சனி, 25 அக்டோபர், 2014

அல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா?


ஒரு காரியத்தை சுட்டிக்காட்டி, இதை நீங்கள் கற்றுக் கொள்ளாதீர்கள் என்று சொல்லும் அல்லாஹ்,
அவ்வாறு சொல்லி விட்டு, அதை நீங்கள் செய்தால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் பலிக்கும் என்று சொல்வானா?
சூனியத்தை கற்பதும், கற்றதன் அடிப்படையில் செய்வதும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியம்.
அதனால் தான் அதை கற்காதீர்கள் என்று சொல்கிறான்.
கற்பதே குஃப்ர் என்றால் அதை செய்து அதனால் ஏற்படும் விளைவுக்கு அல்லாஹ் துணை நிற்பானா?
அவ்வாறு நம்பினால், ஷிர்க்கிற்கு அல்லாஹ் துணை நின்றான் என பொருளாகும் என்கிற ரீதியில் சிந்தித்தாலும் சூனியத்தை மெய்ப்பிக்க அல்லாஹ் துணை செய்ய மாட்டான் என்று புரியலாம்.
சூனியம் அல்லாத கணவன் மனைவி பிரித்தலை தான் நான் நாடினால் செய்வேன் என்று அல்லாஹ் இவ்விடம் கூறுகிறானே தவிர சூனியத்தை அல்ல.
அல்லது சூனியம் என்கிற இணை வைப்பை தான் சொல்கிறான் என்று மீண்டும் அடம்பிடிப்பார்கள் என்றால் இணை வைத்தலை அல்லாஹ் என்றைக்கும் உண்மைப்படுத்த மாட்டான் என்பதற்கு மற்றொரு சான்றை தருகிறோம்.
அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். 'அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?' (6:80)
இந்த வசனத்தில், சிலை வணங்கிகள் இப்ராஹீம் நபியிடத்தில் தங்கள் சிலைகளை அவர்கள் உடைத்ததால் ஆத்திரப்பட்டு இந்த சிலை உமக்கு தீங்கு செய்யும் என்று கூறினார்கள். அதற்கு மறுப்பு சொன்ன இப்ராஹிம் நபி, இந்த சிலை ஒன்றும் எனக்கு தீங்கு செய்யாது, என் இறைவன் நாடினாலே தவிர எதுவும் எனக்கு தீங்கீழைக்காது என்று சொன்னார்கள்.
இந்த வசனத்தின் படி, சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அதனால் இப்ராகிம் நபிக்கு தீங்கிழைக்க முடியாது என்று இவர்கள் சொல்வார்களா?
அல்லது அல்லாஹ் நாடினால் சிலைகள் தீங்கு செய்யும் என்கிற கருத்து வரும் என்று கூறுவார்களா??
சிலைக்கு சக்தி இருப்பதாக நம்புகிறவர்களிடம் அல்லாஹ் நாடினால் தான் தீங்கு செய்ய முடியும் என்று சொன்னால் தீங்குகள் அல்லாஹ்வால் தரப்படுகிறதே தவிர சிலைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அர்த்தம்.
சூனியத்திற்கு தீங்கு செய்யும் சக்தி இருப்பதாக நம்புகிறவர்களிடம், அல்லாஹ் நாடினால் தான் தீங்கு செய்ய முடியும் என்று சொன்னால் தீங்குகள் அல்லாஹ்வால் தரப்படுகிறதே தவிர சூனியத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அர்த்தம்.
எப்படி பார்த்தாலும் சூனியத்தின் மூலம் எதையும் செய்ய முடியாது, அல்லாஹ் அவ்வாறு நாட மாட்டான் என்பது தெளிவு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக