வெள்ளி, 19 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே - (நாள் 1)



இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


--- நாள் : 1---

உரிமையாளனுக்கே அதிகாரம் !


எந்தவொரு விஷயத்தை நாம் எடுத்துக் கொண்டாலும், அதற்கென்று சில அடிப்படை விதிகள், சட்ட திட்டங்கள் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவுகிறான் என்றால், அதற்கென சில விதிமுறைகளையும் சட்டங்களையும் வகுத்து தான் செயல்படுகிறான்.
அவ்வாறு விதிகள் வகுக்கும் போது தான் அவ்விஷயம் வெற்றியடையும்.
அந்த பள்ளிக்கூடம் செயல்படும் நேரம், யாரை சேர்க்க வேண்டும், யாரை பணியை விட்டு நீக்க வேண்டும், மாணவர்களுக்கான சீருடை போன்ற எதுவாக இருந்தாலும், அதன் நிறுவனர் எவரோ அவர் தான் அவற்றை தீர்மானிப்பார். அவர் முடிவு செய்ததன் அடிப்படையில் தான் அவை செயல்படவும் செய்யும்.
இதில் இன்னொரு நபர் சென்று தலையிட முடியுமா? தலையிட்டால் அவர் ஒப்புக் கொள்வாரா?
என்றால் நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார். எனது பொறுப்பில் உள்ள ஒரு விஷயத்திற்கு நான் தான் முடிவுகள் செய்வேன் என்கிற இறுமாப்பு மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கத் தான் செய்கிறது.

இன்னும், நாம் கட்டும் வீடாக இருந்தாலும், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் ஆடை, நாம் பயன்படுத்தும் வாகனம்.. என எதுவாக இருந்தாலும், நமக்கு சொந்தமான ஒரு காரியத்தில் முடிவுகள் எடுப்பது நாம் தான்.
இன்னொரு நபரின் தலையீட்டை நாம் விரும்ப மாட்டோம்.
அற்பமான மனிதனுக்கே இத்தனை உரிமையும் இறுமாப்பும் இருக்கும் போது, இந்த மார்க்கத்தின் சொந்தக்காரன் அல்லாஹ், அவனுக்கு அவன் சொந்தம் கொண்டாடுகிற இந்த மார்க்கம் மீது எத்தனை உரிமை இருக்கும்?

மனிதன், தனக்கு என்னவெல்லாம் உரிமைப்பட்டதோ அவற்றில் சட்டம் வகுக்கிறான். அதுவே, தொழுகை விஷயத்திலோ நோன்பு விஷயத்திலோ சட்டம் வகுப்பது என்றால் அதை மனிதன் செய்ய முடியுமா?
முடியாது. அவற்றின் சொந்தக்காரன் அல்லாஹ். அவனுக்கே அந்த அதிகாரம் அனைத்தும் உள்ளது.

இந்த அடிப்படையை விளக்குவது தான் இந்த தலைப்பின் நோக்கம்.

இஸ்லாத்தில் சட்டம் வகுக்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் இருக்கிறது.
இந்த கொள்கை தான் இஸ்லாத்தின் ஆணி வேர். இந்த கொள்கையை சொல்லக் கூடிய ஒரே ஜமாஅத்தாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் இருக்கிறது.
மற்ற எந்த இயக்கமோ ஜமாஅத்தோ இந்த அடிப்படையில் இருக்கிறதா என்றால் இல்லை.
முன்னோர்கள் என்றும் சஹாபாக்கள் என்றும் இமாம்கள் என்றும் கொள்கையில் தடம் புரண்டு தான் நிற்கின்றனர்.
நமக்கும் அவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் கூட அடிப்படை காரணம் இது தான்.

அந்த இமாமிடம் இது மக்ரூஹ், இந்த இமாமிடம் இது முஸ்தஹப்,
அந்த இமாமிடம் இது ஹலால், இந்த இமாமிடம் இது ஹராம்.. என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் மேலே நாம் சொன்ன அடிப்படை கொள்கையில் அவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது.
ஒரு இமாம் ஒன்றை சொல்வார், இன்னொரு இமாம் அதற்கு நேர் மாற்றமாக இன்னொன்றை சொல்வார், நாம் எதை பின்பற்றுவது?
இப்படி மார்க்கத்தில் சுய கருத்துக்களை புகுத்துவதை மார்க்கத்தின் சொந்தக்காரனான அல்லாஹ் எப்படி அங்கீகரிப்பான்?

நமக்கு சொந்தமான ஒரு வீட்டில் இன்னொருவன் நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்புவோமா?
நாம் நிர்வகிக்கும் ஒரு அலுவலகத்திலோ பள்ளிக்கூடத்திலோ இன்னொரு மனிதர் நுழைந்து அதிகாரம் செலுத்துவதை நாம் வேடிக்கை பார்ப்போமா?

ஒரு விஷயத்திற்கு யார் சொந்தக்காரரோ, யார் அதற்கு உரிமையாளரோ அவர் தான் அந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முழு உரிமை படைத்தவர் என்று அற்பத்திலும் அற்பமான இந்த மனிதனே எண்ணும் போது,
சர்வ வல்லமையும் படைத்த அந்த அல்லாஹ் அப்படி எண்ண மாட்டானா?
அவனுக்கு சொந்தமான இந்த மார்க்கத்தில் அதிகாரம் செலுத்தும் உரிமையை இந்த அற்பமான மனிதன் கையில் வழங்கி விடுவானா?


ஆக, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அவன் தான் அதிபதி என்பதையும், மார்க்கத்தில் சட்டமியற்றும் முழு அதிகாரம் அவன் ஒருவனுக்கே இருக்கிறது என்பதையும் அடிப்படையில் நாம் புரிய வேண்டும்.


சட்டமியற்றும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா? :

சட்டம்மியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் இருக்கிறதே தவிர, மனிதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறு மார்க்கத்தில் சட்டமியற்றுகின்ற தகுதியாவது மனிதனுக்கு இருக்கிறதா?

இந்த மனித இனத்திற்கு, ஏனைய எந்த படைப்புக்கும் வழங்கப்படாத ஏராளமான அருள்களை அல்லாஹ் புரிந்திருக்கிறான்.
பல சாதனைகளையும், பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்ற ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

சாதாரண குண்டூசியில் துவங்கி இன்று விஞ்ஞானத்தின் உச்சத்தில் நிற்பதாக சொல்கிறோமே, அவை அனைத்துமே மனிதனின் அறிவால் வந்தது தான்.

இதை மனதில் கொண்டிருப்பதால் தான் நாம் என்ன எண்ணுகிறோம் என்றால், இவ்வளவு பிரமிக்க வைக்கும் அறிவை கொண்டிருக்கும் மனிதனுக்கு மார்க்கத்தின் நன்மை தீமையை கண்டறியும் அறிவும் இருக்கும் என்று.
மனிதனுக்கு மார்க்கத்தில் சட்டமியற்றும் அதிகாரத்தை சர்வசாதாரணமாக நாம் வழங்கி விடுவதற்கு இந்த எண்ணம் தான் காரணமாக இருக்கிறது. 

மதுஹப் இமாம்களா? அவர்கள் சொன்னால் அது தான் மார்க்கம், அவர்கள் சரி என்று சொன்னால் சரி, தவறு என்று சொன்னால் தவறு.. என்கிற அளவிற்கு நாம் அவர்களை நம்பி விடுவதற்கு என்ன காரணம்?
மனிதனுக்கு மிகப்பெரிய அறிவை அல்லாஹ் வழங்கியிருப்பதை நாம் பார்க்கிறோம். அதைக் கொண்டு பலவிதமான நவீன காரியங்களை அவன் உருவாக்கியிருப்பதை நாம் அறிகிறோம்.
இதையெல்லாம் செய்யும் அறிவு அவனுக்கு இருக்கும் போது மார்க்கத்தில் சரி எது தவறு எது என்பதை தீர்மானிப்பதற்கும் அவனுக்கு அறிவு இருக்கும் என்று நாம் பாமரத்தனமாய் நம்பி விடுறோம்.

ஆனால், மனிதனின் அறிவு, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆற்றல், திறன் இவையெல்லாம் உலகத்தில் அவன் தன் திறமையை காட்டுவதற்கு தான் பயன்படுமேயொழிய, இஸ்லாமிய மார்க்கத்தில் எது சரி எது தவறு என்பதை அவனால் சரிவர முடிவு செய்ய முடியுமா?

நான்கு இமாம்களிடம் ஒரு மார்க்க சட்டம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள். அவரவர் சொல்வது தான் சரி என்று ஒவ்வொருவரும் கூறுகின்றனர் என்பதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.

அந்த நான்கில் ஒன்று தான் சரி. அது எந்த ஒன்றாக வேண்டுமானாலும் இருக்கட்டும், மீதமுள்ள மூன்றும் தவறு என்று அதிலேயே விளங்குகிறது தானே?
அந்த மூன்று நிலைகளை சொன்ன இமாம்கள் தவறிழைத்திருக்கிறார்கள் என்பதும் அதிலேயே விளங்குகிறது தானே?
கம்முனிஸம் தான் சரி என்று ஒருவர் சொல்வார், அவரும் உலகின் மிகப்பெரிய அறிவாளி என்று அறியப்பட்டவராக தான் இருப்பார்.
அதற்கு மாற்றமாக, கம்முனிஸ சித்தாந்தம் தவறு என்று பிரச்சாரம் செய்பவரை எடுத்துக் கொண்டால் அவரும் உலகின் மிகப்பெரும் அறிவு ஜீவியாக தான் இருப்பார்.

இன்னும், அரசியல் சாசனத்தை நிறுவுவதாகட்டும், குற்றவியல் சட்டங்களை உருவாக்குவதாகட்டும், எதிலுமே முரண்பட்ட பல்வேறு நிலைபாடுகளை மனிதர்கள் கொண்டிருக்கத் தான் செய்கின்றனர். அவர்கள் அனைவருமே கற்றறிந்த மேதைகளாக தான் காட்சியும் அளிக்கின்றனர்.

இவ்வாறு, இரண்டு அறிவு ஜீவிகள் இருவேறு முரண்பட்ட நிலைபாட்டை கொண்டிருப்பதிலிருந்து நாம் விளங்க வேண்டியது, மனிதனின் சிந்தனை என்பது சில வரையறைக்கு உட்பட்டது தான். அவனுடைய புரிதலிலும் சறுகல்கள் ஏற்படும். தவறுகளும் கவனக்குறைவுகளும் ஏற்படும், இன்னும் சொல்லப்போனால், ஏதேனும் உலகாதாயங்களை கருத்தில் கொண்டு வேண்டுமென்றே தவறிழைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மிகப்பெரும் விண்கலன் ஒன்றை மனிதன் கண்டுபிடிக்கிறான், அதற்கு தேவையான உபகரணங்கள், ராக்கெட் என பிரமிக்க வைக்கும் பல காரியங்களை தனது அறிவைக் கொண்டு அவன் உருவாக்குகிறான்.
பார்க்கும் நமக்கு அவனது அறிவை எண்ணி பிரமிப்பாய் இருக்கும்.

அனைத்தையும் செய்து விட்டு, அவனது கண்டுபிடிப்பின் வரைபடத்தையோ அதன் மாதிரியையோ எடுத்துக் கொண்டு கோவிலில் சிலைக்கு முன் வைத்து பூஜை செய்கிறான்.

இது பளிச்சென்று தெரிகிற முரண்பாடா இல்லையா?

பெரும் பெரும் விஞ்ஞான படைப்புகளை உருவாக்குகின்ற திறமையும் ஆற்றலும் அறிவுக்கும் பெற்ற மனிதனுக்கு, தான் நிற்பது வெறும் கல்லுக்கு முன்பு தான் என்பது தெரிந்ததா?
அந்த கல்லுக்கு எந்த சக்தியும் இல்லை, நமக்கு எந்த நன்மையும் தீமையும் செய்வதற்கு அந்த கல் சக்தி பெற்றிருக்கவில்லை என்பது புரிந்ததா?

இல்லை.

ஆக, பெரிய அறிவாளிகள் என்று அறியப்பட்டோர் எல்லாம், எல்லா சந்தர்ப்பங்களிலும் தங்கள் அறிவை சரிவர செயல்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

அறிவை கொண்டு சிலவற்றை சரியாக புரிவாவார்கள், சிலவற்றை முரண்பட்டு, தவறாகவும் புரிவாவார்கள்.

இன்னும் சொல்லப்போனால், இன்று சமூக தீமைகள் மலிந்து கிடக்கின்றதே அவற்றிலெல்லாம் யார் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்று சிந்தித்தால் பெரும் அறிவு படைத்தவர்கள் தான் ஈடுபடுகின்றனர்.

அரசியல்வாதிகளில் துவங்கி, ஊடகம், சினிமா துறைகள், மருத்துவத் துறை, கல்வித் துறை என எல்லா துறைகளிலும் முறைகேடுகள் மலிந்து தானே காணப்படுகிறது? அங்கெல்லாம் இருப்பது பெரும் அறிவு ஜீவிகள் தானே?

மாகி நூடுல்ஸ்ஸில் கலப்படம் எனக் கூறி இன்று அதை அரசாங்கம் தடை செய்திருக்கிறது என்றால், இந்த கலப்படத்தை இன்றைக்கு தான் அரசாங்கம் கண்டுபிடித்ததா?
எத்தனையோ ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்த பொருள் தான், ஆனால் அப்போதெல்லாம் முறைகேடாக அவை அனுமதிக்கப்பட்டு வந்தது என்றால் இதிலெல்லாம் ஈடுபடுவதும் கற்றறிந்த கல்விமான்கள் தானே?

வரதட்சணை வாங்குவது தீமை என்று கற்றறிந்த மக்களுக்கு தெரியாதா? அவர்கள் தானே இன்றைக்கு அதிகம் வரதட்சணை வாங்குகின்றார்கள்?

எனவே, அறிவு இருக்கிறது, எதையும் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதெல்லாம் ஒன்றை அவன் சரியாக தான் செய்வான் என்பதற்குரிய காரிணிகளாகுமா என்றால் நிச்சயம் ஆகாது.

உலக காரியங்களுக்கே இது தான் நிலை என்று சொல்லும் போது மார்க்கத்தில் நன்மை, தீமையை உருவாக்குகின்ற அதிகாரத்தை மனிதன் கையில் வழங்க முடியுமா?
நிச்சயம் முடியாது.

ஆக, இதன் காரணமாகவும் மார்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்பது புலனாகிறது.


உலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை :

ஆதம் நபியை அல்லாஹ் படைத்து இந்த பூமியின் அனைத்து ஆற்றலையும் அறிவையும் அவர்களுக்கு வழங்கியதாக சொல்கிறான்.
இன்று மனிதன் சொந்தம் கொண்டாடும் எல்லா அறிவும் ஆற்றலும், ஆதம் நபியிடமிருந்து வந்தவை தான் என்கிற அளவிற்கு அனைத்து அறிவையும் ஆதம் நபிக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான்.

அத்தகைய பேரறிவு கொண்ட ஆதம் நபி அல்லாஹ்வின் கட்டளையை மீறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தை நெருங்காதே என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்க, அதை மீறி அந்த மரத்தை நெருங்குகிறார்கள்.
கோபமுற்ற அல்லாஹ் அவரை அங்கிருந்து வெளியேற்றுகிறான்.

சரி, வெளியேற்றும் போதாவது, உனக்கிருக்கும் அறிவை கொண்டு நீ இவ்வுலகில் வாழ்ந்து கொள் என்று அல்லாஹ் சொன்னானா? என்றால் அப்படி அவன் சொல்லவில்லை.

திருமறை குர் ஆனில் அல்லாஹ் இது பற்றி சொல்லும் போது,

'இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள் என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.(2:38)

என்னிடமிருந்து நேர்வழி வரும் என்று தான் பெரும் அறிவு மேதையான ஆதம் நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். 
இன்னும் சொல்லப்போனால், மனித குலத்திற்கு அல்லாஹ்வால் இட‌ப்பட்ட முதல் கட்டளையும் இது தான்.

ஆக, பேராற்றலும் அறிவும் கொண்ட ஆதம் நபிக்கே சுயமாக நன்மை தீமைகளை முடிவு செய்யும் அதிகாரத்தை அல்லாஹ் வழங்கவில்லை எனும் போது, அவர்களை விடவும் பல மடங்கு அறிவு குறைவு உள்ள நம்மைப் போன்ற மனிதர்களுக்கு அல்லாஹ் அந்த அதிகாரத்தை வழங்கி விடுவானா? நிச்சயம், அதிகாரங்கள் அனைத்திற்குமான முழு உரிமை படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்று இதன் மூலமும் தெளிவாகிறது.



கலிமாவின் சாராம்சம் :

இஸ்லாத்தின் அடிப்படை கலிமா.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறில்லை என்பதும், முஹம்மது நபி (சல்) அவர்கள் அவனது தூதர் என்பதும் இந்த கலிமாவில் உட்பொருள்.

இந்த கலிமாவை ஒருவன் ஏற்றால் தான் அவனால் முஸ்லிமாக ஆக முடியும்.

கலிமாவை ஏற்பது என்றால் என்ன? வாயால் சொல்வதன் மூலம் கலிமாவை ஏற்றுக் கொண்டதாக முடியுமா? முடியாது.
வாயால் சொல்வது என்று பார்த்தால் அஃரிணைப் பொருட்கள் கூட சொன்னதையே திருப்பிச் சொல்லும், கிளி சொல்லும்.

ஆனால், கலிமாவை ஏற்பது என்பது உள்ளத்தால் அதை நம்புவது.
அதன் கருத்தை உள்ளத்தில் உள்வாங்குவது தான் அதை ஏற்பதற்கான முழு அர்த்தம்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்று சொல்லும் போது, அவனை எஜமானனாகவும் நம்மை அவனுக்கு அடிமையாகவும் நாம் நம்புகிறோம்.
அவனைத் தவிர வேறு எவருமே எனக்கு எஜமானன் இல்லை என்று நம்புகிறோம்.

இப்படி நம்பும் போது, மார்க்க கட்டளை என்று யாராவது சொன்னால் அதை நம்மால் ஏற்க முடியுமா? அது மேலேயுள்ள புரிதலில் அடங்குமா?
ஒருவனை எஜமானன் என்று நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்றால், அவனைத் தவிர வேறு எஜமானன் இல்லை என்று நம்பி விட்டோம் என்றால் சட்டங்கள் இயற்றும் முழு அதிகாரம் அந்த எஜமானன் கைகளில் மட்டுமே தான் இருக்கிறது என்பதையும் சேர்த்தே தான் நாம் ஏற்கிறோம்.

அந்த எஜமானன் அல்லாத இன்னொருவரிடமிருந்து  ஒரு சட்டத்தை நாம் எற்றோம் என்றால் அவரை நாம் எஜமானன் ஆக்கி விட்டோம் என்று பொருள்.

அது போல், முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராக நாம் ஏற்கிறோம் என்றால், அல்லாஹ்வின் கருத்தை தான் இந்த தூதர் நமக்கு சொல்வார் என்று நாம் நம்ப வேண்டும்.

இந்தியாவுக்கான வெளி நாட்டு தூதர் அமெரிக்கா செல்கிறார் என்றால், அவருக்கென்று சுய கருத்துக்கள் எத்தனை இருந்தாலும், அங்கே சென்று அவரது சுயக் கருத்த்துக்களை அவரால் பேச முடியாது.
இந்தியாவின் பிரதினிதியாக சென்ற காரணத்தால் இந்தியாவின் கருத்து எதுவோ அதை மட்டும் தான் அமெரிக்காவில் அவரால் பேச முடியும்.

தூதர் என்றாலே பொருள் அது தான்.

ஆக, முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராக நாம் நம்பினால், அந்த நம்பிக்கையில், அவர்கள் அல்லாஹ் சொன்னதை தவிர வேறு எதையும் சொல்ல மாட்டார்கள் என்கிற நம்பிக்கையும் சேர்ந்தே தான் இருக்கிறது. அப்படி தான் இருக்கவும் வேண்டும்.

இவ்விரண்டு விஷயங்கள் தான் கலிமா.
ஒருவர் புதிதாக இஸ்லாத்திற்கும் நுழைவதாக இருந்தாலும், இந்த இரு விஷயங்களை உளமாற அவர் நம்பினால் போதும். மூன்றாவதாக வேறெதையும் அவர் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
அதனால் தான் இந்த கலிமாவே எதிர்மறையாக நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது.

அல்லாஹ் தான் வணக்கத்திற்குரியவன் என்று நேர் மறையாக போதிப்பதற்கு பதில், அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை என்று எதிர்மறையாக தம் கொள்கையை போதிக்கும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம் மட்டும் தான்.
இவ்வாறு எதிர்மறையாக போதிப்பதால் தான் அதன் கருத்து இன்னும் அழுத்தம் பெறுகிறது.
இதை சரியாக புரிந்து கொண்டோமேயானால், இந்த ஒட்டு மொத்த தலைப்பும் தெளிவாகி விடும்.

மார்க்கம் என்று நாம் எதை செய்வதாக இருந்தாலும், எதை நம்புவதாக இருந்தாலும், அதை அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும், அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்க வேண்டும்.
இது தவிர வேறு யார் சொன்னாலும், அது அடிப்படை கலிமாவுக்கு எதிரானது என்கிற வகையில் அதை நாம் நம்பக் கூடாது.


மார்க்கத்திற்கு சொந்தக்காரன் யார்?


அல்லாஹ் தமது திருமறையில் கூறும் போது,

இந்த மார்க்கம் எனக்கு சொந்தமானது என்று சொல்கிறான்.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (39:3)

நாம் ஒரு வீட்டுக்கு சொந்தம் கொண்டாடுகிறோம் என்றால், அதன் அனைத்து உரிமைகளும் நமது கைகளில் மட்டும் தான் இருக்கிறது என்று பொருள்.
நமது வீட்டின் ஒரு பகுதியை இன்னொருவர் வந்து ஆக்கிரமித்தால் அதை நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

அற்பமான ஒரு வீடு தொடர்பாக அற்பமான இந்த மனிதனுக்கே இத்தனை ரோஷமும் உரிமையும் இருக்கும் போது, இந்த மார்க்கத்தின் சொந்தக்காரன் என்று தன்னைப் பற்றி கூறும் அல்லாஹ்வுக்கு இந்த மார்க்கத்தில் எந்த அளவிற்கு உரிமை இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவனது தூதரான முஹம்மது நபி (சல்) அவர்களுக்கு கூட இந்த மார்க்கத்தில் எந்த உரிமையும் கிடையாது. அதை இந்த வசனத்தின் வாயிலாக அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

மனிதர்களுக்கும் அல்லாஹ் தான் எஜமானன், அது போன்று, இந்த மார்க்கத்திற்கும் அவன் தான் எஜமானன் !

இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமிய மார்க்கத்தை ஒருவர் புதிதாக தழுவுகிறார் என்றால் உலகிலுள்ள மனிதர்களுக்கு அதில் ஏதேனும் உரிமை கொண்டாட இடமிருக்கிறதா?

கிறித்தவர்கள் போப் என்று ஒருவரை நியமித்து வைத்திருக்கிறார்களே, இவர் நாடினால் தான் ஒருவரால் கிறுத்தவராக முடியும் என்று, அது போன்று இஸ்லாத்தில் எவரேனும் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்றால் இல்லை.
ஏன் இல்லை என்றால், இந்த மார்க்கத்திற்கு உரிமையாளனாக எந்த மனிதனும் இல்லை,
உரிமையாளன் அல்லாஹ். 
அதனால் தான் ஒருவன் இஸ்லாத்தை தழுவ எண்ணினாலும், அவன் யாருடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை, வெறுமனே மனதால் எண்ணிக் கொண்டாலே போதும் என்று சொல்கிறது இஸ்லாம்.



ஆற்றல் அனைத்தும் அல்லாஹ்வுக்கே :


ஒட்டு மொத்த அண்ட சராசரங்களும் ஒரு நாள் அழியும். அப்போதும் அல்லாஹ்வின் திருமுகம் மட்டும் நிலைத்திருக்கும், அவனே நித்திய ஜீவன். அவனே எல்லா பொருட்களின் மீதும் முழு ஆற்றல் கொண்டவன்.

இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் சொல்லும் போது, உங்கள் தீனை (மார்க்கத்தை) எனக்கு நீங்கள் கற்றுத் தருகிறீர்களா? என்று மிகக் கடுமையாக கேட்கிறான்.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளை யும் அறிந்தவன் என்று கூறுவீராக! (49:16)

அல்லாஹ்வுக்கே அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன எனும் போது அவனுக்கு தெரியாதவை என்ன?

ஒரு விஷயத்தில் ஒரு சட்டத்தை ஒருவர் வகுக்க வேண்டுமானால் அவர் அதில் முழு ஆற்றலையும் பெற்றவராக இருக்க வேண்டும்.
அதற்கு தான் அல்லாஹ் இவ்வசனத்தில் கேட்கிறான், மனிதனாகிய நீ சட்டம் வகுக்கிறாயே, உனக்கு இவ்வுலகிலுள்ள அனைத்தும் தெரியுமா?
வானத்தில் உள்ளவை பற்றி உனக்கு தெரியுமா?
மறைவானவை பற்றி உனக்கு தெரியுமா?

இத்தகைய எந்த அறிவும் இல்லாத அற்பத்திலும் அற்பமான மனிதன் ஒரு சட்டத்தை வகுக்க வேண்டுமா அல்லது அனைத்து பொருட்களின் மீதும் எல்லா ஆற்றல்களையும் கொண்டிருக்கும் அந்த மகத்தான அல்லாஹ் சட்டமியற்ற வேண்டுமா?

சட்டமியற்றும் எந்த தகுதியும் மனிதனுக்கு கிடையாது என்பதை அல்லாஹ் மிகக் கடுமையாக, அதற்கான காரணங்களோடு சொல்கிறான் என்பதை நாம் புரிய வேண்டும்.

இது மட்டுமல்லாமல், அதிகாரம் என்பது அல்லாஹ்வின் கைகளில் மட்டும் தான் என இன்னும் பல்வேறு வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர் கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது' என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.' (12:40)

'நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்' என்றும் கூறுவீராக! (6:57)

என் மக்களே! ஒரே வாசல் வழி யாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விட மிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்' என்றார். (12:67)

மேற்குறிப்பிடப்பட்ட எல்லா வசனங்களிலும், அதிகாரம் என்பது அல்லாஹ்வின் புறத்தில் மட்டும் தான் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

யாருக்கு முழு அதிகாரமும் இருக்கிறதோ அவன் மட்டும் தான் சட்டமியற்ற முடியும்.

அதுவல்லாமல், அந்த மனிதர் சட்டமியற்றுவார், இந்த மனிதர் சொல்வதும் மார்க்கம், அந்த இமாம் சொல்லி விட்டால் அது ஃபர்ல், இந்த இமாம் சொல்லி விட்டால் அது ஹராம் என்று நாம் எவரைப் பற்றியாவது நம்பினோம் என்று சொன்னால், அல்லாஹ்வுக்கே எல்லா அதிகாரமும் என்கிற வசனத்தையும், மனிதனின் சொந்தக்காரனும் இந்த மார்க்கத்தின் சொந்தக்காரனும் அல்லாஹ் ஒருவன் தான் என்பதாக வரக்கூடிய எல்லா இறை வசனங்களையும் நாம் அப்பட்டமாக‌ மறுக்கிறோம் என்று பொருளாகும்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்




























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக