திங்கள், 10 மார்ச், 2014

இட ஒதுக்கீடு - தமுமுக கடந்து வந்த பாதை


கடந்த 1998 ஆம் ஆண்டு : 
இந்த கூட்டத்தை வைத்து சுய இலாபம் அடைய மாட்டோம் என்று, இட ஒதுக்கீட்டு கோரிக்கைக்காக திரண்ட லட்சக்கணக்கான முஸ்லிம்கள் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை தவ்ஹீத் ஜமாஅத்தினர் இன்று வரை கட்டிக்காத்து வருகின்றனர்.
தமுமுக அதை காற்றில் பறக்க விட்டது. அதற்கு இட ஒதுக்கீடு என்கிற சமூக நலனை விட, அரசியல் ஆதாயம் என்கிற சுய நலனே பிரதானமானது.

தவ்ஹீத் ஜமாஅத், அன்றைக்கு இட ஒதுக்கீட்டுக்கே முக்கியத்துவம் அளித்தது. இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்காக திரண்ட மக்களை காட்டி விலை பேசுவது பெரும் பாவம் என்பதில் உறுதியாய் நின்றது !

2006 :
ஒட்டு மொத்த தமிழகமும் கிடுகிடுங்கும் அளவிற்கு இட ஒதுக்கீடுக்காக மிகப்பெரிய தொடர் போராட்டங்களை நடத்தி தங்களுக்கு சமுதாய நலன் மட்டுமே உயிர் மூச்சு என்பதை மீண்டும் பறைசாற்றியது தவ்ஹீத் ஜமாஅத்.

திமுகவுடன் கூட்டணியில் இருந்த காரணத்தால் போராட்டம் நடத்தி அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்கிற சுய நலனை கருத்தில் கொண்டு
மாநிலத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரமே இல்லை என்று நா கூசாமல் புளுகியது தமுமுக.

இட ஒதுக்கீட்டுக்காக ஆணையம் அமைத்தார் என்கிற ஒரே பொது நலனை மைய்யப்படுத்தி அந்த வருட சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தது தவ்ஹீத் ஜமாஅத்.

அத்தனை வருடங்கள் கூட்டணியில் இருந்து, அது நாள் வரை இட ஒதுக்கீட்டுக்காக எந்த துரும்பையும் கலைஞர் நகர்த்தவேயில்லை என்று அப்பட்டமாக தெரிந்தும் கூட, வாரியப்பதவி, ஆளுனர் பதவி, தூதர் பதவி என அற்ப ஆசைகளுக்காக அந்த தேர்தலிலும் திமுகவிற்கே தமுமுக ஆதரவு தெரிவித்தது.

2007 :
மக்கள் எழுச்சியை கண்டு திமுக அரசு இட ஒதுக்கீட்டை சட்டமாக்கினாலும், தரப்பட்ட 3.5% கூட முறையாக முஸ்லிம்களுக்கு சென்று சேரவில்லை என்கிற குறையை சமூக நலனுடன் பல முறை தவ்ஹீத் ஜமாஅத் ஆட்சியிலுள்ளவர்களுக்கு எடுத்து சொன்னது. அதற்காகவும் போராட்டங்கள் பல நடத்தியது.

இட ஒதுக்கீடு கிடைப்பதை விடவும் கலைஞரின் அரவணைப்பை பிரதானமாக கருதிய தமுமுகவோ, அது ரோஸ்டர் முறையில் தலைமுறை கடந்த பிறகு தான் கிடைக்கும் என்று பொய் கூறி திமுகவிற்கு அப்பட்டமாக அடிமை சாசனம் எழுதினர், சமுதாயத்தை காவு கொடுத்தனர்.

2009 :
எத்தனையோ கோப தாபங்கள் இருந்த போதும், நம் சமூகத்திற்காக இட ஒதுக்கீடு தந்தார் என்பதற்காக, கலைஞருக்கு நன்றி செலுத்தும் முகமாய் 2009 தேர்தலில் எந்த பிரதிபலனுமின்றி திமுகவை ஆதரித்தது தவ்ஹீத் ஜமாஅத்.

சமுதாயத்திற்கு கிடைக்கப்பெற்ற இட ஒதுக்கீடு குறித்த அக்கறையில்லாத தமுமுகவினரோ அந்த நன்றியை மறந்து, எந்த சமுதாயக் காரணமுமின்றி (தங்களுக்கு அதிக சீட் தருவார் என்பதற்காக) அதிமுகவை ஆதரித்து, தங்களது பச்சோந்தித்தனத்தை தெளிவாக படம் பிடித்துக் காட்டினர்.

2011 :
சட்டமன்ற தேர்தலில், ஏற்கனவே அமலில் இருக்கும் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் என்கிற கோரிக்கையுடன் களமிறங்கிய தவ்ஹீத் ஜமாஅத், இரு திராவிட கட்சிகளையும் சம தூரத்தில் வைத்து, தங்கள் கோரிக்கைக்கு யார் செவி சாய்க்கிறார்கள் என பார்த்தது.

இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவது பற்றி தேர்தல் அறிக்கையில் கூட ஜெயலலிதா வாய் திறக்காத நிலையில், கலைஞரோ அதை தமது கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்.

அதிமுகவை விட திமுக தான் சமூகத்திற்கு சிறிதேனும் நன்மை செய்யும் என்கிற அன்றைய நிலையில், அந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து தாங்கள் என்றைக்கும் சமுதாய நலனிற்காக முடிவு செய்யக்கூடியவர்கள் தான் என்பதை மீண்டும் நிரூபித்தது தவ்ஹீத் ஜமாஅத்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டால் சாதி ஓட்டுக்கள் கிடைக்காது என்று ஜெயலலிதா கூறியும் கூட அதை பொருட்படுத்தாமல் தங்களது சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் ஆசைப்பட்டு, ஆதரிப்பதற்கு எந்த நியாயமுமில்லாத போதும், அதிமுகவை ஆதரித்து தாங்கள் சுய நலவாதிகள் தான் என்பதை மீண்டும் நிரூபித்தது தமுமுக.

2014 :
ஏற்கனவே அமலிலிருக்கும் இட ஒதுக்கீட்டை இந்த முறையாவது எவரேனும் உயர்த்தி தருவார்களா? என்கிற எதிர்பார்ப்பில் தவ்ஹீத் ஜமாஅத், தேர்தல் விதிகள் அமலுக்கு வரும் வரை காத்திருந்தது. அதிமுக அரசு கடந்த 2006 இல் செய்தது போல் இட ஒதுக்கீட்டுக்காக ஆணையம் அமைத்ததை அடுத்து, அதிமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தது தவ்ஹீத் ஜமாஅத்.

அதே சமயம், இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா அதிகரிக்கப்படாதா? யார் அதிகரித்து தருவார்? யார் ஏமாற்றுவார்? என்கிற சிந்தனை துளியும் இல்லாத தமுமுகவோ, தங்களுக்கு ஒரு சீட்டையாவது யார் தருவார் என்பதை அடிப்படையாக கொண்டு பேரம் நடத்தியது. அதிமுக ஒன்றை கூட தராது என்று முடிவானதும், உடனே சென்று கலைஞருக்கு ஆதரவு என்று திமுக பக்கம் சாய்ந்தது.

கடந்த 15 ஆண்டுகளாக, தவ்ஹீத் ஜமாஅத், இந்த சமுதாய நலனை மட்டுமே மைய்யப்படுத்தி செயலாற்றி வந்ததையும், தமுமுகவோ, ஒரு முறை கூட, ஒரே ஒரு முறை கூட இட ஒதுக்கீடு என்கிற சமுதாயக் கோரிக்கையை மைய்யப்படுத்தி தங்களது அரசியல் நிலைபாட்டினை அமைத்துக் கொண்டதேயில்லை என்பதையும் வரலாறு தெளிவாக பேசிக் கொண்டிருக்கிறது !

மனித நேயம், மக்கள் உரிமை என்பதெல்லாம் சுத்த பேத்தல் என மக்கள் விளங்கி பல வருடங்கள் ஆகி விட்டன !

இது போன்ற சமுதாயத்தின் துரோகிகளை இனம் கண்டு அவர்களை வேரோடு வீழ்த்த இந்த சமுதாயம் தயாராக வேண்டும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக