செவ்வாய், 5 நவம்பர், 2013

தனி நபர் துதி


""மரணத்திற்கு பிறகு வாழ்க்கையுண்டு - பழனி பாபா"

இப்படி ஸ்டேடஸ் இடுவது தவறான அணுகுமுறையாகும்.

பழனி பாபா தமது உரையில், சென்னையிலிருந்து இன்று மதுரைக்கு ரயிலில் வந்தேன், பயணம் முழுக்க தூங்கவேயில்லை என்று ஏதேனுமொரு கூட்டத்தில் பேசினார் என்று வைப்போம்.

""சென்னை முதல் மதுரை வரை தூங்காமலேயே பயணம் செய்தேன் - பழனி பாபா"

இப்படி நீங்கள் இது பற்றி ஸ்டேடஸ் இட்டால் அது தவறில்லை, நான் குறை சொல்ல மாட்டேன். அது அவரது தனிப்பட்ட விஷயம், அவரது தனிப்பட்ட விஷயத்தை அவர் தான் சொல்ல முடியும்.. அதை சொன்னார், அதை நீங்கள் எடுத்து சொன்னீர்கள்.
இது தவறில்லை. (இது முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்பது நோக்கத்தை பொறுத்தது, அது வேறு விஷயம்)

அதே சமயம்,

""முஃமீன்கள் சொர்க்கம் செல்வார்கள் ‍‍‍- இப்படிக்கு பழனி பாபா ""

என்று ஸ்டேடஸ் போடலாமா?? என்றால் கூடாது.

முஃமீன்கள் சொர்க்கம் புகுவார்கள் என்பது இஸ்லாமிய உலகிற்கு தெரிந்த ஒன்று. குர் ஆனின் அடிப்படை செய்தி அது.

ஒரு வேளை, அதை விளக்கி தர பழனி பாபா தேவைப்படலாம் என்றாலும் அவர் இதை சொன்னவர் ஆக மாட்டார். அவர் இதை சொல்லவில்லை என்றாலும் இது அனைவராலும் ஏற்றுக் கொண்ட, தொடர்ந்து நம்பி வருகிற ஒன்று. இதை நபி (ஸல்) அவர்கள் கூட பல முறைகளில் சொல்லியுள்ளார்கள்.

அப்படியிருக்க, மார்க்கம் சார்ந்த விஷயங்களை தனி நபருடன் தொடர்புப்படுத்தி பேசும் போது, ஒன்று அவர் தான் இதை முதலில் சொன்னார் என்கிற கருத்தை அது தரும்,
அல்லது அவர் சொல்வதன் மூலம் இந்த கருத்து இன்னும் வலிமை பெறுகிறது என்று ஆகும்.
இரண்டுமே ஆபத்து !!

அது போல தான்,மரணம் வாழ்க்கையின் முடிவு அல்ல., (அடுத்த) வாழ்க்கைக்கான ஆரம்பம் என்கிற தத்துவமும்.

இது இஸ்லாமிய தத்துவம். இஸ்லாத்தின் அடிப்படை செய்திகளை இஸ்லாத்துடன் தான் தொடர்புப்படுத்த வேண்டுமே அல்லாமல் தனி நபருடன் தொடர்புப்படுத்தக் கூடாது.

இதை நான் வலியுறுத்துவதற்கு ஒரு காரணம் உண்டு.

தப்லீக் ஜமாஅத்தினர், மத்ஹப்வாதிகள் போன்றோரின் மார்க்க நம்பிக்கை எந்த அள‌விற்கு இருக்கும் என்பது நமக்கு தெரியும்.

தப்லீக்கிலேயே ஊறிப் போன ஒருவர், அல் ஃபாத்திஹா சூராவிற்கு விளக்கம் கொடுக்கிற போது கூட எப்படி பேசுவார் தெரியுமா?

அல்லாஹ் தான் மறுமை நாளின் அதிபதி என்று அல் ஃபாத்திஹா சூராவில் இருப்பதாக முன்னோர்கள் பலர் சொல்லியுள்ளனர்.

உன்னையே நாங்கள் வணங்குகிறோம், என்று இந்த சூராவில் நாம் பிரார்த்தனை செய்ய சொல்லி வசனம் உள்ளது என ஷேக் முஹம்மது பின்னு ஹிப்பான் சொன்னார்..

என்று, அல்லாஹ் சொன்னது, அதை வாங்கி நமக்கு தந்த நபி சொன்னது.. என நேரடி சான்றுகள் இருக்கின்ற இடங்களில் கூட, அந்த மவ்லானா சொன்னார், அந்த அவ்லியா சொன்னார் என்று சேர்த்து தான் சொல்வார்கள்.

அதாவது, அல்லாஹ்வின் வசனங்கள் கூட இந்த அவ்லியாக்களின் விளக்கங்கள் மூலமே மதிப்படைகிறது என்கிற பாரதூரமான வழிக்கேட்டிற்கு நம்மை அழைப்பது இதன் சாராம்சம்.

தனி நபர் வழிபாட்டிற்கும், குர் ஆன், ஹதீஸ் அல்லாத மூன்றாவது வழிக்கு இச்சமூகம் திசை மாறிடவும் இத்தகைய வழிமுறை ஒரு முக்கிய காரணம் !

இன்று, குர்ஆன், ஹதீஸ் தொடர்பான செய்திகளை பகிரும் போது பழனி பாபா சொன்னார் என்று சொல்வது, கூடவே சாகிர் நாயக்கின் படங்களை சேர்த்து போடுவது போன்ற செயல்கள் முகனூலில் பரவலாக காணப்படுகிறது.
அதை கண்டிக்கவே இந்த பதிவு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக