ஞாயிறு, 15 ஜூலை, 2012

மனசாட்சியை அளவுகோலாக கொள்ளலாமா?

குர் ஆனிலும் ஹதீஸிலும் தடை செய்யப்படாத ஒன்றை சரியா தவறா? என்று முடிவு செய்வதற்கு நமது மனசாட்சியை அளவுகோலாக கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள் .
நூல்: அஹமத் 17320

//குர்ஆனிலும் ஹதீஸிலும் தடை செய்யப்படாத ஒன்றை..//

அப்படி என்றால் குர்ஆனும், ஹதீஸும் ஆகுமாக்கிய ஒன்றை நமது இஷ்டப்படி தடை செய்து கொள்ளலாமா? விளக்கம் தேவை..




ஸலாம்.

முதலில், தடை செய்யாத ஒன்று என்பதற்கும், அனுமதித்த ஒன்று என்பதற்கும் வேறுபாடு உள்ளது. 

இஸ்லாம் தடை செய்யாத ஒன்று என்பதனுடைய பொருள், மார்க்கம் அல்லாத ஒரு விஷயம் என்பதாகும்.
நமது அன்றாட செயல்பாடுகளை மார்க்கம் - மார்க்கம் அல்லாதது என்று இரண்டாக பிரித்து விடுங்கள். பின்பு, 
  • மார்க்க விஷயங்களை செய்யலாமா கூடாதா என்பதை முடிவு செய்ய, அந்த செயலை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
  • மார்க்கம் அல்லாத விஷயங்களை செய்யலாமா கூடாதா என்பதை முடிவு செய்ய அந்த செயலை இஸ்லாம் தடுக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
உதாரணமாக, முஹர்ரம் ஒன்பது அன்று நோன்பு வைக்கலாமா கூடாதா என்று முடிவு செய்ய, அதை இஸ்லாம் அனுமதிக்கிறதா என்று பார்க்கிறோம். அனுமதிக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதை செய்கிறோம்.
அதுவே மிஹ்ராஜ் அன்று நோன்பு வைக்கலாமா கூடாதா என்பதை முடிவு செய்ய, அதை இஸ்லாம் அனுமதிக்கிறதா என்று பார்க்கிற போது அதை அனுமதிக்கிற எந்த ஒரு கட்டளையும் இஸ்லாத்தில் இல்லை, ஆகவே கூடாது என்று முடிவுக்கு வருகிறோம். இது மார்க்க விஷயத்திற்கான அளவுகோல் !

அதே போன்று மார்க்கம் அல்லாத ஒரு விஷயம், உதாரணமாக பஸ்ஸில் பயணிக்கலாமா கூடாதா என்று முடிவு செய்ய, இஸ்லாம் இதை தடை செய்கிறதா என்று பார்க்கிறோம், இஸ்லாம் இதை தடுத்ததாக எந்த கட்டளையும் இல்லை, ஆகவே அதை கூடும் என்கிறோம்.

இது அடிப்படை..

இப்போது, சம்மந்தப்பட்ட  ஹதீஸின் படி, இஸ்லாம் எதை தடுக்கவில்லையோ, அதை நம் மனசாட்சியின் படி முடிவு செய்ய வேண்டும் என்பது உலக விஷயங்களை தான் குறிக்கும். 

சரியான உதாரணம் ஒன்றை சொல்ல வேண்டுமென்றால், ரத்த தானம் அல்லது உறுப்புகள் தானம் செய்வதை சொல்லலாம்.
நமது மரணத்திற்கு பிறகு நமது இதயத்தை இன்னொருவருக்கு தானம் செய்யலாமா கூடாதா என்கிற கேள்விக்கு விடையை அறிய இஸ்லாத்தை தேடினால், இஸ்லாம் இந்த செயலை எங்குமே தடை செய்யவில்லை. இப்போது இதை செய்யலாமா கூடாதா என்பதை நமது மனசாட்சியின் படி தான் முடிவு செய்கிறோம். நாம் நமது இதயத்தை தானமாக கொடுப்பதனால் இன்னொரு உயிர் பிழைக்கிறது என்பதால்   இந்த மனிதாபிமான செயலை நமது மனசாட்சி நியாயப்படுத்துகிறது, சரி காண்கிறது !!!

அதே போன்று, மார்க்கம் தடுக்காத ஒன்றை நாம் தடுத்துக்கொள்ளலாமா? என்று கேட்கிறீர்கள்.

தடுத்துக்கொள்ளலாம் ! 

 உதாரணமாக, ஆண், பெண் இணைந்து கல்வி கற்பதற்கு மார்க்கத்தில் நேரடியாக தடை உள்ளதா என்றால் இல்லை. பெண்கள் அவர்களுக்குரிய ஹிஜாபுடன் அந்நிய ஆண்கள் இருக்கும் சபையில் தாராளமாக வரலாம், அமரலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கவே செய்கிறது.
இருப்பினும், இன்றைய சூழலில், ஆண் - பெண் இணைந்து கல்வி கற்கும் போது ஏற்ப்படக்கூடிய மிக மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு, இவ்வாறு ஒரே கல்விக்கூடத்தில் இரு பாலரும் சேர்ந்து படிக்கும் முறையை நமக்கு நாமே தடுத்துக்கொள்கிறோம்.
தீங்கு என்று நம் மனசாட்சிக்கு தெரிய வருமேயானால், அதை இஸ்லாம் தடுக்கவில்லை என்ற போதிலும் நாம் தடுத்துக்கொள்ளலாம் !!

இது எனது கருத்து .. மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்..

வஸ்ஸலாம்.. 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக