திங்கள், 21 அக்டோபர், 2013

சூனியத்தை நம்பினால் சினிமா எடுக்கலாம்


ஒரு சிறுவன் இருந்தான். சில நாட்களாகவே இயல்புக்கு மாற்றமாய் இருந்தன அவனது நடவடிக்கைகள். நாட்கள் செல்ல செல்ல அவனுக்குள் வினோதமான, அதிர்ச்சி அடையத்தக்க மாற்றங்களை கண்ட போது தான் அவன் சூனியத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறான் என்றும் அல்லது ஜின் அவனிடத்தில் குடி கொண்டு விட்டது என்றும் மக்கள் புரிந்தார்கள்.
எந்த அளவுக்கென்றால், ஒரு முறை தன் வீட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்த அவன், ஃபேன் இடுவதற்காக சுவிட்ச்சை தேடியிருக்கிறான், தென்படவில்லை, உடனே கண்களால் ஃபேனையே கூர்ந்து பார்த்த வண்ணம் இருந்தான், ஃபேன் ஓடத் துவங்கியது !!!!!!!!

இது 13ஆம் நம்பர் வீடு பேய் படக் கதை என்று நினைக்காதீர்கள்.

இது, தமிழ் சலஃபி என்று தன்னை பற்றி எண்ணிக்கொள்ளும் ஒருவர், சூனியம், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கும் போது என்னிடம் கூறியது.

இது போன்ற சூனிய வித்தை செய்பவர்கள் நம் ஊரிலேயே பலர் இருக்கிறார்களாம்.

சரி பாய், அப்படிப்பட்ட ஒரு நபரிடம் எனக்கு சூனியம் செய்யுமாறு ஏவுங்கள், என்னிடமிருந்து எது வேண்டும், தருகிறேன் என்று சொன்னால், சூனியம் செய்ய ஏவுவது குஃபுர், ஆகவே ஏவ மாட்டேன் என்றார்.

(இது தவறான பதில் என்றும், குர்ஆன் ஹதீஸ் படி செய்து காட்ட சொல்லி கே ட்டால் செய்து காட்டத்தான் வேண்டும் எனவும் பலமுறை விளக்கப்பட்டிருக்கிறது என்பது தனி விஷயம்.)

சரி, நீங்கள் ஏவ வேண்டாம், அப்படியான நபர் எங்கே இருக்கிறார் என்கிற முழு முகவரியை தாருங்கள் , வீடியோ சகிதம் நான் சென்று பார்த்து நீங்கள் சொல்வது உண்மை என்றால் சூனியத்தை ஏற்றுக் கொள்வதோடு, நான் எடுத்த வீடியோவை கொண்டு உங்களுடன் இணைந்து நானும் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறேன் என்றேன்.

இதற்கும் ஒத்துழைக்க மறுத்த அந்த சூனியப் பிரியர், முகவரியெல்லாம் தர மாட்டேன், அங்கு சென்று அவனை போல் நீங்களும் சூனியம் செய்யும் அளவிற்கு உங்கள் ஈமான் பலகீனப்பட்டு விட்டால் அந்த பாவம் என்னை தான் சேரும். ஆகவே முகவரியை எல்லாம் நான் தர மாட்டேன் என்றார் மேற்ப்படி சூனியப்பிரியர்.

அதாவது, நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்களேன், வளைத்து வளைத்து கூட அடித்துப் பாருங்களேன்.. ஊஹும்..சொல்லவே மாட்டோமே.. இருந்தால் தானே சொல்வதற்கு.. என்பதே இவர்களது நிலை !
ஜாதகம், ஜோசியம், பூஜை புரஸ்காரம், தீட்டு, ராவுகாலம், எமகண்டம் என்றெல்லாம் பொய் சொல்லி ஹிந்துக்கள் தங்கள் மதத்தை வளர்க்க முயற்சிப்பதை போன்றும்,

இயேசு நம் பாவங்களை சுமந்தார், அவரது நாமத்தினாலே இன்று உங்கள் பாவங்கள் அனைத்தையும் கழுக போகிறோம் என்று, அற்புதப் பெருவிழாக்கள் நடத்தும் போலி கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்திற்காக பொய் கூறி திரிவதை போன்றே தான் மேற்படி சலபி கும்பல் பிரசாரம் செய்து திரிகின்றது.

ஜோசியக்காரனிடம் நீ சொல்பவை வெறும் கற்பனையே, உண்மை என்று நிரூபிக்க முடியாது என்று எவரேனும் கூறினால் அவன் எப்படி ஒப்புக்கொள்ள மாட்டானோ, அதற்கு அச்சு பிசகாமல் தான் இந்த சூனிய விரும்பிகளும் செயல்படுகிறார்கள் !
எப்படி ஜாதகப் பொருத்தம் பார்ப்பவனால் தான் சொல்வதை நிரூபிக்க முடியாதோ, அதே போன்றே இவர்களாலும் மேலே இவர்கள் சொன்ன அத்தகைய சிறுவனையும் காட்ட இயலாது, அந்த சிறுவனுக்கு சூனியம் வைத்தவனது முகவரியையும் தர முடியாது !!

பேசாமல் சினிமா படம் வேண்டுமானால் எடுக்கலாம்.. நல்ல போணியாகும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக