சனி, 25 அக்டோபர், 2014

அறிவை வணங்கும் சலஃபிகள்


புஹாரியில் பதிவாகியுள்ள எல்லா செய்திகளும் சரியானவை தான் என்று, புஹாரி இமாமை மனித தன்மைக்கு அப்பாற்பட்டவராய் நம்புகிற கூட்டத்தாரிடம்
புஹாரியில் உள்ள முரண்பாடுகள், தவறான வரலாற்று குறிப்புகள் என பல சான்றுகளை அடுக்கிய பிறகும் அவர்களது தவறான நம்பிக்கையை விட்டும் வெளியேற மறுக்கின்றனர்.
புஹாரியிலும் தவறான‌ செய்திகள் உண்டு என்பதற்கு சான்றாக கீழ்காணும் ஹதீஸை தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் முன்பே சுட்டிக்காட்டியிருந்தனர்.
அம்ர் பின் மைமூன் என்பார் கூறியதாவது : அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன். அறிவிப்பவர் : அமர் பின் மைமூன் நூல் : புகாரி (3849)
இந்த செய்தி பொய்யானது, இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லவே இல்லை என்பது தான் நியாய உணர்வுள்ள ஒருவரது பதிலாக இருக்க வேண்டும்.
ஆனால், புஹாரி நூலை குர்ஆனுக்குரிய அந்தஸ்த்துடன் காணும் இவர்கள், இதற்கு கூட சப்பை கட்டு கட்டி முட்டு கொடுக்கத்தான் முயற்சிக்கின்றனர் என்பது வியப்பான ஒன்று.
இதன் அறிவிப்பாளரான அப்ர் பின் மைமூன் சஹாபியல்ல, அவர் நபி இவ்வாறு சொல்வதாகவும் சொல்லவில்லை என்று ஒரு பதிலை சொல்கிறார்கள்.
இதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். அவர் சஹாபியல்ல, அவர் நபி சொல்வதாகவும் சொல்லவில்லை.
ஆனால், இது நமது கேள்விக்கான பதிலாக அமையுமா??
அவர் சஹாபி இல்லை என்றால் சஹாபியுடன் தொடர்பில்லாத‌, வேறு வேறு நபர்கள் அறிவிக்கும் செய்திகளும் புஹாரியில் உண்டு என்கிற முடிவை தான் இதிலிருந்து பெறலாமே தவிர, இவர் சஹாபி இல்லை என்பதால் இந்த செய்தி உண்மை செய்தி தான் என்று கூறி விட முடியுமா?
இவர் நபி கூறுவதாக சொல்லவில்லை என்றால் நபி சொன்னதாக ஒரு பொய்யை இவர் சொல்லவில்லை என்கிற முடிவுக்கு வேண்டுமானால் வரலாமே தவிர, இது பொய்யே இல்லை என்று சொல்ல முடியுமா?
ஆக, இவையெல்லாம் இந்த ஹதீஸை நியாயப்படுத்த உதவாது.
இது போக‌, இந்த சம்பவம் உண்மையில்லை, இது அமர் பின் மைமூனின் கற்பனை என்று இமாம்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள், ஆகவே இதை அவரது கற்பனை, அவர் கண்ட கனவு என்பதாக புரிய வேண்டும் என்று ஒரு பதிலை சொல்கிறார்கள்
இவர்கள் தங்கள் கொள்கைக்கு ஆதரவாக பேசுகிறார்களா அல்லது நமக்கு பாயின்ட் எடுத்து தருகிறார்களா என்று நமக்கு புரியவில்லை.
காரணம், இது உண்மையாக நடந்திருக்காது, இது அவரது கற்பனை என்பது தான் நமது வாதம்.
கற்பனையை கூட உண்மை செய்தியாக அவர் அறிவிக்கிறார், அதையும் புஹாரி இமாம் பதிவு செய்திருக்கிறார்கள் என்கிற‌ வகையில் கற்பனைகளும் பொய்யான செய்திகளும் கூட புஹாரி நூலில் இருக்கத்தான் செய்கிறது என்பது தான் நமது அடிப்படை வாதமே !
நமது வாதத்திற்கு பதில் கொடுக்கிறேன் என்று கூறி, நமக்கு ஆதரவாய் தான் பேசி வருகிறார்கள் என்பது ஒரு பக்கம்..
அத்துடன், இது எனது கற்பனை தான் என்றோ, நான் கனவில் கண்ட சம்பவம் தான் இது என்றோ அம்ர் பின் மைமூன் சொல்கிறாரா? என்றால் இல்லை.
அவர் அவ்வாறு சொல்லாத போது இப்படித்தான் இந்த ஹதீஸை புரிய வேண்டும் என்று இவர்களாக தங்கள் புத்திக்கு முன்னுரிமை கொடுத்து இந்த ஹதீஸுக்கு முட்டுக்கொடுப்பதை காண்கிறோம்.
அறிவுக்கு எட்டவில்லை என்றால் ஹதீஸை நிராகரிக்கலாமா? தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வை வணங்காமல் தங்கள் அறிவைத்தான் வணங்குகிறார்கள் என்று நம்மை விமர்சனம் செய்யும் இவர்களை நோக்கி
நாம் இதே கேள்வியை கேட்கிறோம்,
ஹதீஸில் இல்லை என்றாலும் அதை கற்பனை என்று தான் விளங்க வேண்டும் என்று இவர்களது புத்திக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு ஹதீஸை நியாயப்படுத்துவது மட்டும் சரியா?
தங்கள் அறிவை வணங்குவது சரியா?
இப்படி தான் இமாம்கள் விளக்கமளிக்கிறார்கள் என்று கூறி இமாம்களை வணங்குவது சரியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக