சனி, 25 அக்டோபர், 2014

ஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு



உங்கள் மத்ஹபில் என்ன அபத்தங்கள் எல்லாம் உள்ளன என்பதை உங்களுக்கு போதிக்காமலேயே உங்களை மத்ஹப் எனும் மாய வலையில் சிக்க வைத்திருக்கிறார்கள் மார்க்கமறியாத உங்கள் ஹசரத்மார்கள்.
அதற்கு சில சான்றுகளை இங்கே பார்ப்போம்.
ஹனஃபி மத்ஹப், அபு ஹனீஃபா இமாமை மையப்படுத்தி தோற்றுவிக்கப்பட்டது என்று தெரிந்திருக்கும் நீங்கள், அந்த அபு ஹனீஃபா இமாமை இந்த மத்ஹப் நுற்கள் எந்த அளவிற்கு வரம்பு மீறி புகழ்ந்திருக்கின்றன என்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் குர்ஆனுக்கு அடுத்த மகத்தான அற்புதம் அபூஹனிஃபா தான்.
நூல்: துர்ருல் முக்தார்
பாகம்: 1, பக்கம்: 52
குர் ஆனுக்கு அடுத்த அற்புதமே அபு ஹனீஃபா இமாம் தானாம்.. இதை யார் உங்களுக்கு சொன்னது? அல்லாஹ்வின் அற்புதமான குர் ஆனோடு அபு ஹனீஃபாவை ஒப்பிடும் உரிமையை உங்களுக்கு யார் அளித்தது?
அவரது மாணவர்களிடமும், அவரைப் பின்பற்றியவர்களிடமும் அவரது காலம் முதல் இன்று வரை ஞானத்தை அல்லாஹ் ஒப்படைத்து விட்டான். முடிவில் அவரது மத்ஹபின் அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.
நூல்: துர்ருல் முக்தார்,
பாகம்: 1, பக்கம்: 52
அபு ஹனிஃபா இமாமின் சட்டப்படி தான் ஈஸா நபி தீர்ப்பளிப்பார்களாம். இது அல்லாஹ்வையே கேலி செய்வதாகாதா? அல்லாஹ் ஈஸா நபியை உலகிற்கு அனுப்புகிறான் என்றால் அவர்களுக்கு இடப்படும் கட்டளை என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும்.
ஏற்கனவே பூமியில் நபியாக வாழ்ந்த அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகள், சட்டங்கள் தெரியத் தான் செய்யும், ஒரு அபு ஹனீஃபா தேவையில்லை, ஈஸா நபிக்கு சொல்லித் தர.. !
"நான் அபூஹனீஃபாவின் பரக்கத்தை நாடி அவரது கப்ருக்குச் செல்வேன். எனக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, அவரது கப்ருக்கருகே நின்று அல்லாஹ்விடம் கேட்பேன். விரைந்து அந்தத் தேவை நிறைவேற்றப்படும்'' என்று ஷாஃபி இமாம் கூறினார்கள்.
துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51
அல்லாஹ்வைத் தொழும் போது கூட கப்ரை நோக்கித் தொழக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். கப்ரைத் தொழுவதாகப் பிறருக்குத் தோன்றாமல் இருக்க நபியவர்கள் இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் இங்கு அபூஹனீபாவின் கப்ருக்கருகில் நின்று பிரார்த்தனை செய்தால் உடனே நிறைவேறும் என்று கூறி இமாம்கள் மீது பக்தி ஊட்டப்படுவதுடன் இணை வைப்பதற்கான வாசலும் திறந்து விடப்படுகின்றது.
ஷாஃபி, அபூஹனீஃபா ஆகிய இரண்டு இமாம்களுமே இது போன்ற சமாதி வழிபாட்டைக் கடுமையாகக் கண்டித்திருந்தும் அவர்கள் பெயரிலேயே இவ்வாறு இட்டுக் கட்டுவதற்கு இவர்களுக்கு வெட்கமில்லை.
அடுத்து, இவர்கள் எவ்வாறு சஹாபாக்களையே கேலி செய்கிறார்கள் என்பதை பாருங்கள்.
அபூஹனீஃபா அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் போன்றவராக இருக்கும் போது அவருக்கு இத்தகைய சிறப்புகள் எப்படி இல்லாமல் போகும்?
துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51
அதாவது, அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களும் அபு ஹனீஃபாவும் சமமாம் !
எந்த அபுபக்கர் சித்தீக்? நீங்கள் மலையளவு தர்மம் செய்தாலும் அவர்களது ஒரு கையளவு தர்மத்திற்கு அது ஈடாகாது என்று நபி (சல்) அவர்கள் சிலாகித்து சொல்கிறார்களே அந்த சத்திய சஹாபாக்களில் சிறந்தவரான அபுபக்கர் சித்திக் அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதரான அபு ஹனீஃபாவும் சமமாம் !
இவர்கள் தான் நம்மைப் பார்த்து சஹாபாக்களை ஏசுகிறோம் என்று விமர்சனம் செய்பவர்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக