சனி, 28 ஜூன், 2014

நாத்திகம் என்பது பகுத்தறிவா?


நாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்ளும் நாத்திகர்கள் இருப்பது வரை நாத்திகத்திற்கும் பகுத்தறிவுக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது என்பது உறுதி !

சரி நான் கேட்கிறேன், பகுத்தறிவென்ன கடவுள் இருக்காரா இல்லையா என்பதை ஆராய்வதற்கு மட்டும் தான் அவசியமா என்ன?

பகுத்தறிவு என்பது நல்லவைகளிலிருந்து கெட்டவைகளை பிரித்தறியும் ஆற்றல் கொண்ட எல்லாவருக்கும் சொந்தமானது, எல்லா துறைகளிலும் அது பிரதிபலிக்கக்கூடியது.

மிருகங்களிடமிருந்து வேறுபட்டு ஒரு மனிதன் செய்யும் எல்லா காரியமுமே அவனுள் இருக்கும் பகுத்தறிவின் பிரதிபலிப்பு தான் எனும் போது, எல்லா காரியத்தோடும் தன்னிடமிருக்கும் பகுத்தறிவை அவன் மேற்கோள் காட்டி பார்க்க வேண்டும்.

ஆனால் நாத்திகம் பேசுகிற எவரும் அப்படி பொருத்திப் பார்ப்பது கிடையாது.

கடவுள் நம்பிக்கை என்று வருகிற போது மட்டும், நான் பகுத்தறிவை பயன்படுத்துபவனாக்கும்.. என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவன் பயன்படுத்தும் சாதனத்தை மேன்மைப்படுத்துகிறான் என்றால்..

மனிதன் பலகீனமானவன். குறைகளை சகித்துக் கொள்ள பழகிக் கொள்ளாதவன்.

எந்த காரியத்திற்கு பகுத்தறிவை பயன்படுத்த வேண்டுமோ அதில் அவன் தோற்கும் போது அவனையும் அறியாமல் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

பகுத்தறிவை பயன்படுத்தினால் கிடைக்கும் விடைக்கு மாற்றமான நிலைபாடு தான் கடவுள் மறுப்பு என்பது பட்டவர்த்தனமான உண்மையாக இருக்கும் போது, எல்லா காரியத்திலும் பகுத்தறிவை பயன்படுத்துகிற நான் இதில் மட்டும் தோற்று விட்டேனே என்கிற குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு, தான் தோல்வியுற்றதை மறைக்க அவனை போராட செய்கிறது.

அதனால் தான் நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்வதோடு சேர்த்து நான் பகுத்தறிவாளன் என்பதையும் இணைத்து சொல்லும் கட்டாயம் அவனுக்கு.

ஆற்றலை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்று சொன்ன விஞ்ஞானம் தான் பெரு வெடிப்புக்கு முன்பாக ஒரு அணு இருந்தது என்றும்,
அது தான் வெடித்து சிதறியது எனவும், அந்த வெடிப்புக்கு தேவையான ஆற்றல் கூட தானே உருவானது எனவும் முரண்பட்டு பேசுகிறது எனும் போது,

பகுத்தறிவு என்பது விஞ்ஞானம் கூறும் உண்மையையும் தாண்டிய அந்த‌ ஆற்றலை நம்புவது தான்.

இந்த நம்பிக்கையை கொண்டு விட்டால் பகுத்தறிவு தனக்கு இருப்பதாக வேண்டுமானால் பொருளாகுமே தவிர, இது நாள் வரை கடவுளை மறுத்து வந்த தமக்கு அது பாதகமான இலக்கை நோக்கி தான் இழுக்கும் என்பதால் தான் கடவுள் இல்லை எனவும் பகுத்தறிவு தனக்கு இருக்கிறது எனவும் இரண்டு முரண்பட்ட செய்திகளை ஒரு சேர இணைக்கிறான் நாத்திகன்.

எப்போதும் கற்புடன் இருக்கும் பெண், தான் கற்புடையவள் என்று சொல்லிக் கொண்டே இருப்பது கிடையாது.

விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு அந்த குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாய், எங்கே இத்தனை நாளாய் கற்புடையவள் என்று தான் கட்டிக்காத்த மாண்பு பறிபோய் விடுமோ என்கிற அச்சத்தில், நான் விபச்சாரம் செய்தேன் என்பது உண்மை தான், எனவே நான் கற்புடையவள் என்று முரண்பட்ட இரு விஷயங்களை இணைத்து பேச ஆரம்பிக்கிறாள்.

நான் பகுத்தறிவாளன் என்று தன்னை தானே சொல்லிக் கொள்வதும் ஒருவித அச்ச உணர்வின் வெளிப்பாடு தான் - Guilty Conscience !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக