஜமாத்தார்கள், அவர்களது சக்திக்குட்பட்டு அனைத்து வசதிகளையும் மிகச்சிறப்பாக செய்து வைத்திருந்தார்கள்.

களைப்புற்று வருபவர்களுக்கு மோர்ப்பந்தல்கள், குடிநீர் பாக்கட்கள், மேடையை காண இயலாதவர்களுக்காக ஆங்காங்கே LED ஸ்க்ரீன்கள், உணவு ஸ்டால்கள், மருத்துவ முகாம்கள், அவசர ஆம்புலன்ஸ் வசதிகள், மொபையில் கழிப்பிடங்கள், தீவு திடலையும் கடந்து சென்னை அண்ணா சாலையில் நின்று கொண்டிருப்பவர்களுக்காக மைக் செட்கள், ராட்சச கேமராக்கள், மின்னொளிகள் (floodlights) என தீவுத்திடலில் அமைக்கப்பட்ட ஏற்பாடுகள் மலைக்க வைத்தன.

ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் மூன்று மூன்று நிமிடங்கள் பேசிய பிறகு சிறப்புரையாக பிஜே ஒன்றரை மனி நேரம் பேசினார்.

அவ்வப்போது மழை தூறல் இருந்த போதிலும், அனைவரது துஆவின் காரணமாக பலத்த மழையை அல்லாஹ் அன்றிரவு இறக்கவில்லை.

இறுதியாக உரையாற்றிய ஹாரூன் MP அவர்கள், "லட்சோபலட்சம் மக்கள் குழுமிய இந்த மாநாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உங்கள் கோரிக்கையை நிச்சயம் பிரதமரிடமும் சோனியாவிடமும் எடுத்து சொல்வதாக வாக்களித்தார்.

மாநாட்டின் உரைகளுக்கு நடுவே, காணாமல் போனவர்களை பற்றிய அறிவிப்பு அதிகமாக இருந்தது, கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தினால் ஏற்பட்ட ஒன்று என்பதை புரிய முடிந்தது.

எனது குடும்பத்துடன் நான் பயணப்பட்டது சிரமமாக எனக்கு தோன்றினாலும் , அங்கு நான் கண்ட காட்சிகளை பார்த்த பிறகு அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு, எனது கஷ்டங்களெல்லாம் எதுவும் இல்லை என்றானது. குழந்தைகளை தூக்கி சுமந்து வந்த தாய்மார்கள், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, பிள்ளைகளை தொலைத்து விட்டு தவித்துக்கொண்டிருந்தவர்கள், ஒரு சிறு வண்டியில், 30, 40 பேராக திக்கு முக்காடிய பயணங்கள், இயற்க்கை தேவைக்காக அவர்கள் அடைந்த சிரமங்கள் அனைத்துமே கண்களில் நீரை வர செய்பவை!

இட ஒதிக்கீட்டை குறித்து இத்தனை விழிப்புணர்வா? தமிழக மக்களிடையே ஏற்பட்ட இந்த புரட்சி, அதிசயிக்க வைக்கிறது!

வேறு வேறு இயக்கங்கள் அழைத்த போது திரளாத இந்த மக்கள், தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தவுடன் திரண்டு வருகிறார்கள் என்றால், இதில் சிந்திக்க பல விஷயங்கள் உள்ளன!

தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கையில் கருத்து வேறுபாடு கொண்ட பலர் வந்தார்களே, இவர்கள் அனைவரும் பிற இயக்கங்கள் அழைத்தால் செல்லக்கூடியவர்களா? நிச்சயம் இல்லை!

கொள்கையில் முரண்பாடு இருந்தாலும், இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள், உள தூய்மையுடன் எதையும் போராடுவார்கள் என்று அனைத்து மக்கள் மனதிலும் ஆணித்தரமாக இடம் பிடித்திருக்கிறது தவ்ஹீத் ஜமாஅத்!

போதும்! போதும்!! இனியும் தவ்ஹீத் ஜமாத்தின் மக்கள் சக்தியை கணிக்க இன்னொரு மாநாடு தேவையில்லை.

இந்த கோரிக்கைக்காக எந்த துரும்பையும் எடுத்துப்போடாத இன்ன பிற ஜமாத்தார்கள், தவ்ஹீத் ஜமாத்தின் இந்த மாநாட்டை விமர்சிக்க மட்டும் தயக்கம் காட்டவே இல்லை.

வீடு வீடாக சென்று மக்களை மூளை சலவை செய்தது ஒரு கூட்டம் என்றால், இட ஒதிக்கீடு கேட்பதே ஹராம் என்று மற்றொரு பக்கம்.
இவர்கள் சுயநலனுக்காக தான் மாநாடு நடத்துகிறார்கள் என்ற விமர்சனம் ஒரு பக்கம் என்றால், பிற இயக்க தலைவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு பக்கம் என இந்த மாநாட்டின் வெற்றியை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி கொண்ட பெட்டையர்கள் எடுத்துக்கொண்ட முஸ்தீப்கள் அனைத்தையும் அல்லாஹ் தூள் தூளாக்கி விட்டான்.

வசை பாடி திரிந்த கூட்டம் வாய் மூடி மௌனிகளாக ஆகி விட்ட நிலையில் எடுத்துக்கொண்ட குறிக்கோளில் வீறு நடை போட்டு செல்கிறது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் !!!

மாநாடு நடைபெற்ற மறுநாளே, பிரதமரிடமிருந்து அழைப்பு வருகிறதென்றால், தவ்ஹீத் ஜமாத்தின் மக்கள் சக்தி, ஆட்சியாளர்களை எந்த அளவிற்கு அசைத்திருக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

நாளைய நமது சந்ததிகள் தலை நிமிர்ந்து வாழ வழி ஏற்படுத்தி தந்த இந்த ஜமாத்திற்க்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நாம் நன்றி கடன்பட்டிருக்கிறோம்.

எடுத்துக்கொண்ட செயல்களில் இதே போல், அல்லது இதை விட சிறப்பாக நாம் செயலாற்றிடவும், ஏகத்துவம், நமது நாட்டில் தழைத்தோங்கவும், நமது அனைத்து உரிமைகளும் வென்றெடுக்கப்பட்டு நமது சமுதாயம் தலை நிமிரவும் நாம் இரு கரம் ஏந்தி அந்த ஏகனிடம் பிரார்த்திப்போம்.

மத்தியில் விரைவில் இட ஒதிக்கீடு கிடைத்திடவும் நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக