வியாழன், 17 ஜூலை, 2014

ஒட்டு மொத்த உலகிற்கும் சவால் !



சோதனைக்கு உட்படுத்த இயலாதவைகளை சோதித்து பார்த்து தான் நம்புவேன் என்று சொல்லக்கூடாது.

சொர்க்கம் நரகம் இருப்பதை சோதித்து பார்க்க முடியாது, எனவே அல்லாஹ் சொல்லி விட்டான், அதனால் நம்புகிறோம் என்று கூறி நம்ப வேண்டும்.

இன்னும், மலக்குமார்கள், ஜின்கள், ஷைத்தான், பிற்காலத்தில் வர இருக்கும் தஜ்ஜால் போன்றோரை சோதித்துப் பார்க்க இயலாது. 
அவற்றையெல்லாம் அல்லாஹ் சொல்கிறான் என்பதற்காகவே நம்பலாம்.

ஆனால் எதையெல்லாம் சோதனைக்கு உட்படுத்த முடியுமோ அவற்றை சோதித்துப் பார்த்து தான் நம்ப வேண்டும்.

சிலைகளை கடவுளாக வணங்கிய கூட்டத்தாரிடம் இத்தகைய சோதனையை செய்து பார்க்க தான் அல்லாஹ் சொல்கிறான்.

இது தான் எங்கள் கடவுள் என்று சொன்னவர்களிடம், இதை உன் கடவுள் என்கிறாயே, இவற்றுக்கு இருக்கும் கால்களை கொண்டு இவற்றால் நடக்க இயலுமா?
இவற்றுக்கு இருக்கும் கைகளை கொண்டு இவற்றால் பிடிக்க இயலுமா?
இவற்றுக்கு இருக்கும் கண்களைக் கொண்டு இவற்றால் எதையாவது பார்த்திட தான் முடியுமா?

என்று நபியிடம் கேள்வியெழுப்ப சொல்கிறான்.

அத்துடன் நிறுத்தாமல்,
இவற்றுக்கு ஆற்றலும் சக்தியும் இருப்பது உண்மையென்றால் இவற்றை எனக்கெதிராக சூழ்ச்சி செய்ய வையுங்கள் பார்க்கலாம் என்று நபியை சவால் விட சொல்கிறான் அல்லாஹ் !

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? ''உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக! (7:195)

சிலைகள் விஷயமாக நபி (சல்) அவர்கள் விடுத்த சவாலை சூனியம் தொடர்பாக நாங்கள் விடுக்கிறோம்.

சூனியத்தால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்த இயலும் என்று நம்புகிறவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்ளுங்கள்.
உலகில் தலை சிறந்த சூனியக்காரர் என்று நம்பப்படுகிற எவனையாவது அழைத்து வாருங்கள்.
அவனுக்கு முழு பாதுகாப்பையும் நான் வழங்குகிறேன்.

எந்த புறசாதனங்களுமின்றி சூனியத்தின் மூலம் என்ன செய்ய இயலும் என்று அவன் சொல்கிறானோ அதை அவன் எனக்கு செய்து காட்டட்டும்.

பொது மேடையில் உலகமே பார்க்கும் வகையில் நான் அமர்ந்து கொள்கிறேன்.
என் சட்டை , தலை முடி, விரல் நகம் என என்னிடமிருந்து என்ன வேண்டுமோ நான் தருகிறேன்.

இந்த தேதியில் இந்த நேரத்தில் நான் ஊமையாகி விடுவேன் என்று அறிவித்து விட்டு எனக்கு செய்து காட்டட்டும்,
அவன் சொல்வது போல் என் கால்கள் முடமாகி போகட்டும் பார்க்கலாம்,
அவன் சொல்வது போல் எனக்கு வேறெந்த தீங்கையும் எந்த புறசாதனங்களுமின்றி சூனியத்தின் மூலம் செய்து காட்டட்டும்.

அப்படி செய்து விட்டால் என் சார்பில் அவனுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக தருகிறேன்.

- ரமலான் தொடர் உரையில் சகோ. பிஜெ சவால் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக