வெள்ளி, 10 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 19)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 19




கஷ்ஃபுடைய ஞானம் இல்முல் முகாஷஃபா என்றால் என்ன? (தொடர்ச்சி)




கஷ்ஃபுடைய ஞானம் தங்களுக்கு இருப்பதாக சொன்ன ஏராளமானோர் முந்தைய இஸ்லாமிய ஆட்சி காலங்களில், ஒன்று நாடு கடத்தப்பட்டனர், அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.
இன்றைய சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்வோருக்கு, இந்த வரலாறுகள் தெரியாமலும், தெரிந்தாலும் அதை பிறரிடமிருந்து மறைக்கும் நிலையிலும் இருப்பதால் தான், தாங்கள் எவரையெல்லாம் அவ்லியாக்கள் என்றும் மகான்களும் என்று அழைக்கிறோம் என்கிற உண்மை தெரியாமல் போய் விடுகின்றது.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோம் என்று சொன்னால், இஸ்லாத்தின் தலைமை பீடமாக ஒரு காலத்தில் செயல்பட்ட துருக்கி நாட்டிலிருந்து, உதுமான் எனும் மன்னரின் ஆட்சிகாலத்தில் தான் இந்த வழிகெட்ட கொள்கைகள் துளிர் விட்டன. 

வேடிக்கை என்னவென்றால், இது போன்ற வழிகெட்டவர்களின் வரலாற்றையெல்லாம் எழுதிவைத்திருப்பவர்கள் யாரென்று பார்த்தால் அதுவும் இதே சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்வோராக தான் இருக்கின்றனர்.



அவ்லியாக்களின் (?) வண்டவாளங்கள்

அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி என்பவர் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரிய இமாம். அவ்லியாக்களை மதிப்பதில் இவர் முதல் இடத்தில் இருப்பதாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஃபத்வாக்கள் வழங்கும் போது இவரது கூற்றையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆன்மீகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர் எனவும் இவரை சுன்னத் ஜமாஅத்தினர் புகழ்ந்து கூறுவதுண்டு. இரகசிய ஞானம், ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற சித்தாந்தங்களுக்குப் புத்துயிரூட்டியவர் இவர். ஷைகு, முரீது வியாபாரத்திற்கு அதிக அளவு விளம்பரம் செய்தவர்.

அவ்லியாக்கள், ஷைகுமார்கள் ஆகியோரின் வரலாறுகளைக் கூறுவதற்காகவே பல வால்யூம்களில் இவர் தபகாத் என்ற பெரும் நூல் எழுதியுள்ளார். மத்ஹபுவாதிகளாலும், (அஞ்)ஞானப் பாட்டையில் நடப்பவர்களாலும் ஒருசேர மதிக்கப்படுபவர் இவர்.

இவர் எழுதிய தபகாத் நூல், அவ்லியா பக்தர்களுக்கும் முரீதீன்களுக்கும் வேதம். இவரது இந்த அரிய பொக்கிஷம் பெரிய பெரிய அரபிக் கல்லூரிகளின் நூலகங்களை இன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.

இவரது நூலில், அவ்லியாக்கள் என்று இவர் எவரையெல்லாம் புகழ்ந்து எழுதியிருக்கிறார், அவர்கள் உண்மையில் அவ்லியாக்களுக்குரிய தகுதிகளுடன் தான் நடந்தார்களா? என்பதையெல்லாம் இதே ஷஃரானியின் தபகாத்துல் குப்ரா நூலிலிருந்தே நாம் இங்கே குறிப்பிடுகிறோம்.


இமாம் கஸ்ஸாலி என்பவரைப் பற்றி இன்றளவும் புகழாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
இவரது பெயரால் மவ்லூது பாடல்கள் கூட உண்டு. அறிவுக்கடலாம் கஸ்ஸாலி என்று அவருக்கு புகழ் மாலைகள் ஏராளம்.
நாகூர் ஹனீஃபாவின் பாடல்களில் கூட, இமாம் கஸ்ஸாலிக்கு எப்படி உள்ளத்தை விசாலமாக்கினாயோ அது போல் எங்களுக்கும் விசாலமாக்கு யா அல்லாஹ், என்று படிப்பார்.
அந்த அளவிற்கு, சுன்னத் ஜமாஅத்தினரால் மிகப்பெரும் அவ்லியாவாக திகழ்ந்த இந்த கஸ்ஸாலி உண்மையில் அவ்லியாவா?

இல்லை. நான் தான் இறைவன், என்று சொன்ன காஃபிர் அவன்.
நான் தான் அல்லாஹ், அல்லாஹ் தான் நான், என்று, இறைத் தன்மைக்கு சொந்தம் கொண்டாடிய காஃபிரான இந்த கஸ்ஸாலியின் வரலாற்றை அறியாதவர்கள் அவனை அவ்லியா என்கின்றனர்.
இவன் வாழும் காலத்திலேயே, இஸ்லாமிய அரசாங்கத்தால்  காஃபிர் பட்டம் பெற்றவன் இந்த கஸ்ஸாலி.

அதே போன்று, ம‌ன்சூர் ஹல்லாஜ் என்று ஒருவன் இருந்தான்.
நான் தான் அல்லாஹ் என்று வெளிப்படையாகவே அறிவித்தவன்.
நாளை நடப்பதை நான் அறிவேன் என்று சொன்னவன்.
அல்லாஹ் அருளிய குர் ஆனுக்கு போட்டியாக நான் இன்னொரு குர் ஆனை எழுதுவேன் என்று அல்லாஹ்விடம் சவால் விட்டவன்.
இவன் வாழ்ந்த காலத்தில் இவனுக்கு மரண தண்டனை விதித்தது அப்போதைய இஸ்லாமிய அரசாங்கம்.

ஆனால், இன்றோ இந்த சுன்னத் ஜமாஅத்தினர் இவனை அவ்லியா என்றும் மகான் என்றும் போற்றுகின்றனர்.

அபு யஜூத் புஸ்தாமி என்று ஒருவன்.
மெஞ்ஞானம் எனும் கடலில் நாங்களெல்லாம் மூழ்கி முத்தெடுப்பவர்கள், நபிமார்களோ கரையில் மட்டும் நிற்பவர்கள் என்று, நபிமார்களை விடவும் தாம் சிறப்புக்குரியவன் என்பதாக பச்சை குஃப்ரை சொன்னவன்.
வஹீ செய்தியாக உங்களைப் போன்றோருக்கு கிடைப்பதெல்லாம் சாதாரணமான, மரணித்துப் போன‌ மனிதர்களிடமிருந்து தான், எனக்கோ அல்லாஹ்விடமிருந்து நேரடியாக சட்டம் கிடைக்கிறது என்று கொழிப்பேறிய பேச்சுக்கள் பேசியவன் இந்த அபு யஜூத் முஸ்தாமி என்பவன்.
இவனை இறை நேசர், மகான், அவ்லியா என்று நா கூசாமல் எழுதி வைத்திருக்கின்றனர்.

அதே போல், அபு செய்யிதுல் ஹர்ராஜ் என்று ஒருவன் இருந்தான்.
அவனையும் அவ்லியா என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அவன் சொன்னது என்ன?
எவரையாவது அல்லாஹ் அளவுக்கு அதிகமாக நேசித்து விட்டானென்று சொன்னால், அவனுக்கு அல்லாஹ்வுக்குரிய எல்லா ஆற்றலையும் கொடுத்து விடுவான் என்பதாக கூறி, தம்மை அல்லாஹ் நேசிக்கிறான், எனவே தமக்கு எல்லா ஆற்றலும் இருக்கிறது என்று கதையளந்தவன்.

அபு ஹம்சா என்கிற ஒருவன். இவன் ஒரு மூளை குழம்பியவனாகவே வலம் வந்தவன்.
தினமும், புதிது புதிதாக சட்டங்கள் சொல்வான், எங்கிருந்து பெற்றாய் என்று கேட்டால், இப்போது தான் நபி (சல்) அவர்கள் என்னிடம் பேசி விட்டு போனார்கள் என்று உளருவான்.
இவனும் அவ்லியாவாம் !

இன்னும் இதே போல் ஏராளமான மோசடிப் பேர்வழிகளின் வரலாற்றை தமது தபகாத் நூலில் எழுதி வைத்திருக்கிறார் ஷஃரானி.
அபுல் ஹசன் என்று ஒருவர், அபு உஸ்மான் மக்ரிபி, நாபிலிஸி, அபு மதீனல் மக்ரிபி,  அபு அப்துல்லாஹ் ஷாஜிரி, அபுல் ஹசன் சம்மு, அபுல் காசிம், அபுல் ஹசன் ஷாதிலி என எண்ணற்ற நபர்களின் வரலாற்றை குறிப்பிட்டு இவர்களெல்லாம் மஹான்கள் என்று தபகாத் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆனால், இவர்களது வரலாற்றை முழுவதுமாக படித்துப் பார்த்தால், இஸ்லாத்திற்கு எதிரான பச்சைக் குஃப்ரை போதித்தவர்களாகவும், அப்போதைய இஸ்லாமிய அரசாங்கங்களால் ஒன்று நாடு கடத்தப்ப‌ட்டவர்களாகவோ அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்ட்டவர்களாகவோ தான் இவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வரும்.

இதே அபுல் ஹசன் ஷாதிலி என்பவன், தமது கூட்டத்தோடு நாடு கடத்தப்பட்டவன்.
ஆனால் இன்று ஷாதிலியா தரீக்கா என்று அவனது பெயரால் ஒரு தாரீக்காவே இருக்கிறது, அந்த அளவிற்கு அவனை மகானாக கருதும் கூட்டம் இன்றைக்கு இருக்கிறது.
இருட்டில் கூட்டமாக சுற்றி நின்று ஹா, ஹூ என்று கூச்சலிடுவார்களே, அது இந்த நபரின் பெயரால் உருவான தரீக்கா தான்.
ஆக, அவ்லியா என்று எவனையெல்லாம் இவர்கள் சொல்கிறார்களோ அவர்களது உண்மை முகம் என்னவாக இருந்தது என்று வரலாற்றை சற்று நாம் திருப்பிப் பார்த்தால், அசிங்கமும், ஆபாசமும், குஃப்ரும் தான் நிறைந்ததாக இருந்தது.


அஹ்மத் கபீர் ரிஃபாயி என்கிற ஒருவனை அவ்லியாக இன்றளவும் இந்த சுன்னத் (?) ஜமாஅத்தினர் போற்றுகின்றனர்.
அவர் நின்று தொழுவார், தொழுது கொண்டே இருப்பார், 3 மாதத்திற்கும் மேலாக ருகூஹ்வுக்கு கூட செல்லாமல் அப்படியே நிற்பார், அருகிலிருக்கும் மரத்தின் வேர் அப்படியே படர்ந்து அவரது காலை துளைத்துக் கொண்டு செல்லும், அப்போதும் அசைய மாட்டார்...

என்றெல்லாம் இவனைப் பற்றி ஜும்மா மேடைகளில் கூட இவன் புகழ் பாடுவார்கள்.

மூன்று மாதங்களாக ஒரே தொழுகையை தொழுபவன் என்றால் மற்ற ஐந்து நேர தொழுகையை தினமும் ஒருவன் தொழ வேண்டுமே, அதை இவன் எப்போது தொழுதான்? ஐவேளை தொழுகையை தொழாதவன் அவ்லியாவா? என்று இந்த மூடர் கூட்டத்தினரிட‌ம் எவரும் கேள்வி கேட்கவில்லை.

இந்த ரிஃபாயி என்பவன் யார்? இதே தபகாத் நூலில் இவனைப் பற்றி எழுதும் போது இவனையும் இஸ்லாமிய அரசாங்கம் மரண தண்டனை விதித்ததாகவே எழுதியிருக்கிறார்கள்.
ஏனெனில், இவன் செய்த பிரச்சாரங்கள் அப்படி. 
தமக்கு மட்டும் ரகசிய ஞானம் இருப்பதாகவும், பொது மக்களுக்கு இருக்கும் குர் ஆனும் ஹதீஸும் தமக்கு தேவையில்லை எனவும், தமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து நேரடியாக கட்டளைகள் வருகின்றன என்றும் சொன்னவன் இவன்.
இன்று ஹராம், ஹலால் என்றெல்லாம் இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்குத் தான் எனவும், தம்மைப் போன்ற மெஞ்ஞானத்தில் கரை கண்டவர்களுக்கு எந்த ஹராமும் ஹலால் தான் என்றும் அல்லாஹ்வுக்கு எதிராக போர் செய்தவன் இந்த ரிஃபாயி என்பவன்.

இந்த அளவிற்கு குஃப்ரான கொள்கையை ஒருவன் பிரச்சாரம் செய்திருக்கிறானே, அவனை எப்படி நாம் அவ்லியா என்றும் மகான் என்றும் சொல்கிறோம் என்கிற அடிப்படை சிந்தனையற்றவர்களாக தான் இன்றளவும் இந்த சுன்னத் ஜமாஅத் என்று தங்களை சொல்லிக் கொள்வோர் இருந்திருக்கின்றனர்.
இவர்களது தபகாத் நூலில் கூட, இந்த கேடு கெட்டவர்களின் வரலாற்றை வெட்கமில்லாமல் எழுதி விட்டு, அநியாயக்கார அரசாங்கம் எங்கள் அவ்லியாக்களை கொலை செய்து விட்டது என்று திரித்து குறிப்பிடுகின்றனர்.

ஆரிஃபுபில்லாஹ் என்கிற அஷைகு இப்ராஹிம் என்பவர்.
இவர் ரமலான் முதல் பிறைக்கு  பூமிக்குள் சுரங்கம் அமைத்து உள்ளே செல்வாராம்,
பிறகு 30 நாட்கள் கழித்து தான் வெளியே வருவாராம். அதுவரை ஒரே ஒளுவில் தான் உள்ளே தொழுவாராம்.

என்றெல்லாம் உளரித் தள்ளியிருக்கிறார்கள்.

இறை நேசச் செல்வர்களில் ஒருவர் தான் நிர்வாணி அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி) அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள். அந்த உரையில் சுல்தான், திம்யாத், இரண்டு மாளிகைகளுக்கு இடையே உள்ள லூக் வாசல், தைலூன் பள்ளிவாசல் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று (அர்த்தமில்லாமல்) உளறுவார். இதைக் கேட்டு மக்கள் மகத்தான ஞானம் பெறுவார்கள். பெரியவர்கள் முன்னிலையில் வேண்டுமென்றே காற்றை வெளிப்படுத்தும் இந்தப் பெரியார், (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார். இவர் 930 ஆம் ஆண்டில் மரனித்தார்.

(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)

நிர்வாணமாக ஒருவன் குத்பா ஓதி இருக்கிறான்; அதை மக்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்; மேலும் வாயல் வந்த படி மிம்பரில் இருந்து உளறியுள்ளான். 

இந்த நபர் போல் காற்று விடவா? அந்த நபர் போல் காற்று விடவா? என்று காற்று விட்டுக் காட்டிய பைத்தியக்காரர்களாக தான் இந்த "அவ்லியாக்கள்" இருந்திருக்கின்றனர்.

இத்தகைய கிறுக்கனை அந்த மக்களும் அவ்லியா என்று கொண்டாடி இருக்கின்றனர். ஷஃரானி என்பாரும் அவ்லியா பட்டியலில் சேர்த்துள்ளதைப் பார்க்கும் போது அவ்லியாக்கள் என்போரின் இலட்சனம் பளிச்செனத் தெரிகிறது.

நிர்வாணமாக சுற்றித் திரிவதோடு அல்லாமல், நிர்வாணமாக இருப்பது பொது மக்களாகிய உங்களுக்கு தான் தகாது, மெஞ்ஞானத்தில் கரை கண்டவர்களுக்கு இதுவெல்லாம் ஹலால் தான் என்று வியாக்கானமும் கொடுத்திருக்கிறார் இந்த கேடு கெட்ட அவ்லியா !


நசருதீன் அல் நஹாஸ் என்கிற ஒரு அவ்லியா இருந்தாராம்.
அவரது இயல்மான நிலையே நிர்வாணம் தான்.
சில நேரங்களில் மட்டும் முன்பக்கத்தை மறைக்க சிறிய துணி துண்டு ஒன்றினை பயன்படுத்துவாராம்.
இப்படியும் எழுதி வைத்து, இவனை அவ்லியா என்று போற்றுகின்றனர்.

செய்யதுல் ஷரீஃபுல் மஜ்னூப் என்கிற ஒரு ஆள்.
இவன், ரமலான் மாதங்களில் பகலெல்லாம் வயிறு முட்ட உண்பானாம்.
கேட்டால், உங்களுக்கு தான் சட்டமெல்லாம், எங்களை இந்த சட்டமெல்லாம் கட்டுப்படுத்தாது என்பானாம்.
ஷைத்தானின் குணாதிசயங்களை பெற்ற இவனைப் போன்ற அயோக்கியர்கள் இன்றைய சுன்னத் ((?) ஜமாஅத் கூட்டத்தினரின் அவ்லியா !

சாதுனுல் மஜ்னூன் என்று ஒருவன் இருந்தான்.
ஆறு மாதம் கிறுக்கனாகவும், ஆறு மாதம் கிறுக்கு தெளிந்தவனாகவ்வும் இருப்பான் என்றே இவனைப் பற்றி எழுதிவைத்திருக்கிறார்கள்.
இவனும் இவர்களுக்கு அவ்லியா !

ஷேக் உபைதுல் பல்கினி என்கிற ஒருவன் இருந்தான்.
முழு கிறுக்கனாகவே உலா வந்தவன். வாழ் நாளில் குளித்தது கிடையாது, தலைமுடியெல்லாம் சடை பின்னபப்ட்டு அதிலிருந்து புழுக்கள் வடியுமாம். 
அவனை மகான் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.

சத்ருதீன் அல் பக்ரி என்கிற ஒருவனைப் பற்றிய வரலாற்றையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
நபி (சல்) அவர்களின் கப்ருக்கு சென்று சலாம் சொல்வான்.
பின், எனக்கு நபி (சல்) அவர்கள் பதில் சலாம் சொன்னார்கள், உங்களுக்கு அது கேட்காது, என்னைப் போன்ற பக்தி முத்தியவர்களுக்கு தான் அது கேட்கும் என்பான்.
இவன் இவர்களுக்கு  அவ்லியா.

ஷபானுல் மஜ்னூன் என்கிற ஒருவன்.
பின்னால் மறைக்க‌ ஒரு சிறு துண்டு, முன்னால் மறைக்க ஒரு சிறு துண்டு. இது தான் இவனது மொத்த ஆடை.
குர் ஆன் ஓதுகிறேன் என்று கூறி விட்டு, குர் ஆனில் இல்லாத வசனங்களையெல்லாம் தம் சொந்த கருத்தாக ஓதுவான். சுற்றியிர்ப்பவர்களும் மெய்மறந்து கேட்பாரக்ளே தவிர எவரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்களாம்.
இப்படி எழுதி வைத்து, இந்த அளவிற்கு குர் ஆனுடன் விளையாடியிர்கும் ஒரு ஷைத்தானை அவ்லியா என்று புகழ்கின்றனர்.

ஆக, கஷ்ஃபுடைய (அல்லாஹ்வின் புறத்திலிருந்து நேரடி ஞானம்) ஞானம் பெற்றவர்களுக்கு எந்த ஹராமும் இல்லை, மற்ற மற்ற மனிதர்களுக்கு தான் ஹராம், ஹலால் எல்லாம்.
தவத்தின் மூலம் ஒரு நிலையை கடந்து மெஞ்ஞானத்தை அடைந்தவர்களுக்கு அல்லாஹ் பிரத்தியேக சட்டத்தை தான் கொடுக்கிறான் என்கிற பொய்யான சித்தாந்தம் தான் இந்த ஒட்டு மொத்த கொள்கைக்கும் அடிப்படையாக இருந்தது.

அதாவது, ஞானத்தையே இவர்கள் இரண்டாக பிரித்தனர்.
ஒன்று, இல்முல் முஆமலா.. அதாவது, உலகம் சம்மந்தப்பட்ட, மனிதர்கள் தொடர்பான காரியங்கள்.
இரண்டு, இல்மு மகாஷஃபா ‍ அல்லாஹ்விடமிருந்து நேரடியாக கிடைக்கும் ஞானம்.


குர் ஆன், ஹதீஸிலிருந்து சில சான்றுகளையும் இவர்கள் தங்கள் அபத்தமான கொள்கைக்கு சான்றாக முன்வைப்பார்கள்.

முதலில், அல்லாஹ் குர் ஆனில் சொல்கின்ற வசனங்களான, யார் இந்த மார்க்கத்திற்காக உழைக்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் நேரான பாதையை காட்டுவான்..என்பதாக வரக்கூடிய பொதுவான வசனங்கள்.

இதற்கும் மெஞ்ஞான சித்தாந்தத்திற்கும் எந்த தொடர்பாவது இருக்கின்றதா?
அல்லாஹ்வின் மார்கத்திற்காக போராடுபவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுவான் என்றால் நாம் அனைவருமே அவ்வாறு அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக போராட வேண்டும் என்கிற அனைவருக்கும் பொதுவான சட்டம் தான் அந்த வசனத்தில் இருக்கிறதே தவிர, பிரத்தியேக சட்டம் சிலருக்கு அருளப்படும் என்றோ, அல்லாஹ்வின் புறத்திலிருந்து நேரடியாக சில வஹீ செய்தி சிலருக்கு மட்டும் இறங்கும் என்றோ கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

மற்றொரு ஹதீஸை காட்டுவர்கள்.

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக் கிறார்கள். என் சமுதாயத்தினரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத் தான் இருக்கும். (புஹாரி 3689)


எனக்கு முந்தைய சமுதாயத்தில் சில மனிதர்களுக்கு அல்லாஹ் சில உதிப்புகளை உள்ளத்தில் இடுவான், எனது சமூகத்தில் அப்படி யாருக்கேனும் அல்லாஹ் இடுவதாக இருந்தால் உமருக்கு மட்டும் தான் என்பதாக நபி (சல்) அவர்கள் சொன்னதாக வரக்கூடிய இந்த‌ ஹதீஸை எடுத்துக் காட்டி, இதில் உமர் (ரலி) அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு, கஷ்ஃபுடைய ஞானம் உண்டு என்று நபி (சல்) அவர்களே கூறுகிறார்கள் என்பார்கள்.
ஆனால், எனக்குப் பிறகு எவருக்காவது உண்டு என்று சொன்னால் அது உமருக்கு தான் என்று அவர்கள் சொல்வதிலிருந்தே நபிக்கு பிறகு எவருக்குமே அத்தகைய பிரத்தியேக தன்மை இல்லை என்று புரிகிறது.

அடுத்ததாக, மூஸா நபி தொடர்பாக குர் ஆனில் வரக்கூடிய ஒரு வரலாற்று சம்பவம் ஒன்றை இவர்கள் தங்களுக்கு சாதகமான ஆதாரமாக முன்வைப்பார்கள்.
அதாவது, கிள்ர் நபிக்கும் மூசா நபிக்கும் இடையே நடைபெறும் ஒரு வரலாற்று சம்பவம் பற்றி அல்லாஹ் தமது திருமறையில் 18 ஆம் அத்தியாயத்தில் 59 ஆம் வசனம் முதல் 82 ஆம் வசனம் வரை விளக்கமாக சொல்கிறான்.

அதில், மூஸா நபி அறிந்திருக்காத பல செய்திகளை கிள்ர் நபி அறிந்து வைத்ததாக அல்லாஹ் சொல்வான்.

இந்த வசனங்களை முன்வைத்து,இந்த சூஃபியாக்க‌ளோ, கிள்ருக்கு பல மறைவான விஷயங்கள் தெரிந்திருந்தது எனவும், முஸா நபிக்கு அவை தெரியவில்லை எனவும், கிள்ர் என்பவர் அவ்லியா, ஆகவே அவ்லியாவை விட நபிமார்களுக்கு மறைவான பல விஷயங்கள் தெரியாமல் இருந்திருக்கின்றன என்று வாதம் புரிவர்.

இந்த வாதம் எந்த அளவிற்கு அபத்தமானது என்பதை அறிவதற்கு, அந்த வரலாற்றை நாம் ஹதீஸ்கள் துணை கொண்டு முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.


அவ்வூரார் அநீதி இழைத்த போது அவர்களை அழித்தோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு காலக்கெடுவையும் ஏற்படுத்தினோம்.
"இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும் வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது என் பயணத்தை நீண்ட காலம் தொடர்வேன்'' என்று மூஸா தமது ஊழியரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
இரண்டு கடல்கள் சங்கமம் ஆகும் இடத்தை அவ்விருவரும் அடைந்த போது தமது மீனை மறந்தனர். அது கடலைப் பிளந்து தனது பாதையை அமைத்துக் கொண்டது.
அவ்விருவரும் கடந்து சென்ற போது "காலை உணவைக் கொண்டு வாரும்! இந்தப் பயணத்தில் பெரும் சிரமத்தை அடைந்து விட்டோம்'' என்று தமது ஊழியரிடம் (மூஸா) கூறினார்.
"நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார்.
"அதுவே நாம் தேடிய இடம்'' என்று (மூஸா) கூறினார். இருவரும் பேசிக் கொண்டே வந்த வழியே திரும்பினார்கள்.
(அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம்.
"உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா?'' என்று அவரிடம் மூஸா கேட்டார்.
"என்னிடம் பொறுமையாக இருக்க உமக்கு இயலாது; உமக்குத் தெரியாத விஷயத்தில் உம்மால் எவ்வாறு பொறுமையாக இருக்க இயலும்?'' என்று (அந்த அடியார்) கூறினார்.
"அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்! உமது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்ய மாட்டேன்'' என்று (மூஸா) கூறினார்.
"நீர் என்னைப் பின்பற்றினால் நானாக உமக்கு இது பற்றிய விளக்கத்தைக் கூறும் முன் என்னிடம் கேட்கக் கூடாது'' என்று (அந்த அடியார்) கூறினார்.
இருவரும் நடந்தனர். இருவரும் ஒரு கப்பலில் ஏறியவுடன் (அந்த அடியார்) அதில் ஓட்டை போட்டார். "இதில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காக நீர் ஓட்டை போடுகிறீரா? மிகப் பெரிய காரியத்தைச் செய்து விட்டீரே'' என்று (மூஸா) கூறினார்.
"என்னுடன் உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என நான் உமக்குக் கூறவில்லையா?'' என்று (அந்த அடியார்) கேட்டார்.
"நான் மறந்ததற்காக என்னைப் பிடித்து விடாதீர்! என் விஷயத்தில் சிரமத்தை ஏற்படுத்தி விடாதீர்!'' என்று (மூஸா) கூறினார்.
இருவரும் நடந்தனர். ஓர் இளைஞனைக் கண்ட போது (அந்த அடியார்) அவனைக் கொன்றார். "எந்த உயிரையும் கொல்லாத ஒரு தூய உயிரைக் கொன்று விட்டீரே! தகாத காரியத்தைச் செய்து விட்டீரே'' என்று (மூஸா) கூறினார்.
"நீர் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என உம்மிடம் நான் கூறவில்லையா?'' என்று (அந்த அடியார்) கேட்டார்.
"இதன் பிறகு எதைப் பற்றியேனும் நான் உம்மிடம் கேட்டால் என்னுடன் நீர் உறவு வைக்க வேண்டாம். என்னிடமிருந்து (போதுமான) சமாதானத்தைப் பெற்று விட்டீர்'' என்று (மூஸா) கூறினார்.
அவ்விருவரும் நடந்தனர். முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அங்கே விழுவதற்குத் தயாரான நிலையில் ஒரு சுவரைக் கண்டனர். உடனே (அந்த அடியார்) அதை (தூக்கி) நிறுத்தினார். "நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்று இருக்கலாமே'' என்று (மூஸா) கூறினார்.
"இதுவே எனக்கும் உமக்கும் இடையே பிரிவாகும். உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன்.
அந்தக் கப்பல் கடல் தொழில் செய்யும் சில ஏழைகளுக்குரியது. அவர்களுக்குப் பின்னே ஓர் அரசன் இருக்கிறான். அவன் (பழுதில்லாத) ஒவ்வொரு கப்பலையும் அபகரித்து எடுத்துக் கொள்வான். எனவே அதைப் பழுதாக்க நினைத்தேன்.
அந்த இளைஞனின் பெற்றோர் நம்பிக்கை கொண்டிருந்தனர். "அவன் அவ்விருவரையும் (இறை) மறுப்பிலும் வழி கேட்டிலும் தள்ளி விடுவான்'' என்று அஞ்சினோம்.
"அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனை விடச் சிறந்த தூய்மையான நெருங்கி உறவாடக் கூடியவனைப் பகரமாகக் கொடுப்பான்'' என நினைத்தோம்.
அந்தச் சுவர் அந்நகரத்தில் உள்ள இரண்டு அனாதைச் சிறுவர்களுக்கு உரியது. அதன் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்லவராக இருந்தார். "எனவே அவ்விருவரும் பருவமடைந்து அவர்களுக்குரிய புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று உமது இறைவன் நாடினான். இது உனது இறைவனின் அருள். இதை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கம் இதுவே!'' (என்றார்)
அல்குர்ஆன் 18:59-82



இந்த வசனங்கள் மூஸா (அலை), கிழ்ர் தொடர்பான சம்பவத்தைப் பற்றிக் கூறுகின்றன. புகாரியில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் இந்த வசனங்களுக்கு விளக்கமாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள்:
(ஒரு முறை) நபி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே (உரையாற்றியபடி) நின்று கொண்டிருந்த போது அவர்களிடம், "மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?'' என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் "நானே மிகவும் அறிந்தவன்'' என்று பதிலளித்து விட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள் "(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு'' என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள்.
எனவே அல்லாஹ் "இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகமாக அறிந்தவர்'' என்று அறிவித்தான். மூசா (அலை) அவர்கள் "என் இறைவா! அவரை நான் சந்திக்க என்ன வழி?'' என்று கேட்டார்கள். அதற்கு, "கூடை ஒன்றில் ஒரு மீனை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்! நீங்கள் அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீர்களோ அங்கே தான் அவர் இருப்பார்'' என்று அவர்களிடம் கூறப்பட்டது.
அவ்வாறே மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளர் யூஷஉ பின் நூன் என்பாரையும் அழைத்துக் கொண்டு ஒரு கூடையில் மீனைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். இருவரும் ஒரு பாறைக்கருகில் வந்து சேர்ந்த போது அங்கு இருவரும் தலை வைத்து உறங்கினர். கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துவிட்(டுச் சென்று விட்)டது. மூசா (அலை) அவர்களுக்கும், அன்னாருடைய உதவியாளருக்கும் (அந்தப் பாதை) வியப்பாய் அமைந்தது. இந்நிலையில் அன்றைய மீதிப் பொழுதிலும், இரவிலும் அவர்கள் (தொடர்ந்து) நடந்தனர்.
மறுநாள் பொழுது விடிந்த போது மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம் "நமது காலைச் சிற்றுண்டியை கொண்டு வாரும்! நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்றார்கள். தமக்குக் கட்டளையிடப் பட்டிருந்த இடத்தைக் கடக்கும் வரை மூசா (அலை) அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை. அவர்களுடைய உதவியாளர் "நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தோமே! பார்த்தீர்களா? அங்கே தான் நான் அந்த மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதனை நான் (உங்களிடம்) கூறுவதை ஷைத்தான் தான் எனக்கு மறக்கடித்து விட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தனது பாதையை அமைத்துக் கொண்டது'' என்றார். மூசா (அலை) அவர்கள், "நாம் தேடி வந்த இடம் அது தான்'' என்று கூறினார்கள்.
பிறகு இருவரும் தமது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்த வழியே) திரும்பிச் சென்றனர். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறைக்கு வந்த போது அங்கே, முழுவதுமாக ஓர் துணியால், அல்லது தமது ஆடையால் தம்மைப் போர்த்தியபடி ஒரு மனிதர் (கிழ்ர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர், "உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்?)'' என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான் தான் மூசா'' என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா?'' என்று கேட்டார்.
மூசா (அலை) அவர்கள், "ஆம்' என்று பதிலளித்துவிட்டு, "உங்களுக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின் தொடர்ந்து வரட்டுமா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், "நிச்சயமாக உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன்'' என்று கூறினார்கள்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமை யாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்ய மாட்டேன்'' என்றார்கள்.
இருவரும் மரக்கலம் ஏதும் தங்களிடம் இல்லாததால் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு மரக்கலம் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள், தங்கள் இருவரையும் (மரக்கலத்தில்) ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (மரக்கல உரிமையாளர் களால்) கிழ்ர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டார்கள். எனவே, அவர்கள் இருவரையும் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக் கொண்டனர்.
அப்போது ஒரு சிட்டுக் குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, (தனது சின்னஞ் சிறு அலகால்) கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் கிழ்ர் (அலை) அவர்கள் "மூசாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில் தான் உள்ளது'' என்று கூறினார்கள்.
(சற்று நேரம் கழிந்ததும்) கிழ்ர் (அலை) அவர்கள் அந்த மரக்கலத்தின் (அடித்தளப்) பலகைகளில் ஒன்றை வேண்டுமென்றே கழற்றி (அந்த இடத்தில் முளைக் குச்சியை அறைந்து) விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் "நம்மைக் கட்டணம் ஏதுமில்லாமல் ஏற்றிக் கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே பின்னப்படுத்தி விட்டீர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள், "என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் (முன்பே) சொல்ல வில்லையா?'' என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான் மறந்து போனதற்காக என்னைத் தண்டித்து விடாதீர்கள்'' என்று கூறினார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) முதல் தடவை மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்.
(பிறகு இருவரும் மரக்கலத்தில் இருந்து வெளியேறி கடலோரமாக) நடந்து போய்க் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞன் சில இளைஞர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிழ்ர் (அலை) அவர்கள் அவனது உச்சந் தலையைத் திருகி தலையைத் தனியே எடுத்து விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் "ஒரு பாவமும் செய்யாத உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே!'' என்று கேட்டார்கள். அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள், "நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) நான் உங்களிடம் சொல்லவில்லையா?'' என்று கேட்டார்கள். மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்தார்கள்.
இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அவ்வூர் மக்களிடம் உண்ண உணவு கேட்டார்கள். ஆனால், அவ்வூரார் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில் அவ்வூரில் சாய்ந்தபடி கீழே விழயிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைக் கண்ட) கிழ்ர் (அலை) அவர்கள் அச்சுவரைத் தமது கரத்தால் செப்பனிட்டார்கள். மூசா (அலை) அவர்கள், "நீங்கள் நினைத்தால் இதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே!'' என்றார்கள். கிழ்ர் (அலை) அவர்கள், "இது தான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய கட்டம்'' என்று கூறினார்கள்.
(இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்த பின்) நபி (ஸல்) அவர்கள், "மூசா பொறுமையாக இருந்திருப்பார் என்றால் அவ்விருவர் பற்றிய (நிறைய) விஷயங்களை (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே! என நாம் விரும்பினோம்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 122


ஆக, அல்லாஹ் தான் மிகவும் தெரிந்தவன்; அறிந்தவன் என்று கூறுவதற்குப் பதிலாக, "நானே மிக அறிந்தவன்' என்று மூஸா (அலை) கூறி விட்டார்கள். உண்மையில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் அன்றைய தினம் மூஸாவைத் தவிர்த்து அறிவில் சிறந்தவர் வேறு யாருமில்லை தான். அதனால் யதார்த்தமாக, தன்னை அறிந்தவர் என்று குறிப்பிட்டது சரியானது தான். என்றாலும் இதில் ஆணவம் தொனிக்கின்றது. இது அல்லாஹ்வுக்குப் பிடிக்கவில்லை.
அதனால் அவர்களை கிள்ரைச் சந்திக்கச் செய்கின்றான். அவ்வாறு சந்திக்கச் செல்கின்ற போது வழியில் அவர்களுக்கு மறதி ஏற்படுகின்றது. இந்த மறதியை அல்லாஹ்வே அவர்களுக்குக் கொடுத்து, இவ்வாறு மறதி உடையவர் எவ்வாறு மிகவும் அறிந்தவராக முடியும்? என்பதை உணர்த்துகின்றான். 

இதற்குப் பின்னால், மூஸா (அலை) அவர்கள் தாம் குறிப்பிட்ட அந்த வார்த்தைக்காக மிகக் கடுமையான முறையில், திரும்பத் திரும்ப கிழ்ர் அவர்களால் கண்டிக்கப்படுகிறார்கள்.

தாங்கள் இருவரும் கற்ற கல்வி, இந்தச் சிட்டுக் குருவி தனது அலகினால் கடலில் அள்ளிய தண்ணீரின் அளவு தான் என்பதை மூஸாவிடம் கிழ்ர் அவர்கள் அடக்கத்துடன் தெரிவிக்கின்றார்கள்.
ஆணவத்தை, அகந்தையை அடித்து நொறுக்குகின்ற இந்தச் சம்பவத்திலிருந்து அடக்கத்தை, பணிவைப் பெறுவதற்குப் பதிலாக ஷியாக்கள் மேலும் ஆணவத்தைப் பெறுகிறார்கள். இதிலிருந்து தங்களின் மூலம் யூதயிஸம் தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றனர்.

இதை வைத்து கிள்ர் நபிக்கு ரகசிய ஞானமெல்லாம் இருந்தது என்றும் ,அல்லாஹ்விடமிருந்து நேரடியக இல்மை பெற்றார்கள் என்றும் இவர்கள் கூறுவார்களென்றால், கிள்ர் நபியை காண மூஸா நபி சென்ற போது, முன்கூட்டியே மூஸா நபியை அவர் கடையாளம் கண்டிருக்க வேண்டும். அந்த ஞானம் அவருக்கு இருந்திருக்க வேண்டும்.
உண்மையில் அப்படிப்பட்ட ஞானம் அவருக்கு இருந்ததா? என்றால் இல்லை.
நீங்கள் யார்? என்று மூஸா நபியை பார்த்து கிள்ர் நபி கேட்கிறார்கள் என்று தான் ஹதீஸ் சொல்கிறது.
மூஸா நபி சலாம் சொன்ன போது, எங்களைப் போல், உங்கள் ஊரிலும் சலாம் சொல்கின்ற வழக்கம் இருக்கிறதா? என்று கேட்கிறார்.
சலாம் சொல்கிற வழக்கம் மூசா நபியின் சமுகத்தில் இருந்த விஷயம் அவருக்கு தெரியவில்லை.
உங்களிடம் தான் தவ்ராத் இருக்கிறதே, பிறகு ஏன் என்னிடம் வந்தீர்கள் என்று கேட்கிறார், இதிலும் அவருக்கு இருந்த அறியாமை வெளிப்படுகிறது.

கிராமத்தார்களிடம் சென்று உணவு கேட்டிருக்கிறார், அவர்கள் தர மறுத்திருக்கிறார்கள். அவர்கள் தர மறுப்பார்கள் என்கிற ஞானம் இவருக்கு இல்லாமல் தான் இருந்தது.

ஆக, எல்லா காரியத்திலும் அவர் சாதாரண மனிதராகவே தான் இருந்திருக்கிறார், மூசா நபிக்கு பாடம் கற்பிக்கும் பொருட்டு, அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த இந்த மூன்று காரியங்களை மட்டும் அறிந்து கொண்டார்.

ஆக இதிலும் இந்த வழிகேடர்களுக்கு எந்த சான்றும் இல்லை.



தவ்ஹீத் ஜமாஅத்தை கலைக்க தயார் !!
போலி சுன்னத் ஜமாஅத்தினருக்கு பகிரங்க சவால் :

இந்த போலி ஷஃரானியின் தபகாத்துல் குப்ராவில் இந்த போலி சுன்னத் ஜமாஅத்தினர் அவ்லியா என போற்றும் ஒரு நபரின் வரலாறு ஒன்றினை எழுதி வைத்திருக்கின்றனர்.
அவரது பெயர் அஸ்ஸாலிஹ் அப்துல் காதர் சுப்கி.

இவன் எப்படிப்பட்ட அயோக்கியனாக இருந்தான் என்பதை அறிவதற்கு முன்பாக, இவனுக்கு தபகாத் நூலின் ஆசிரியர் கொடுத்திருக்கும் புகழ்மாலையை முதலில் நாம் பார்க்க வேண்டும்.

இந்த அப்துல் காதிர் சுப்கீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அதிகமாக குர்ஆனை ஓதக் கூடியவர்.
இவர் அல்லாஹ் பொருந்திக் கொண்டவர்களில் ஒருவராக இருந்தார்
இவர் உற்று நோக்குவதற்கு சுவர்களோ, நீண்ட தூரமோ திரையாகாது. 
இவர் இரவு முழுவதும் அதிகாலை வரை ஒன்று ஓதிக்கொண்டிருப்பார், அல்லது சிரித்துக் கொண்டிருப்பார் அல்லது தானாகவே பேசிக்கொண்டிருப்பார். 
ஒரே பாத்திரத்திலிருந்து எண்ணெய், தேன், ஆளிவிதை ஆகிய மூன்றையும் போட்டு வைத்து பிறகு அதிலிருந்து மூன்றையும் தனித் தனியே பிரித்து எடுக்கும் ஆற்றலுடையவர்

என்றெல்லாம் சொல்லி விட்டு, அடுத்ததாக ஒரு செய்தியை இவரைப் பற்றி சொல்கின்றார், அந்த நூலின் ஆசிரியர்.

அதாவது,

வெளிப்படையில் அனைவரும் சொல்வதற்கு வெட்கப்படக்கூடிய வார்த்தைகளைப் பேசக்கூடியவராக இருந்தாராம் இந்த சுப்கி அவ்லியா.

சரி, அப்படியென்ன பேசினார்? என்று தொடர்ந்து படித்தால், இவர் ஒருமுறை ஒரு மணமகளை பெண்பேசுவதற்காக அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு சென்று, அந்த பெண்ணிடம் நேரடியாக சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

கடுகளவு நாகரீகம் தெரிந்த எவராலுமே பேச நா எழாது. அந்த அளவிற்கு கொச்சையாக, வக்கிரத்தின் உச்சத்தில் நின்று கொண்டு அந்த பெண்ணிடம் இந்த சுப்கி அவ்லியா பேசியதன் அரபு மூலத்தை கீழே தருகிறோம்.


لكشف عن حقيقة الصوفية - (2 / 74)
ويقول القطب الرباني والغوث الصمداني:
ومنهم الشيخ الصالح عبد القادر السبكي رحمه الله تعالى، أحد رجال الله تعالى، كان من أصحاب التصريف بقرى مصر رضي الله عنه، وكان رضي الله عنه كثير التلاوة للقرآن...وكان كثير الكشف لا يحجبه الجدران والمسافات البعيدة من اطلاعه على ما يفعله الإنسان في قعر بيته...وخطب مرة عروساً فرآها فأعجبته، فتعرى لها بحضرة أبيها، وقال: انظري أنت الأخرى حتى لا تقولي بعد ذلك بدنه خشن، أو فيه برص، أو غير ذلك، ثم مسك ذكره وقال: انظري هل يكفيك هذا؟ وإلا فربما تقولي هذا ذكره كبير لا أحتمله أو يكون صغيراً لا يكفيك، فتقلقي منه وتطلبي زوجاً أكبر آلة مني.

இதை தமிழாக்கம் செய்வதற்கே நமக்கு கூசுகிறது.

இந்த அளவிற்கு கேடுகெட்ட அயோக்கியனான இவனையெல்லாம் அவ்லியா என்றும் மகான் என்றும் தலையில் தூக்கி வைக்கும் போலி சுன்னத் ஜமாஅத்தினருக்கு நாம் ஒரு பகிரங்க அறைகூவலாகவே விடுகிறோம்.

இவர்கள் தங்கள் ஜும்மா மேடைகளில் 
மேலேயுள்ள இந்த அரபு மூலத்தை தமிழாக்கம் செய்துப் பேசி விட்டால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தையே நாங்கள் கலைத்து விடுகிறோம் !

இந்த சவாலை ஏற்க எந்த போலி சுன்னத் ஜமாஅத்தினராவது தயாரா?
கியாமத் நாள் வரையானாலும், இவர்களால் இதை மொழியாக்கம் செய்து பொது சபையில் பேசவே இயலாது, அப்படி செய்தால் அப்படி பேசியவர் தான் சமாதி ஆவார்.
அந்த அளவிற்கு வக்கிரத்தின் உச்சம் அந்த சுப்கியின் பேச்சு !

தொடரும், இன்ஷா அல்லாஹ் 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக