புதன், 25 செப்டம்பர், 2013

மோடி எதிர்ப்பும் டிசம்பர் 6 போராட்டமும் சமமா ?




மோடியின் துரோகங்கள் நடந்து வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில் அன்றைக்கு மக்களிடம் இருந்த  கொந்தளிப்பும் வேகமும் இப்போது சற்று குறைந்து தான் இருக்கும் என்பதால் மோடியின் வருகையை இப்போது எதிர்த்து போராட்டம் அறிவிப்பது பெருமளவு மக்கள் திரளை ஒன்று சேர்க்காது, இறுதியில் அதுவே அவனுக்கு விளம்பரமாக தான் ஆகும் என சகோ. பிஜே சமீபத்தில் உணர்வில் கேள்வி ஒன்றுக்கு விளக்கமளித்திருந்தார்.


தேர்தல் நேரம், மோடியை வானளாவ புகழும் ஊடகங்கள், மோடிக்கென போலியாக தயாரிக்கப்படும் பகட்டு விளம்பரங்கள் என, இல்லாத புகழை மோடியின் பக்கம் திணிக்கும் ரகசிய வேலைகள் நடைபெற்று வரும் இந்த சூழலில் அவனை எதிர்ப்பதற்கென்று முஸ்லிம்கள் அணி திரள்வது என்பது இப்போதைக்கு நமக்கு சாதகங்களை விட பாதகங்களை தான் அதிகம் ஈட்டு தரும் என்பதையும்,
ஊடகமும் கூட அதை தான் விரும்புகிறது என்கிற காரணத்தால் நாம் இப்போதைக்கு இவர்கள் வலையில் சிக்காமல் ஹிக்மத்தாக (நுணுக்கமான சிந்தனையுடன்) செயல்பட வேண்டும் என்பது  தான் சகோ. பிஜேவின் கருத்தாக இருந்தது.

பிஜே குறட்டை விட்டால் கூட, நான்கு குறட்டை தான் விட்டார், ஏன் ஒற்றைப்படையாக விடவில்லை? என்று கேட்கும் சில பிஜே வியாபாரிகள், "அப்படியானால் டிசம்பர் 6  மட்டும் ஏன் வருடம் போராட்டம் நடத்துகிறாராம்? பிஜே எப்போதும் முரண்பட்டு தான் பேசுவாரா? அதையும் ஏற்றுக்கொண்டு பிஜேவை தக்லீத் செய்கிறீர்களா? என்று நம்மை சாடியிருக்கிறது.

இது போன்ற அரை வேக்காடுகளால் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியாது என்பதால் தான் நாம் என்ன நிலைபாட்டை எடுக்க வேண்டும், எது இப்போதைக்கு சரியானது என்பதை கூட சொல்லி தர வேண்டியுள்ளது. 
அது தங்களது மலட்டு மூளைக்கு எட்டவில்லை என்றால் மெளனமாக இருந்திருக்க வேண்டும், அல்லது அழகிய முறையில் சந்தேகங்கள் அல்லது கண்ணியமான விமர்சனங்கள் மூலம் இதை எதிர்க்கொண்டிருக்க வேண்டும். 

அதை விடுத்து, தரமற்ற விமர்சனங்களை செய்ய வேண்டாம் எனவும் தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சமுதாய பேரியக்கத்தை விமர்சனம் செய்யும் கடுகளவு தகுதி கூட இவர்கள் எவருக்குமே இல்லை என்பதையும் முதலில் இவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.

எனினும், இது போன்ற சந்தேகம் நடுநிலையாளர்களுக்கும் எழும் என்பதால் எனக்கு தெரிந்த விடையை இங்கே சொல்கிறேன்.

பாப்ரி மஸ்ஜிதை மீட்பதற்கு வருடா வருடம் போராடுவதற்கும் மோடி என்கிற ஒரு தனி மனிதனுக்கு எதிராக வருடா வருடமோ அல்லது குறிப்பிட்ட இடைவெளி விட்டோ போராடுவதற்கும் வேறுபாடு உள்ளது.

மோடியை எதிர்க்க வேண்டும் என்றால் அவன் செய்த அந்த கொடூர செயலுக்காக எதிர்க்கிறோம், நமது எதிர்ப்பின் மூலம் அந்த கொடுரத்தை செய்தவனுக்கு தக்க தண்டனை வாங்கி தர கேட்டு எதிர்க்கிறோம். இது முழுக்க முழுக்க தனி மனிதனை பற்றிய விஷயம்.
மோடியை கைது செய்ய சொல்லவும் அதன் மூலம் புண்ணாகி போன நமது உள்ளங்கள் ஆறிப்போவதற்காகவும் தான் நமது எதிர்ப்புகளும் போராட்டங்களும் உதவுமே தவிர நாம் இழந்த உயிர்களையோ உடமைகளையோ அது மீட்டு தராது. 
ஆக, மோடிக்கு எதிராக போராடுவது என்பது ஒரு கொலைகாரனை கைது செய்யுங்கள் என்று அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்காக மட்டுமே !
இதையும் செய்யத்தான் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் எந்த மனிதனை கொலைகாரன் என்றும் பயங்கரவாதி என்றும் தீவிரவாதி என்றும் நாம் விமர்சித்து போராட்டத்தில் குதிக்கிறோமோ, அவனை ஒட்டு மொத்த ஊடகமும் பாதுகாக்கிறது, வடநாட்டில் ஒரு பொதுகூட்டத்தில் பேசினால் தென்னாட்டு ஊடகம் அதை நேரடியாக ஒளிபரப்புகிறது, அவனுக்குரிய புகழ்மாலைகளை சூட்டி அழகு பார்க்கிறது, அவனை அடுத்த பிரதமாருக்குவதற்கு கூட முயற்சிக்கிறது. 

எந்த காரியத்தை அவன் செய்ததால் அவனுக்கெதிராக ஒட்டு மொத்த சமுதாயமும் களத்தில் இறங்கியுள்ளதோ, அந்த காரியத்தையே அவனுக்கு சாதகமான விளம்பரமாக மாற்றிக் கொள்ள ஒட்டு மொத்த ஊடக ஷைத்தான்களும் துடி துடிக்கிறார்கள் எனும் போது நாம் மீண்டும் போராட்டம் என்று தலை குடுப்பதில் இந்த சூழ்நிலையில், எந்த அர்த்தமுமில்லை. 
முஸ்லிம்களை கிளற வேண்டும், ஹிந்துக்களின் ஆதரவலையை அதன் மூலம் பெற வேண்டும் என்று சிந்திப்பவர்களுக்கு இது சாதகமாய் தான் முடியும்.

அதை செய்வதை விட, ஓட்டு என்கிற ஆயுதத்தின் மூலம் அவனை அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வ செய்வது தான் இப்போது அவனது இறுமாப்புக்கும் அகந்தைக்கும் கிடைக்கும் சம்மட்டி அடியாக இருக்கும் ! அந்த முடிவை நோக்கி மக்களை அழைப்பது தான் தற்போதைய கால சூழலில் அறிவுப்பூர்வமானது.  அதை நோக்கி அழைப்பு விடுக்கிறது தவ்ஹீத் ஜமாஅத் !

 அதே சமயம், பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டிப்பது என்பது மேற்கூறப்பட்டது போன்றதல்ல. அது ஒரு தனி மனித எதிர்ப்பல்ல. ஒரு தனி மனிதனின் குற்றசெயலும் அல்ல.
அது ஒட்டு மொத்த அரசாங்கம் செய்த துரோக செயல். எதிர்கட்சியாக இருந்த  ஒட்டு மொத்த சங்பரிவார கும்பலும் இணைந்து செய்த அந்த  வஞ்சகத்திற்கு ஆளும் கட்சியான காங்கிரசும் உடைந்தையாக இருந்தது என்றால் ஒட்டு மொத்த அரசியல் சக்திகளும் இஸ்லாமியர்களுக்கு எதிராக களமிறங்கிய சம்பவம் அது.

 அதற்கெதிரான நம் போராட்டம் என்பது அத்தகைய குற்றங்களை செய்தவர்களை கைது செய்வது என்கிற கோரிக்கையை கொண்டு மட்டுமல்ல, மாறாக எந்த துரோகிகள் நமது உரிமையை அன்று பறித்தார்களோ அவர்களே அந்த உரிமையை மீண்டும் நமக்கே தர வேண்டும்  என்பதற்கான கோரிக்கை. முஸ்லிம்கள் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள், அவர்களின் உரிமைகளை இனியும் யாரும் பிடுங்க எண்ணக்கூடாது என்பதை உணர்த்தவே இந்த போராட்டம்.  இது யாருக்கும் சாதகமாய் அமையாது, யாருக்கும் நாம் இலவச விளம்பரம் தேடி தந்ததாகவும் ஆகாது. மோடி புகழ் பாடுவது போல ஊடகம் ஒட்டுமொத்தமாக பாபர் மஸ்ஜித் இடிப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரவில்லை. 

ஆக, என்றைக்கானாலும் இழந்த உரிமையை மீட்பதற்காக நாம் போராடுவதை தொடர்ந்து செய்து வருவது நமக்கு பாதகமாய் அமையாது ! இதுவும், இந்த தேர்தல் நேரத்தில் மோடியின் வருகையை எதிர்ப்பதும் சமமல்ல !

இந்த வேறுபாட்டை துல்லியமாக புரிந்து கொண்டதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மை விளங்குகிறது  !  

1 கருத்து: