சனி, 25 அக்டோபர், 2014

வெட்கப்படுதல் பற்றி சில ஹதீஸ்கள்



வெட்கம் .. அது ஈமானின் ஒரு பகுதி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (9)
அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, "அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி (24)
மார்க்கத்தை அறிய வெட்கப்படக் கூடாது !
பெண்களில் அன்சாரிப் பெண்கள் மிகச் சிறந்தவர்கள். (ஏனென்றால்) மார்க்கச் சட்டங்ளை அறிந்து கொள்வதை விட்டும் வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (500)
வெட்கம் தான் ஒரு காரியத்தை அழகாக்கும் ! கெட்ட வார்த்தை பேசுபவர் வெட்கமில்லாதவர் என்று கூறுகிறது இந்த ஹதீஸ்..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கெட்ட வார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப் படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அந்தப் பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: திர்மிதி (1897)
வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டு வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரி (6117)
பெண்களை விடவும் அதிகம் வெட்கப்பட்ட மாமனிதர் !
நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுள்ளவராக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி (3562)
மறைவிடங்களை பேணுதல் :
நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கும் இடத்திற்குச் சென்றால் தூரமாகச் சென்று விடுவார்கள்.
அறிவிப்பவர்: அல்முகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்: நஸயீ (17)
உங்களில் யாரேனும் குளித்தால் அவர் மறைப்பை ஏற்படுத்திக் கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: யஃலா பின் உமய்யா (ரலி)
நூல்: நஸயீ (403)
ஒருவரிடம் வெட்க உணர்வு இல்லையென்றால் அதுவே அவனை எதையும் செய்யத் தூண்டும் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத்தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான் நீ வெட்கப்படவில்லை என்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள் என்பதாகும்.
அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி (3483)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக