செவ்வாய், 1 ஏப்ரல், 2014

ஆறாவது கலிமாவுக்கு மணிமண்டபமே பரிசு !


ஈமான் என்றால் என்ன, இஸ்லாம் என்றால் என்ன? மறுமை சிந்தனையென்பது ஒரு முஸ்லிமுக்கு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் அரசியல் எனும் சாக்கடைக்குள் காலூன்றுவது வரை தான் ஒருவனுக்கு இன்றியமையாது கருத்தில் கொள்ளத்தக்கவை.

எப்போது, ஓட்டுப் பொறுக்கும் அரசியல் சாக்கடையில் மூழ்கி விட்டானோ, அடுத்த நொடியே அவன் கொண்ட கொள்கை காற்றில் பறக்கும், 
இறையச்சம் நட்டாற்றில் விடப்பட்டும் ; 
அவனது சுயமரியாதை சந்தி சிரிக்கும் !

பேரும், புகழும் பதவி சுகமும் மட்டுமே அவன் கண் முன் தெரியும்
என்பதற்கு தக்க உதாரணம் தான் முஸ்லிம் லீக் தலைவரின் சமீபத்திய அறிவிப்பு.

கருணாநிதிக்கு வாக்களிப்பது ஈமானின் ஒரு பகுதி என்று நினைத்திருந்த ஒரு காலம், இன்றைக்கு அத்தகைய சமூகத்தை ஏகத்துவ எழுச்சியானது மீட்டெடுத்திருக்கிறது என்றெல்லாம் தவ்ஹீத் அறிஞர்கள், திமுகவிற்கு வாக்களிப்பதை தங்கள் கடமையாகவே கருதி வந்த காலத்தினை பற்றி வேடிக்கையாக‌ பயான் செய்திருக்கின்றனர்.

ஆனால், அது வேடிக்கையாக சொல்லப்பட்டவையல்ல, நிஜமாகவே அது தான் சில தலைவர்களின் எண்ணமாக இன்றைக்கும் இருக்கிறது என்றால்
இந்த சமுதாயத்தை இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

ஆதீனத்திடம் கை கூப்பி வணக்கம் தெரிவித்த புகைப்படம் பரவிய போது இவ‌ருக்கு வக்காலத்து வாங்கியவர்களெல்லாம் இப்போது எங்கே?
இப்போதும் இவரோடு கூட்டணியில் கைகோர்த்து சல்லாபமிடும் சக முஸ்லிம் பெயர்தாங்கிகள் எங்கே?
இவருக்கான கண்டனம் எங்கே?

அது சரி, இந்த கொள்கையையும், இதை விடவும் கூடுதலாக, கலைஞருக்கு அடிமை சேவனமே செய்து விட்ட சக இயக்கங்கள் இந்த அறிவிப்பை மட்டும் எப்படி கண்டிப்பார்கள்?

அரசியலில் கூத்தடிப்பதெல்லாம் மய்யித்தாவது வரை தான். மய்யித்தான பிறகு,
இவர்கள் பெயரில் மணி மண்டபம் வேண்டுமானால் திமுக ஆட்சி எழுப்பலாம்.
ஆனால் நாளை மறுமையில் இது போன்ற அறிவிப்புகள் தான் உங்களுக்காக சாட்சி சொல்லுமேயொழிய இந்த மணிமண்டபங்கள் அல்ல என்பதை நினைவூட்டுகிறோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக