திங்கள், 2 டிசம்பர், 2013

தாவாக்களத்தில் இருப்பவர்கள் பேண வேண்டியவை



‍‍‍‍‍‍1. எந்த காரியத்திற்கும் நிய்யத் முக்கியம் என்கிற அடிப்படையில் தாவா செய்யும் களத்திலும் கூட நமது எண்ணங்கள் சரியான முறையில் அமைவது அவசியம். மறுமையே குறிக்கோளாக கொள்ள வேண்டும்.

2. தாவா செய்வது இந்த சமுதாயத்தின் மீது விதியாக்கப்பட்டிருக்கிறதே தவிர, ஏதோ நாம் விருப்பப்பட்டு இந்த தாவா களத்தில் இருப்பதாய் நாம் நினைத்து விடக்கூடாது. நன்மையை ஏவுவதும் தீமையை விட்டும் தடுப்பதும் நபியின் உம்மத்தினராக பிறந்த நம் ஒவ்வொருவர் மீதும் கட்டாயக்கடமையாக உள்ளது (பார்க்க 3:110,2:143)

3. நாம் ஒரு கொள்கையை கொண்டிருக்கிறோம் என்றால் அக்கொள்கையில் நாம் முதலில் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். நாம் இருப்பது தான் நேரானவழி என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு வேண்டும். சிறு ஊசலாட்டம் இருப்பவர்களும் தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தாத வரை தாவாவில் இறங்கக்கூடாது.

4. எந்த கொள்கையில் நாம் இருக்கிறோமோ அந்த கொள்கையில் நின்று தாவா செய்ய வேண்டும், எந்த நிலையிலும் யாருக்காகவும் வளைந்து கொடுக்கக்கூடாது. நடுநிலை வேஷம் போடுபவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள் என்பதற்கு சனிக்கிழமை மீன் பிடித்த சம்பவம் தொடர்பான செய்தியில் அதை செய்தவர்களையும் அது தொடர்பாய் நடுநிலை வேஷம் போட்டவர்களையும் அல்லாஹ் அழித்ததை நினைவில் கொள்ள வேண்டும். (பார்க்க 7:165)

5. எதிர் கொள்கையுடையவர்கள் எத்தகைய திறமைமிக்கவர்களாக, மெத்தம் படித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தவறான கொள்கையில் இருப்பதால் அவர்கள் கைவசம் எந்த ஆதாரமும் இருக்காது என்று அடிப்படையிலேயே நம்ப வேண்டும் (பார்க்க 40:35, 45:25)

6. இறைவனின் பாதையில் ஹிக்மத்தாக (விவேகமாக) அழைக்க வேண்டும். அழகிய அறிவுரைகளுடன் அழைக்க வேண்டும் (பார்க்க 16:125). நமக்கு தீங்கு இழைப்பவர்கள் தவிர, மற்ற அனைவரிடமும் அழகிய முறையிலேயே விவாதம் செய்ய வேண்டும். (பார்க்க 29:46)

7. தாவா பணி என்பது, நாளை மறுமை வரை நம்முடன் வரக்கூடிய நிலையான தர்மம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். (பார்க்க முஸ்லிம் 3084)

8. உண்மை எது என்பதை அறிய பெரும்பான்மை, சிறுபான்மை அளவுகோல் கூடாது. நாளை மறுமையில் பல காலம் பிரச்சாரம் செய்தும் எவருமே கேட்காத காரணத்தால் பின்னால் ஒரு மனிதன் கூட இல்லாத நிலையில் ஒரு நபி தனியாகவே வருவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறீயிருக்கிறார்கள்.

9. நாம் சொல்வதை எவருமே கேட்கவில்லை என்றாலும் கூட அதனால் நாம் துவண்டு விடக்கூடாது. ஒட்டு மொத்த சமுதாயமே நமக்கெதிராக அணி திரண்டாலும் நமது ஈமான் அதிகரிக்கவே செய்ய வேண்டும் (பார்க்க 3:173, 3:139)

10. கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புவது பொய்யனுக்கான அடையாளம் என்பதால் இதில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். அத்துடன், அடிப்படையற்ற ஊகங்களுக்கும் நாம் இடமளிக்கக்கூடாது சில யூகம் மிகவும் கெட்டது என்று அல்லாஹ் சொல்கிறான் (பார்க்க 49:12)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக