சனி, 17 ஆகஸ்ட், 2013

இரவு தொழுகை வீட்டில் தொழுவதே சிறந்தது


இரவு தொழுகையை பள்ளிவாசலில் தான் தொழ வேண்டும் என்கிற கட்டாயமில்லை, வீட்டிலும் தொழலாம் என்று புரிவதை விட பள்ளிவாசலில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் அதிக சிறப்புக்குரியது என்று புரிவது தான் சரியான புரிதல்.

பலர் இந்த உண்மையை அறியாத காரணத்தால், வீட்டில் பல வேலைகள் இருந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டு, அவசர அவசரமாக பள்ளிவாசலுக்கு செல்கிறார்கள், கேட்டால் நல்லதோர் ரமலானில் பள்ளிவாசலுக்கு செல்வதை தவிர்க்க கூடாது என்கிறார்கள்.

இதோ இவர்களுக்கான ஹதீஸ்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாய்களால் ஒரு அறையைத் தயார் செய்தார்கள். அதில் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள்.
இதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள்.
பின்னர் மக்களிடம் வந்து, 'உங்கள் செய்கையை நான் அறிந்திருக்கிறேன்.
மக்களே! உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி) நூல்: புகாரி 731

கடமையான தொழுகை மட்டுமே பள்ளிவாசலில் தொழப்பட வேண்டியவை. அது தவிர மற்ற தொழுகைகள் வீடுகளில் தொழுவதே அதிக நன்மைகளை பெற்று தரும்.

இருப்பினும் வீட்டில் தொழலாம் என்று நினைத்து, அது பல்வேறு காரணங்களால் தொழப்படாமல் விடுபட்டு போவதை தவிர்க்க பள்ளிவாசலுக்கு செல்கிறோம் என்றால் அது தவறில்லை.

பலருக்கும் பள்ளிவாசல் சென்றால் தான் தஹஜ்ஜத் தொழுகை முறையாக நிறைவேறுகிறது என்பது உண்மை தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக