வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி - பாகம் 5

By TNTJ


மூளை வெந்த ஹிஜ்ரா கமிட்டிக்கு பதிலடி!
( பாகம் 5 )

மடமை வாதம் :

--------------------------------------------------------------------------

அழுகிப்போன கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்கள்!

--------------------------------------------------------------------------
இவர்களது அழுகிப்போன அந்த கேள்விகளையும் அவைகளுக்கான விடைகளையும் கீழே தருகிறோம்.
நாளின் துவக்கம் தொடர்பாக நாம் வைத்த லைல் என்பதற்கு இரவு என்று மொழியாக்கம் செய்திருந்தோம். இதை விமர்சனம் செய்த இந்த கூட்டம், லைல் என்றால் நாள் என்றல்லவா பல ஹதீஸ்களில் அர்த்தம் உள்ளது, நீங்கள் ஏன் இரவு என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள் ? என்று வழக்கமான கேள்வியைக் கேட்டுள்ளது.
நமது பதில்
எந்த அரபி மொழி அகராதியிலும் ”லைல்” என்ற சொல் ”நாள்” என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை.
”லைல்” என்ற சொல்லுக்கு ”நாள்” என்று பொருள் இருப்பதாக்க் கூறுவது அறியாமை ஆகும்.
لمعجم الوسيط - (ج 2 / ص 619)
( الليل ) ما يعقب النهار من الظلام وهو من مغرب الشمس إلى طلوعها وفي لسان الشرع من مغربها إلى طلوع الفجر ويقابل النهار
”லைல்” என்பது பகலைத் தொடர்ந்து வரும் இருள் ஆகும். ”லைல்” (இரவு) என்பது சூரியன் மறைந்ததிலிருந்து அது உதிக்கும் வரை ஆகும். (இஸ்லாமிய) ஷரியத்தின் மொழிவழக்கிலே ”சூரியன் மறைந்ததிலிருந்து ஃபஜ்ர் உதயமாகும் வரை ஆகும். ”லைல்” (இரவு) என்பது ”நஹார்” (பகல்) என்பதற்கு எதிர்ச் சொல் ஆகும்.
நூல் அல் முஃஜமுல் வஸீத் பாகம் 2 பக்கம் 619
المعجم الوسيط - (ج 2 / ص 620)
( الليلة ) واحدة الليل ( ج ) ليال وليائل
”லைலத்” என்பதாகிறது ”லைல்” என்பதற்கு ஒருமையாகும். இதன் பன்மைச் சொல் ”லயால்” ”லயாயில்” என்பதாகும்.
நூல் அல் முஃஜமுல் வஸீத் பாகம் 2 பக்கம் 619
ஒருவர் ”நான் இரண்டு இரவுகளாகத் தூங்கவில்லை” என்று கூறுகிறார் என வைத்துக் கொள்வோம்.
இந்த வாசகத்தின் பொருள் இரண்டு இரவுகள் அவர் தூங்கவில்லை என்பதுதான்.
இரண்டு இரவுகள் என்பது தொடர்ச்சியாக வராது. ஒரு இரவிற்கு அடுத்து ஒரு பகல் அடுத்துதான் மற்றொரு இரவு வரும்.
இதன் அடிப்படையில் அதில் நாள் என்ற கருத்து அடங்கியுள்ளது என்று கூறலாம். அதாவது இரண்டு நாட்களுக்குரிய இரண்டு இரவுகளில் அவர் தூங்கவில்லை என்பதுதான் அதன் பொருள். மாறாக ”லைல்” என்பதற்கு ”நாள்” என்று பொருள் இருப்பதாகக் கூறுவது முட்டாள் தனமாகும்.
உதரணமாக ஒருவர் ”நான் நெல்லையிலிருந்து சென்னை வரை சென்றேன்” எனக் கூறுகிறார். நெல்லையிலிருந்து சென்னை வரை செல்லும் போது அவர் தாம்பரத்தை தாண்டித்தான் செல்ல முடியும். எனவே ”நெல்லையிலிருந்து சென்னை வரை சென்றேன்” என்ற வாசகத்தில் தாம்பரமும் உள்ளடங்கியுள்ளது என்றுதான் விளங்கிக் கொள்ள முடியும். மாறாக ”சென்னை” என்ற வார்த்தைக்கே ஒருவர் ”தாம்பரம்” என்றுதான் பொருள் என ஒருவர் கூறினால் அது முட்டாள் தனமானதாகும்.
அது போன்று தான் ”மூஸா நபிக்கு அல்லாஹ் நாற்பது இரவுகளை வாக்களித்தான் ” என்றால் நாற்பது இரவு என்பது தொடர்ச்சியாக வராது. ஒவ்வொரு இரவும் ஒரு பகலைத் தாண்டித்தான் வரும் என்ற அடிப்படையில் இதில் நாற்பது நாள் அடங்கியுள்ளது.
அதாவது நாற்பது நாட்களில் அடங்கியுள்ள நாற்பது இரவுகளை அல்லாஹ் வாக்களித்தான் என்று கூறலாமே தவிர ”இரவு” என்பதின் பொருளே ”நாள்” என்பது தவறானதாகும்.
மேலும் ” ”மூஸா நபிக்கு அல்லாஹ் நாற்பது இரவுகளை வாக்களித்தான் ” என்ற வாசகத்தின் மூலம் மூஸா நபிக்கும், இறைவனுக்கும் உள்ள சம்பாசனைகள் இரவில் தான் நடந்ததே தவிர பகலில் நடந்தது என்ற பொருள் வராது.
ஒருவர் ”நான் நாற்பது இரவுகள் வேலை பார்த்தேன்” என்று சொன்னால் அவர் பகலில் வேலை பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. அதே நேரத்தில் நாற்பது இரவுகள் என்று சொல்வதிலிருந்து அதில் ஒவ்வொரு இரவிற்குரிய பகலும் உள்ளடங்கியிருப்பதால் நாற்பது நாட்களிலுள்ள நாற்பது இரவுகள் என்று தான் விளங்கிக் கொள்ள வேண்டுமே தவிர ”இரவு” என்பதற்கு ”நாள்” என்ற பொருள் உள்ளதாகக் கூறுவது தவறானதாகும்.
லைலத் என்பதற்கு நாள் என்று பொருள் செய்தால் பின்வரும் வசனங்களின் பொருளே தலைகீழாக புரண்டு விடும்.
நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 2 : 187
இங்கே லைலத் என்பதற்கு இரவு என பொருள் செய்தால் ”நோன்பின் நாளில் மனைவியுடன் கூடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று வந்து விடும்.
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது ஓர் இரவோ அல்லது இரண்டு இரவுகளோ (இரவுத் தொழுகைக்காக) அவர்கள் எழவில்லை.
அறிவிப்பவர் : ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி)
புகாரி 1124
இங்கே லைலத் என்பதற்கு நாள் எனப் பொருள் செய்தால் நபியவர்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தொழுகைக்கு எழவில்லை என்ற பாரதூரமான கருத்து வரும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மினாவுக்கு) முன் கூட்டியே அனுப்பிவைத்தார்கள். அப்படி அவர்கள் அனுப்பி வைத்தவர்களில் நானும் ஒருவன். புகாரி 1678
இங்கே முஸ்தலிஃபா இரவு என்பதற்கு முஸ்தலிஃபா நாள் என்று பொருள் செய்தால் ஹஜ்ஜின் வணக்கமே தலைகீழாகிவிடும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் இரவில் நின்றுவணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி 35
இங்கே லைலத் என்பதற்கு நாள் எனப் பொருள் செய்தால் இரமலான் பகலிலும் நின்று தொழலாம் என்று வரும். இது நபியவர்களின் நடைமுறைக்கு நேர் எதிரானதாகும்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் கப்பிய ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்துசென்றனர். அவ்விருவருடனும் இரு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளி வீசிச் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் போய்ச் சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றறொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது. புகாரி (465)
இங்கே லைலத் என்பதற்கு நாள் என்று பொருள் செய்தால் இருள் கப்பிய ஒரு நாள் என்று வரும்.
ஆக, லைல் என்பதன் நேரடி அர்த்தம் இரவு தானே தவிர இவர்கள் கூறுவது போல் பகல் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.
மடமை வாதம்
இவர்களது அழுகிப்போன கேள்விப்பட்டியலில் அடுத்ததாக வருவது,
சவுதிக்கும் இந்தியாவுக்கும் 2 1/2 மணி நேர வேறுபாடு இருக்கும் போது பிறை கணக்கில் மட்டும் 21 1/2 மணி நேர வேறுபாடு எப்படி வந்தது? என்கிற கேள்வி.
நமது பதில்
அவர்கள் பிறை பார்த்ததன் அடிப்படையில் அவர்களுக்கு மாதம் துவங்கியது, நாம் பிறை பார்த்ததன் மூலம் நமக்கு மாதம் துவங்கியது, பிறை பார்க்க வேண்டும் என்கிற ஹதீஸை செயல்படுத்தினால் இந்த வேறுபாடு வரத்தான் செய்யும்.
சவுதியில் பிறை தென்படும் போது இந்தியாவில் பிறை தென்படவும் செய்யலாம், தென்படாமலும் போகலாம். தென்படாமல் போகுமேயானால் அதே பிறையானது மறுநாள் மக்ரிபின் போது நமக்கு தென்படும். அந்த வகையில் வேறுபாடு வரத்தான் செய்யும்.
மடமை வாதம்
அப்படியே வேறுபாடு என்றாலும் நேர வித்தியாசம் தானே ஏற்பட வேண்டும், ஒரு நாள் எப்படி மாறுபடும்? என்கிற அடுத்த கேள்வி இவர்களிடமிருந்து எழுகிறது.
நமது பதில்
இதற்கு, குறைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற சிரியா - மதினா தொடர்பான ஹதீஸே இவர்களுக்கு பதிலாகும். சிரியாவில் வெள்ளிக்கிழமை மாதம் துவங்கியதையும் மதினாவில் சனிக்கிழமை தான் துவங்கியது என்பதையும் அந்த ஹதீசிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
முக்கியமாக, இந்த வேறுபாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்த வேறுபாடு தான் எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கியதிலிருந்து மாதம் பிறப்பதில் நாள் வேறுபாடு ஏற்படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மடமை வாதம்
சூரியனை கணக்கிட்டு முடிவு செய்வீர்களாம், சந்திரனை மட்டும் கணக்கிட மாட்டீர்களோ? என்பது இவர்களது அடுத்த கேள்வி.
நமது பதில்
இந்த கேள்வியை கேட்டு விட்டு, சூரியனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கணக்கிட்டிருக்கிறார்கள் என்பதற்கு நம் சார்பாக அவர்களே ஆதாரங்களுடன் விளக்கவும் செய்துள்ளனர் என்பது உச்சகட்ட வேடிக்கை.
நம் சார்பாக இவர்களே அளித்திருக்கும் சான்று இதோ..
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது. புஹாரி 1959
நமது பதில்
மேற்கண்ட ஹதீஸ் இவர்களுக்கு சாதகமா அல்லது நமது நிலைபாட்டுக்கு ஆதாரமா?
மேகம் சூழப்பட்ட தினம் ஒன்றில் சூரியன் கண்களுக்குத் தெரியவில்லை. சூரியனை மேகம் மறைத்து விட்டதால் அசர் நேரமே தொடர்கிறது என்று சொல்லாமல், அவர்களாக மக்ரிப் நேரம் எதுவாக இருக்கும் என்பதை கணித்து முடிவு செய்து நோன்பு திறந்து விடுகிறார்கள்.
பிறை பற்றி சொல்கின்ற போது மேகம் காரணமாக வானில் பிறை மறைக்கப்படுமேயானால், மாதத்தின் இறுதியைக் கணித்து முடிவு செய்யுங்கள் என்று சொல்லாமல் முந்தைய மாதமே தொடர்கிறது என்று கூறினார்கள்.
வேறுபாடு தெளிவாகத் தான் உள்ளது, நம் சார்பாக சான்றுகளை வைத்து இவர்களே அந்த வேறுபாட்டையும் விளக்கி, தங்கள் விஞ்ஞான (?) அறிவை நிரூபித்திருக்கிறார்கள்.
மடமை வாதம்
தொடர்ந்து, சூரியன் விஷயமாக தொழுகை நேரங்களை முடிவு செய்ய நிழலை வைத்து அறிந்து கொண்டார்கள். இப்போது ஏன் முன்கூட்டியே கணக்கிட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று அடுத்த பழைய சரக்கொன்றை கேள்வியாக வடித்துள்ளனர்.
நமது பதில்
இது போன்ற சொத்தை வாதங்களை இவர்கள் மீண்டும் மீண்டும் எழுப்பி வருவதால் இவர்களது முரண்பாடுகளை விளக்கும் வண்ணம், இது குறித்து சற்று விளக்கமாகவே பார்ப்போம்.
முதலில், இதற்கு பதில் சொல்வதற்கு முன்னால், இது போன்ற கேள்விகளை எழுப்புவோருக்கென்று எந்த நிலைபாடாவது இருக்கிறதா என்பதை மக்களுக்கு அறியத்தர விரும்புகிறோம்.

ஹதீஸில் சூரியனையும் கணிக்காமல் கண்ணால் பார்க்க தானே சொல்லி இருக்கிறது, நீங்கள் ஏன் கணிக்கிறீர்கள் என்று கேட்பதன் மூலம் இவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்ன? நாங்கள் சூரியனை கணிக்கத்தான் செய்கிறோம் என்பதாகும்.

அதாவது, ஹதீஸில் கணிக்க்க் கூடாது என்று தான் உள்ளதாம், ஆனால் நாங்கள் கணிப்போம் என்று, ஹதீஸுக்கு முரணாக நாங்கள் நடப்போம் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால், நம்மை நோக்கி, நீங்கள் மட்டும் ஹதீஸுக்கு முரணாக நடக்கலாமா? என்கிற கேள்வியைக் கேட்க வேண்டும் என்பது தான் இவர்களது ஒரே குறிக்கோள் என்பதால் தாங்கள் இந்த ஹதீஸை மறுத்து செயல்படுவதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு கூட சங்கூஜம் அடைகிறார்களல்லர்.

எப்போதுமே ஒரேயொரு இறை வசனத்தை அல்லது ஹதீஸை வைத்து எந்தச் சட்டமும் எடுக்க கூடாது. ஒரு செய்திக்கு துணையாக அல்லது விளக்கமாக வேறு ஏதேனும் செய்திகள் இருக்குமானால் இரண்டையும் இணைத்து தான் பொருள் செய்ய வேண்டும், இரண்டுக்கும் அர்த்தம் கொடுக்கின்ற வகையில் தான் சட்டம் எடுக்க வேண்டும். இது மார்க்கத்தை அணுக வேண்டிய சாதாரண முறை.

மது அருந்தி விட்டு தொழாதீர்கள் என்று ஒரு இறை வசனம் உள்ளது. அதை எடுத்து வைத்துக்கொண்டு, பார்த்தீர்களா, அல்லாஹ் தொழும் போது மட்டும் தான் மது அருந்தாதீர்கள் என்கிறான், இதன் மூலம் தொழுகை அல்லாத நேரங்களில் மது அருந்துவது கூடும் என்று , இந்த ஒரு வசனத்தை வைத்து மட்டும் சட்டம் இயற்றக்கூடாது. காரணம், இந்த சட்டம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இறங்கியது. இதன் பிறகு, பொதுவாக எல்லா நேரங்களிலும் மது அருந்துவது தடை என்கிற வசனமும் வந்து விட்ட காரணத்தால் முந்தைய வசனம் தற்காலிகமான சட்டமாக இருந்தது என்று கருத வேண்டும்.

அது போல, தொழுகை நேரத்தை அறிய சூரியனைக் கண்டு அதனால் ஏற்படும் நிழலை வைத்து மட்டும் முடிவு செய்யுங்கள் என்கிற ஒரேயொரு செய்தி மட்டும் தான் ஒட்டு மொத்த குர்ஆன் ஹதீஸில் இருக்கிறது என்றால், இன்றைக்கு நாம் சூரியனைக் கண்ணால் கண்டு தான் முடிவு செய்தாக வேண்டும். ஆனால், சூரியன் விஷயமாக இந்த ஒரு செய்தி மட்டும் இல்லை, நிழலை பார்த்து முடிவு செய்வது என்கிற ஒரேயொரு வழிகாட்டுதல் மட்டுமில்லை, இன்னும் ஏராளமான சட்டங்கள் உள்ளன.

தொழுகை நேரங்களை பற்றியும் குறிப்பாக நோன்பு திறக்கும் நேரமான மக்ரிப் நேரம் பற்றியும் பல்வேறு வார்த்தை அமைப்புகளை கொண்டு ஹதீஸ்கள் உள்ளன.

மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1076
இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1074
அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1076

ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: திர்மிதீ 138
லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1075

சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை உண்டு. 'சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1075

இது போன்ற எல்லா செய்திகளும் சூரியனை அடிப்படையாக கொண்டு நேரத்தை முடிவு செய்வது பற்றி தான் பேசுகிறது. ஆனால் இவற்றில் கண்ணால் கண்டு முடிவு செய்யுங்கள் என்று சொல்லப்படவில்லை,
மாறாக,
"அந்த நேரம் வந்தால்" அல்லது அதன் நிழல் இந்த அளவிற்கு வந்தால்" என்று பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது.
அப்படியானால் அந்த நேரம் வந்ததை எப்படி வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம் என்பது பொருள். அந்த நிழலின் அளவை எப்படி வேண்டுமானாலும் முடிவு செய்து கொள்ளலாம் என்பது பொருள்.

மேலும், நோன்பு திறக்கும் நேரத்தை பற்றி சொல்கிற மற்றொரு செய்தியில் "சூரியன் மறைந்து விட்டால்" என்றே இருக்கிறது, மறைந்ததை கண்டால் என்று சொல்லப்படவில்லை.

இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2006

அதே சமயம், இது போல பிறை குறித்து, பிறையை கண்டு நோன்பு வையுங்கள் என்று ஒரு பக்கமும், பிறை உதித்தால் நோன்பு வையுங்கள் என்று இன்னொரு பக்கமும் என பல்வேறு வாசக அமைப்புடன் ஹதீஸ்களில் இருக்குமானால் அப்போது, சூரியனுக்கு என்ன நிலைபாட்டை சொல்கிறோமோ அதையே தான் பிறைக்கும் எடுத்திருப்போம்.

ஆனால் பிறை பற்றி சொல்லப்படும் எந்தச் செய்தியிலும் "பிறை உதித்தால் இதைச் செய்யுங்கள்" என்று சொல்லப்படவில்லை, பிறையைக் கண்டால் இதை செய்யுங்கள் என்று மட்டும் தான் உள்ளது.
பிறை உதித்தால் இதைச் செய்யுங்கள் என்று சொல்வதற்கும் பிறையைப் பார்த்தால் இதைச் செய்யுங்கள் என்பதற்கும் வேறுபாடு உண்டு.
நிழல் இந்த அளவிற்கு வந்தால் இந்த நேரத்தை முடிவு செய்யுங்கள் என்று சொல்வதற்கும் நிழலை பார்த்து இந்த நேரத்தை முடிவு செய்யுங்கள் என்று சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது.
ஒன்றை பற்றி ஒரேயொரு விதமாகவும் இன்னொன்றை பற்றி பல்வேறு விதங்களாகவும் சட்டம் சொல்லப்படுமானால் முதலாவது விஷயத்தை அந்த ஒரு விதமாக தான் செய்ய வேண்டும், இரண்டாவதை பல்வேறு வழிகளில் செய்யலாம் என்பது சாதாரண சிந்தனை.

இன்னும் சொல்லப்போனால், இவர்கள் வாதப்படியே பார்ப்பதாக இருந்தாலும் மக்ரிப் நேரத்தை கண்ணால் கண்டு தான் முடிவு செய்ய வேண்டும் என்றால், நபி (ஸல்) அவர்களோ சஹாபாக்களோ கண்ணால் கண்டு முடிவு செய்யாமல் குச்சிகளின் நிழலை பார்த்து தான் அறிந்து கொண்டார்கள். ஹதீஸில் சூரியனைக் கண்டு அல்லது இரவு முன்னோக்கி வருவதைக் கண்டு முடிவு செய்ய சொல்லி இருக்கும் போது அவர்கள் குச்சியின் நிழலை பார்த்து முடிவு செய்தது மார்க்க முரண் என்று இவர்கள் சொல்வார்களா?

மேலும், சூரியன் கண்களுக்கு புலப்படாத மேக மூட்டமான காலகட்டத்தில், சூரியனை கண்ணாலும் காணாமல், நிழல் வைத்தும் தீர்மானிக்காமல் அவர்களே சுயமாக கணித்து முடிவு செய்திருக்கிறார்கள் . இதற்கும் ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளன.

அதை நம் சார்பாக இவர்களே வைத்து விட்டதை மேலே விளக்கியிருந்தோம்.

இது நிர்பந்தமான நிலை தானே என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் அதுவும் அடிப்படையற்ற கேள்வி. காரணம், இந்த நிர்பந்தமான நிலையில் அவர்கள் சூரியனைக் கணித்து போல பிறை தென்படாத நிர்பந்தமான சூழலில் அவ்வாறு பிறையைக் கணிக்கவில்லை. நாட்களை முழுமைப்படுத்தி கொள்ளவே செய்தார்கள்.

நிர்பந்தமான இரு சூழல்களில் சூரியனுக்கு ஒரு விதமாகவும் பிறைக்கு இன்னொரு விதமாகவும் அவர்கள் செயல்பட்டது, சூரியன் விஷயத்தில் வரம்புகளின்றி செயல்படுவதற்கும், பிறை விஷயத்தில் வரம்புக்கு உட்பட்டு செயல்படுவதற்கும் நபி அவர்கள் காட்டிய முன் மாதிரியாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமே அல்லாமல், இது நிர்பந்தத்திற்கு மட்டும் உரியது என்று தனியாக பார்க்க கூடாது, நிர்பந்தம் என்பது காரணம் என்றால் பிறை பற்றிய நிர்பந்தம் வந்த பொழுதும் இதையே அவர்கள் செய்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை.

மடமைவாதம்

அடுத்ததாக, தங்களது கணிப்பு சித்தாந்தம் தான் சரி என்பதை நிலைநாட்டுவதற்காக எத்தகைய தகுதிக்கும் இவர்கள் இறங்குவார்கள் என்று முன்னரே நாம் சொல்லியிருந்ததை மெய்ப்பிக்கும் வகையில் இவர்கள் வைக்கும் அடுத்த வாதமானது, நபி (ஸல்) அவர்களே தவறு செய்திருப்பதாகவும் அவர்களை விட நாங்கள் தான் சரியாக நடக்கிறோம் என்றும் கூறுகிற இவர்களது அறிவிப்பு !

நபி (ஸல்) அவர்கள் சூரியன் தென்படாத நேரத்தில் கணித்து நேரத்தை முடிவு செய்தார்கள் என்று இவர்களே நம் சார்பாக சான்று ஒன்றை காட்டியுள்ளார்கள் என்று சொன்னோமே, அந்த சான்றை காட்டி விட்டு இவர்கள் அதிலிருந்து வைக்கும் வாதம் என்ன தெரியுமா?

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது. புஹாரி 1959

முன்கூட்டியே கணித்துக்கொள்ளும் வசதி கொண்ட இந்தக் காலத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமா? எனக் கேட்கிறார்கள்.

ஏற்படாது தான்.

நபி காலத்தில் சூரியனை எவ்வாறு கணிப்பது அவர்களுக்கு இயன்றதாக இருந்ததோ அவ்வாறு அவர்கள் கணித்தார்கள். இன்று எது நமக்கு இயலுமோ அதை நாம் செய்யலாம்.

அதே சமயம், பிறையை இயன்ற அளவிற்கு கூட அவர்கள் கணிக்கவில்லை, நாமும் இயன்ற அளவிற்கு கூட கணிக்கக் கூடாது !

குர்ஆன் இது பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

சூரியன் விஷயமாக பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்று ஹதீஸ்கள் இருந்தாலும், குர்ஆனில் சூரியனைக் கணிப்பது கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.

(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன் றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். 73:20

இந்த வசனத்தில் நேரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள இயலாத நிலையில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் எனவும், அது தவறு எனவும், அதை துல்லியமாக்க் கணிக்க அவர்களால் இயலாது என்பதால் அவர்களை தான் மன்னித்ததாகவும் அல்லாஹ் சொல்கிறான்.

துல்லியமாகக் கணிக்காமல் இருப்பது தவறு என்றும், அது இயலாது என்பதால் அல்லாஹ் மன்னித்தான் எனவும் அல்லாஹ் சொன்னால், அதை துல்லியமாக அறிவதற்குரிய ஆற்றலை பெற்றவர்கள் அவ்வாறு கட்டாயம் செய்ய வேண்டும் என்று பொருள்.

ஆக, இறை வசனங்களின் அடிப்படையில் நாம் சிந்திக்கையில், சூரியனை இன்றைய காலகட்டத்தில் கணித்து, துல்லியமான முறையில் நேரத்தை கணிக்க வேண்டும் என்று புரிகிறோம்.

இத்தகைய விதி எதுவும் பிறை விஷயமாக குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்படவில்லை எனும் போது, இப்போதும், சூரியனை ஏன் கணிக்கிறீர்கள், அது போல பிறையை ஏன் கணிப்பதில்லை என்கிற பாமரத்தனமான கேள்விகள் அர்த்தமற்றதாகின்றன.

குர்ஆன், சூரியனைக் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு விட்ட பிறகு, இந்தக் கட்டளைக்கு முரணில்லாத வகையிலும், இது தொடர்பாக மேலே நாம் சுட்டிக்காட்டிய இன்னபிற ஹதீஸ்களுக்கு அர்த்தம் கொடுக்கின்ற வகையிலும் தான், இவர்கள் சுட்டிக்காட்டும் நோன்பு திறத்தல் பற்றிய ஹதீஸைப் புரிய வேண்டும்.

மேலும், ஹதீஸில் இரவு வருவதைக் கண்டால் நோன்பை விடுங்கள் என்று சொல்லப்பட்டாலும், இந்த நோன்பை விடுதல் தொடர்பாக குர்ஆனிலும் சட்டம் உள்ளது.

ஆனால், அதில், ஹதீஸில் சொல்லப்பட்டது போல இரவு முன்னோக்கி வருவதைக் கண்ணால் கண்டு முடிவு செய்யுமாறு சொல்லப்படவில்லை.

இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! 2:187

இரவு வரை முழுமைப்படுத்த வேண்டும், என்று தான் குர்ஆன் சொல்கிறதே தவிர இரவு வருவதை காண்பது வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள் என்று சொல்லப்படவில்லை. இரவு வருவதை எந்த வகையிலும் தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது இதன் பொருள்.

ஆக, எந்த அடிப்படையிலும் சூரியனுக்குரிய பார்வை வேறு சந்திரனுக்குரிய பார்வை வேறு என்பது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் நிரூபணம் ஆகின்றது.


அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, பிறையைக் கணிக்கலாம், கணக்கிடலாம், சிந்திக்கலாம், ஆய்வு செய்யலாம் என்பதற்கு திருக்குர்ஆன் 55:5 10:5 மற்றும் வசனங்களை மட்டுமே இவர்கள் தங்களது ஆதாரமாக சமர்ப்பிக்கின்றனர்.

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன (55:5)

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். (10:5)

சந்திரன் கணக்கின் படி இயங்குகின்றது என்பதால் நாம் 3000 வருடக் காலண்டரையும் இன்றே அடிக்க வேண்டும் என்று கூறுவது அறிவுள்ளவர் ஏற்றுக் கொள்ளும் வாதமா??
ஆண்டுகளின் கணக்கை அறிந்து கொள்ள முடியும் என்று சொல்வதற்கும், அல்லது சந்திரன் கணக்கின் படி இயங்குகிறது என்று சொல்வதற்கும் கட்டாயம் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வேறுபாடு தெரியாதவர்கள் தான் இந்த ஹிஜ்ரா கூட்டத்தினர்.
ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிய சூரியனும் உதவுகிறது, சந்திரனும் உதவுகிறது.
முன்கூட்டியே கணக்கிட்டாலும், இந்த வசனத்தை நீங்கள் மீறியவர்கள் ஆக மாட்டீர்கள். நான் ஒவ்வொரு மாதமும் பிறையைப் பார்த்தாலும் இந்த வசனத்தை மீறியவர்கள் ஆக மாட்டோம். முன்கூட்டியே காலண்டர் அடிப்பவர்களுக்கும் சந்திரன் காலம் காட்டும், ஒவ்வொரு மாதமும் தலைப்பிறையை கண்ணால் கண்டு மாதங்களை தீர்மானிக்கும் எங்களுக்கும் சந்திரன் காலம் காட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
அப்படியானால் இது இருவருக்கும் பொதுவான வசனம்.
இருவருக்கும் பொதுவான வசனத்தை ஒருவருக்கு சாதகமாக பேசமுடியாது.

இப்போது இதிலுள்ள சரி, தவறுகளை எப்படி அலசுவது? குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள், என்ன நிலையை எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்து, அதிலிருந்து எந்த வழிகாட்டுதல் சரியானது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அந்த வழிகாட்டுல்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவான முறையில் புறக்கண்ணால் பிறையை பார்த்து மாதங்களை துவக்க வேண்டும் என்கிற சட்டத்தை தான் சொல்கிறது என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை !

இறுதியாக..

மார்க்கத்தின் ஒரு அடிப்படையான நிலைபாட்டினை நாம் மனதினுள் நிறுத்திக்கொண்டால் பிறை விஷயம் மாத்திரமல்ல, ஏனைய எல்லா சர்ச்சைகளுக்கும் ஒரு எளிய தீர்வு கிடைத்து விடும்.

எப்போதுமே மார்க்கத்தில் ஒன்றை உலக விஷயம் - மார்க்க விஷயம் என்று பிரிப்பதாக இருந்தால் அதில் இரண்டு அளவுகோலை கொண்டு பார்க்க வேண்டும்.

• நபி (ஸல் அவர்கள் சொன்னது
• நபி (ஸல்) அவர்கள் செய்தது.
ஒரு காரியத்தை நபி அவர்கள் செய்யுமாறு சொல்லுகிறார்கள் இன்னொரு காரியத்தை வெறுமனே செய்ய மட்டும் செய்கிறார்கள் (சொல்லவில்லை) என்றால், எதை நபி அவர்கள் சொன்னார்களோ அதற்கு தான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

எதை அவர்கள் சொன்னார்களோ, அதை நாம் செய்வது கடமை, அது சுன்னத் என்கிற தரஜாவிற்கு எடுத்து செல்லும்.
எதை அவர்கள் சொல்லாமல் வெறுமனே செய்ய மட்டும் செய்தார்களோ அது மார்க்கம் சார்ந்த விஷயமாக இல்லாமல் உலகம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருக்கும்.

உதாரணமாக நபி அவர்கள் எப்போதும் பேரீத்தம் பழத்தை சாப்பிடக்கூடிய பழக்கமுள்ளவர்கள். எப்போதும் அவர்கள் அதை சாப்பிடுவதால் அது சுன்னத் ஆகி விடவில்லை அதே சமயம் நோன்பு திறக்கும் பொது பேரீத்தம்பழத்தை கொண்டு திறங்கள் என்று அவர்கள் சொல்லியதன் காரணத்தால் அப்போது அதை சாப்பிடுவது மட்டும் மார்க்க விஷயமாகி (சுன்னத்தாகி ) விடுகிறது.

சில மசாயில்களில், அவர்கள் செய்தது ஒன்றும் சொன்னது வேறொன்றுமாக இருந்தால் அப்போது நாம் மார்க்கமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவர்கள் சொன்னதை தான் !

நபி அவர்கள் நான்கு ரக்காத் தொழ வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள் அதற்கு மாற்றமாக மூன்றுடன் ஒரு சமயம் சலாம் விட்டு விடுகிறார்கள். அவர்கள் மூன்று ரக்காத் தொழுதது அவர்களது செயல் , நான்கு ரக்காத் தொழ வேண்டும் என்பது அவர்களது சொல்.
அவர்களது சொல்லும் செயலும் சில இடங்களில் வேறுபட்டால் சொல்லை தான் எடுக்க வேண்டும், அது தான் மார்க்கமாக கருதப்படும்.
பிறை பார்க்க வேண்டும் என்கிற கட்டளை நபியிடம் இருந்து கிடைத்த போது, அது மார்க்கமல்ல, உலக விஷயம் தான், அதை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற தவறான எண்ணம் இது போன்ற கொள்கை கொண்டவர்கள் மனதில் இவர்களையும் அறியாமல் பதிந்திருப்பதால்தான் பிறை தொடர்பாக இந்த அளவிற்கு குழம்பிப் போய் நிற்கின்றனர்.
ஆனால், இதே அளவுகோலின் படி தான் அனைத்தையும் அலசுகிறார்களா? என்றால் இல்லை.

மாதத்தை தீர்மானிக்க எப்படி பிறை பார்க்க சொன்னார்களோ அதே போல தொழுகையை அறிவிக்க பாங்கு சொல்ல சொன்னார்கள்.

தொழுகை கடமையான ஆரம்ப காலத்தில் வரக்கூடிய ஒரு சம்பவத்தில், நபி அவர்கள் சஹாபாக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தொழுகை நேரத்தை அறியவும் மக்களுக்கு அறிவிக்கவும் என்ன செய்யலாம் என்பதாக மஷூரா செய்கிறார்கள். ஒவ்வொரு சஹாபியும் ஒவ்வொரு விதமான முடிவை சொல்கிறார்கள். ஒரு சஹாபி, மலை உச்சியில் நின்று தீப்பந்தத்தை காட்டலாம், அதை பார்க்கும் ஊர் மக்கள் தொழுகைக்கான நேரம் ஆகி விடத்தை அறிந்து கொள்வார்கள் என்கிறார்கள். இன்னொரு சஹாபி, தெருக்களில் தம்பட்டம் அடிக்க சொல்லலாம், அதை கேட்டு மக்கள் தொழுகை நேரத்தை அறிந்து கொள்வார்கள் என்கிறார்கள். இப்படி ஆளுக்கொரு கருத்தை சொல்ல சொல்லி இறுதியாக ஒரு சஹாபி சொன்ன இந்த "அல்லாஹு அக்பர்" முழக்கத்தையே நபி அவர்கள் உறுதி செய்கிறார்கள் என்பது வரலாறு ! ஆக, பாங்கிற்கான நோக்கம் என்ன என்பது தெளிவு. தொழுகையின் நேரத்தை அறிய !

ஆனால், இன்றைக்கு பாங்கை கேட்டு தான் நாம் தொழுகை நேரத்தை அறிகிற நிலையில் இருக்கிறோமா? என்றால் இல்லை. பாங்கே சொல்லப்படவில்லை என்றாலும் நாம் கடிகாரத்தை பார்த்து தொழுது கொள்கிறோம்.
பிறை விஷயமாக, அது உலக விஷயம், அன்றைக்கு வேறு சாத்தியக்கூறுகள் இல்லை , இப்போது அது தேவையில்லை என்று வாதம் வைப்பவர்கள் , தங்கள் வாதத்தில் உண்மையாளர்கள் என்றால், அதே அளவுகோலின் படி பாங்கும் தேவையில்லை என்று தானே சொல் வேண்டும்? அதில் மட்டும், நபி என்ன சொன்னார்களோ அதை செய்ய வேண்டும் என்று கூறுவது முரண்பாடல்லவா?

ஆக, நபி (ஸல்) அவர்கள் ஒன்றை இப்படி செய்யுங்கள் என்று சொல்லி விட்டால் அதை அப்படி தான் செய்ய வேண்டும். நமது விருப்பத்திற்கு விட வேண்டிய காரியம் என்று இருக்குமானால் அது நபி (ஸல்) அவர்களுக்கு தெரியும், அதை அதற்கு ஏற்ற வாசகங்களுடன் சொல்லியிருப்பார்கள் , இவ்வாறு செய்யுங்கள் என்று நேரடியாக கட்டளையிட்டிருக்க மாட்டார்கள்.

எதில் நமது விருப்பப்படி செய்ய இடம் இருக்கிறது என்று அவர்கள் கருதுவார்களோ, அதில் நேரடி கட்டளையாக இல்லாமல் மறைமுக வார்த்தைகளை கொண்டு அவர்கள் பேசியிருப்பார்கள், அந்த வார்த்தையில் இருந்தே, அந்த காரியத்தை நபி செய்த முறையில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை, நாமாக மாற்றியும் செய்யலாம் என்கிற விளக்கத்தை எடுக்க முடியும்.
இதற்கு சான்று தான் தொழுகை நேரத்தை கணக்கிடுவதை பற்றிய நபியின் அறிவிப்புகள்.

இந்த நுணுக்கமான, அதே சமயம், மார்க்கத்தின் அடிப்படையான விஷயத்தை நாம் மனதில் நிறுத்தினோமேயானால் இது போன்ற குழப்பவாதிகளிடமிருந்து நாம் எளிதில் தப்பித்துக்கொள்ளலாம்.

ஆக, என்னதான் குட்டிக்கரணங்கள் அடித்து ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் துள்ளினாலும், பிறையை விஞ்ஞான ரீதியாக முன்கூட்டியே கணித்து மாதங்களை தீர்மானிக்கலாம் என்கிற சித்தாந்தத்தை ஒரு காலத்திலும் இவர்களால் நிறுவவே இயலாது !

அல்லாஹ் காட்டிய சத்திய ஒளியை வாய்களால் ஊதி அணைக்க இவர்கள் செய்யும் முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடியும் என்பதோடு, அந்த சத்திய ஜோதியின் வெப்பம் தாளாமல் ஹிஜ்ரா கமிட்டி என்கிற இந்த பொய்யர்களின் கூடாரம் எரிந்து சாம்பலாகித்தான் போகும் என்பதில் ஐயமில்லை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக