வியாழன், 25 அக்டோபர், 2012

ஜம்மு கசர் - எதிர் வாதங்களும் பதில்களும்




பயணம் என்றால் என்ன?



பயணம் என்று பேச்சு வழக்கிலும் நடைமுறையிலும் நாம் சொல்வது என்பது ஒரு புள்ளியிலிருந்து துவங்கி மீண்டும் அதே புள்ளியை அடைவதாகும்.

உதாரணத்திற்கு A என்கிற இடத்தில நான் இருக்கிறேன் என்றால், அங்கிருந்து புறப்பட்டு B சென்று விட்டால் எனது பயணம் முடிவடைந்து விடாது. மீண்டும் B யில் இருந்து A வந்து சேருகிற வரை அது பயணம் தான். 
அதாவது, A  யில் துவங்கி மீண்டும் A விற்கே வந்தடையும் முழு சுற்று தான் பயணம் என்பது. நடைமுறையிலும் இதை நாம் ஒப்புக்கொள்ள தான் செய்கிறோம் நமது வீட்டில் இருந்து வெளியூர் பயணம் செல்கிறோம் என்றால் அந்த வெளியூரை சென்றடைந்ததும் நமது பயணம் முடிந்து விட்டது என்று யாரும் சொல்ல மாட்டோம், அப்போதும் பயணத்தில் இருக்கிறேன் என்று தான் சொல்வோம்.
எப்போது வெளியூரிலிருந்து மீண்டும் வீடு வந்து சேர்கிறோமோ அப்போது தான் அந்த பயணம் நிறைவு பெறுகிறது.
இந்த அடிப்படையை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.



பயணியாக இருப்பவர் கட்டாயம் ஜம்மு கஸர் செய்ய வேண்டுமா?




அடிப்படையாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், சுருக்கி தொழுவது என்பது மார்க்கம் கட்டாயப்படுத்திய காரியமல்ல. அதை சலுகையாக தான் இஸ்லாம் சொல்கிறது. சலுகைகளை பயன்படுத்துவது போல பயன்படுத்தாமலும் இருக்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் மூன்று பர்சக்  அளவு பயணம் செய்தால் தொழுகைகளை சுருக்கி தொழுவார்கள். முஸ்லிம் 1116

இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள பற்சக் என்பது மூன்று மைல்களை குறிக்கும். மூன்று பர்சக்  என்பது ஒன்பது மைல்கள் அல்லது சுமார் 25கிமீ.
அந்த அடிப்படையில், 25 கிமீ அளவிற்கு பயணம் செய்யக்கூடிய ஒருவர் சுருக்கி தொழலாம் என்றாலும் அது கட்டாயமல்ல என்பதற்கு பின்வரும் ஹதீஸ்  உள்ளது.


நான் மதினாவிலிருந்து மக்கா நோக்கி நபி (ஸல்) அவர்களுடன் உம்ரா புறப்பட்டேன். மக்காவை அடைந்ததும், அல்லாஹ்வின் தூதரே எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் காசர் செய்கிறீர்கள், நான் முழுமையாக தொழுகிறேன் நீங்கள் நோன்பு நோர்க்கவில்லை நான் நோன்பு நோர்க்கிறேன்  என்று கேட்ட பொது ஆயிஷாவே சரியாக செய்தாய் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்னை குறை காணவில்லை .நசாயி 1439


இந்த ஹதீஸின் அடிப்படையில் பயணத்தில் இருந் ஆயிஷா (ரலி அவர்கள் நோன்பு நோற்றும் , தொழுகைகளை முழுமையாக தொழுதும் வந்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். ஆக, பயணியாக இருப்பவர் ஜம்மு கஸர் செய்யலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம். 



எவ்வளவு தூரம் பயணம் செய்தால் இந்த சலுகையை பெறலாம்?


நபி (ஸல்) அவர்கள் மூன்று பர்சக்  அளவு பயணம் செய்தால் தொழுகைகளை சுருக்கி தொழுவார்கள். முஸ்லிம் 1116

என்கிற ஹதீஸின் அடிப்படையில், நமது சொந்த ஊரை விட்டு 25கிமீ தூரம் நாம் பயணம் செய்தால் இந்த சலுகையை பெறலாம்.

எனினும், இதிலும் கூட விதிவிலக்குகள் உள்ளன.

லுகர் தொழுகையை தனியாக நான்கு ரக்காதுகள் தொழுது விட்டு அதன் பிறகு பயணம் புறப்பட்டால் அசரை மட்டும் தனியாக கசர் செய்வதற்கும் நபியிடத்தில் ஆதாரம் உள்ளது - பார்க்க புஹாரி 1089

அதாவது, சுருக்கி தொழுவதாக இருந்தால் (கசர்) கட்டாயம் இரண்டு தொழுகைகளை சேர்க்கவும் வேண்டும் (ஜம்மு) என்பது கிடையாது. தனியாக ஒரே ஒரு தொழுகையை கூட சுருக்கி தொழலாம்.


அது போல, இரண்டு தொழுகைகளை   சேர்த்து தொழவும் போதுமான ஆதாரம் உள்ளன. அசர் தொழுகையை லுகர் நேரத்திலும், லுகர் தொழுகையை அசர் நேரத்திலும், அது போல மக்ரிபை இஷாவிலும் இஷாவை மக்ரிப் நேரத்திலும் தொழுவதற்கு  நபி (ஸல்) அவர்களிடத்தில் வழிகாட்டுதல் உள்ளன.
பார்க்க புஹாரி 1111, 1091 முஸ்லிம் 2268, 1142


இன்னும் சொல்லப்போனால் பயணம் செய்யாமல் ஊரிலேயே இருக்கின்ற தருணத்தில் கூட மிக அவசியமான கட்டங்களில் ஜம்மு செய்வதற்கு ஆதாரம் உள்ளன.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் லுஹரையும் அசரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள், மக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்.அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை  ஏன் இப்படி செய்தார்கள் என்று நான் இப்னு அப்பாசிடம் கேட்டேன் அதற்கு அவர்கள், இந்த சமுதாயத்திற்கு சிரமம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான், என்று பதிலளித்தார்கள். 
முஸ்லிம் 1272

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில், பயணம் மேற்க்கொள்ளாமல்  உள்ளூரிலேயே இருக்கின்ற ஒருவர், தமக்கு சிரமம் ஏற்படும் நிலையை தவிர்ப்பதற்காக ஜம்மு செய்து கொள்ளலாம் !



எவ்வளவு நாட்கள் பயணம் செய்தால் இந்த சலுகையை பெறலாம்?



ஜம்மு கஸர் சட்டத்தை பொறுத்தவரை அதற்கான தூரம் சொல்லப்பட்டு விட்டதை போல அதற்கான கால அளவை மார்க்கம் நிர்ணயிக்கவில்லை . குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் தான் இந்த சட்டம் என்று எந்த ஹதீசையும் நம்மால் பார்க்க முடியவில்லை. எத்தனை  நாட்களுக்கு இந்த சலுகைகளை பெற்றுக்கொள்வது என்பதை அவரவர் தீர்மானிக்கலாம். 
ஹதீஸ்களை தேடிப்பார்தவரை, பயணிக்கான அளவுகோல்களை அறிய முடிகிறது, பயணிக்கான தூரம் என்ன என்பதை அறிய முடிகிறது, ஆனால் அதற்க்கான கால கட்டத்தை அறிய முடியவில்லை என்பது தான் உண்மை.
இதை மறுப்பதற்கு எதிர் கருத்துடையவர்கள் சில ஆதாரங்களையும் வாதங்களையும் வைக்கின்றனர் அவை ஏற்புடையது  தானா என்பதை பார்ப்போம்.

எப்போதெல்லாம் பயணத்தில் இருக்கிறோமோ அப்போது தான் ஜம்மு கஸர் செய்ய வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர் 

இது தவறான வாதம் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்களே விளக்கி விடுகின்றன என்றாலும், பயணம் முடிந்து ஊர் திரும்பாமல் இருப்பது வரையும் கூட ஜம்மு கஸர் செய்யலாம்.

இதை பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம் 

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் 19 நாட்கள் தங்கினார்கள் அந்நாட்களில் கஸர் செய்தார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி). நூல் புஹாரி 1080

மேற்கண்ட ஹதீஸில் கவனிக்க வேண்டிய வாசகம் "தங்கினார்கள்" என்பதாகும். அதாவது, பயணத்தில் இருக்கின்ற அந்த நேரத்தில் மட்டும் தான் ஜம்மு கஸர் சலுகை உண்டு என்று புரிய கூடாது மாறாக, பயணம் முடிந்து வேறொரு ஊரை சென்று அடைந்தாலும் , மீண்டும் சொந்த ஊர் திரும்புகிற வரை கஸர் செய்யலாம். !!
முன்னுரையில் பயணம் என்றால் என்ன என்பதை விளக்கியது இந்த ஹதீசுடன் பொருந்திப்போவதை காணலாம் !

ஆக, பயணம் என்பது பேருந்திலோ ரயிலிலோ விமானத்திலோ பயணம் செய்கிற அந்த நேரத்தை மட்டும் தான் குறிக்கும் என்கிற வாதம் தவறு, அதோடு, அந்த நேரத்தில் தான் ஜம்மு கஸர் செய்யலாம் என்கிற கருத்தும் தவறு !. ஊரிலிருந்து பயணமாகி வேறொரு ஊரை அடைந்து அந்த ஊரில் தங்கி இருந்த போது நபி (ஸல்) அவர்கள் ஜம்மு கஸர் தான் செய்தார்கள் என்பதே இதற்கு போதுமான சான்று !


குறுகிய கால கட்டத்தில் பயணம் மேற்கொண்டால் ஜம்மு கஸர் செய்யலாம், அதிக நாட்கள் தங்கியிருந்தால் ஜம்மு கஸர் செய்ய கூடாது என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

இதுவும் ஆதாரமற்ற வாதமாகும் ! இவர்கள் சொல்கிற ""குறுகிய காலம்", "அதிகமான காலம்" என்பதற்கெல்லாம் என்ன அளவுகோல்?? இவர்களது மனோ இச்சை தான் அளவுகோல் !! ஒருவரது அளவுகோலின் படி இரண்டு நாள் தான் குறுகிய களம் என்பார் இன்னொருவர் ஒரு மாதத்தை குறுகிய காலகட்டம் என்பார்.  ஆக, சுய இச்சைகளை சட்டமாக்க முயலாமல் மார்க்கம் எதை அளவுகோலாக எடுத்துக்கொள்ள சொல்கிறதோ அதை எடுத்துக்கொள்வது தான் ஈமானிற்கு பாதுகாப்பானது. 

பயணம் என்பது எவ்வளவு தூரத்திற்கு என்பதை நிர்ணயித்த மார்க்கம், ஜம்மு கஸர் தொழுகைகளை எப்படி தொழ வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து தந்த மார்க்கம், பயணம் என்றால் எது முதல் எது வரை என்பதையும் விளக்கி விட்ட மார்க்கம், எத்தனை நாட்களுக்கு இப்படி செய்யலாம் என்கிற நிர்ணயம் எதையும் செய்யவில்லை என்றால் இதனுடைய பொருள், எத்தனை நாட்கள் ஆனால் பயணம் நிறைவேறுமோ அத்தனை நாட்கள் என்பது தான் !!!
இதை சிந்தித்து புரிய வேண்டிய நிலையில் நாம் தான் இருக்கிறோம். பயணியாக அதிக நாட்கள் நாம் இருப்போமேயானால், நமக்கு சிரமமில்லை என்றால் முழுமையாகவும் தொழலாம், சுருக்கியும் தொழலாம். இரண்டிற்கும் அனுமதி உள்ளது என்பது தான் அணைத்து ஹதீஸ்களையும் உள்ளடக்கி புரிய வேண்டிய சட்டமாக உள்ளது.

உள்ளூர்களில் ஓரிரு நாட்கள் சென்று விட்டு திரும்புவதை பயணம் எனலாம், வெளிநாட்டில் வருடக்கணக்கில் இருப்பதை எப்படி பயணம் என்று சொல்வது? என்கிற கேள்வியை அடுத்து கேட்க்கின்றனர்.
வெளிநாடுகளில் தான்  வீட்டில் உள்ளதை போன்றே சொகுசாக எந்த சிரமமும் இன்றி தானே இருக்கிறோம், அவர்கள் எப்படி ஜம்மு கஸர் செய்யலாம்? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுவும் மனோ இச்சையை அடிப்படையாக கொண்ட கேள்வி தான். ஏற்கனவே நாம் விளக்கி விட்டதை போல, நாட்களின் எண்ணிக்கை பயணத்தை முடிவு செய்யாது, அந்த சுற்று முடிவடைந்து விட்டதா இல்லையா என்பது தான் அதை தீர்மானிக்கும் என்கிற வகையில், நமது ஊரையும் வீடு வாசல் குடும்பத்தையும் விட்டு வெளியூரோ வெளிநாடோ சென்று விட்ட ஒருவர், வேலையை எவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டு ஊருக்கு திரும்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டும் என்கிற நிய்யத்துடன் செல்பவர் என்றால் அந்த நிய்யத் நிறைவேறுகிற வரை அவர் பயணி தான் !! 
இந்த அளவுகோலின் படி நாகர்கோவிலில் இருந்து நெல்லை சென்று அந்த இரவே திரும்புவராக இருந்தால் அவரும் பயணி தான், அதே நாகர்கோவிலில் இருந்து அபுதாபி சென்று ஒரு வருடம் கழித்து திரும்புபவராக இருந்தால் அவரும் பயணி தான் !

இதை ஏற்றுக்கொள்ள நம் மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் கூட, மார்க்க அடிப்படையில் இதை தடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை!
இறுதியாக மார்க்க ஆதாரம் தான் முக்கியமே தவிர, நம் மனம் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல !

வெளிநாடுகளில் சொகுசாக தானே இருக்கிறோம், நாம் எப்படி கசர் செய்யலாம் என்று கேட்கின்றனர்.


பூமியில் நீங்கள் பயணம் மேற்கொள்ளும் போது மறுப்போர் உங்களை தாக்கக்கூடும் என்று அஞ்சினால் தொழுகையை சுருக்கிகொள்வது உங்கள் மீது குற்றமில்லை (4:101) என்று தானே அல்லாஹ் சொல்கிறான், இப்போது அந்த நிலை இல்லையே என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். 

அதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்களுக்கு ஏற்ப்பட்ட வியப்பு எனக்கும் ஏற்ப்பட்டது, எனவே இது பற்றி நபி (ஸல் அவர்களிடம் கேட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், இது அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ள கொடையாகும்,அந்த கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பதிலளித்தார்கள் 
முஸ்லிம் 1222 

வசதிக்குறைவோ, அச்ச நிலையோ தொழுகையை சுருக்குவதற்கான காரணம் அல்ல !!! எந்த காரணமும் இல்லாமல் இருந்தாலும் பயணிகள் தொழுகையை சுருக்கலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சான்றாக உள்ளது !


இது தான் இவர்களது வாதம் என்றால், ஜம்மு கசர் சட்டம் என்பது இந்த காலத்திற்கு பொருந்தவே செய்யாது என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டும். காரணம் சொகுசு என்கிற நிலையில் சிந்திப்போமேயானால் அந்த கால ஒட்டக பயணத்தை ஒப்பிட்டு பார்க்கிற போது இன்று சென்னையிலிருந்து விழுப்புரம் செல்வதும் சொகுசு தான், பேருந்து பயணமும் சொகுசு தான், ரயிலும் சொகுசு தான், விமானமும் சொகுசு தான். அப்படியானால் பயணிக்கான இந்த சலுகை அந்த காலத்திற்கு மட்டும் உரியது இந்த காலத்திற்கு இது பொருந்தாது என்கிற வாதத்தை தான் இவர்கள் வைக்க வேண்டும். ! ஜம்மு கசர் தொழுகை என்பதே இந்த காலத்திற்கு தேவையில்லை என்கிற முடிவை தான் இவர்கள் அறிவிக்க வேண்டும். அதை செய்வார்களா என்றால் மாட்டார்கள். இவர்கள் விரும்பினால் அதை சொகுசு என்பார்களாம், இவர்கள் விரும்பினால் சிரமம் என்பார்களாம்., சொகுசையும் சிரமத்தையும் அவரவர் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர மூன்றாம் நபர் தீர்மானிக்க முடியாது என்பதை இவர்கள் புரிய மறுப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகிறது !

இன்னும் சொல்லப்போனால் பயணம் என்பது ஒரு வேதனை எனவும், பயணத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படும் எனவும் ஹதீஸ்கள் இருக்கின்றன என்றால் இவர்களது வாதத்தின் படி இவற்றையும் அந்த காலத்திற்கு மட்டும் உரியது, இப்போது பொருந்தாது என்று கூறி புறக்கணித்து விடலாம். 
காரணம், அந்த காலத்தில் தான் பயணம் என்பது மிகபெரிய வேதனை. நபி (ஸல்) அவர்களோ சஹாபாக்களோ வீட்டிலிருந்து பயணம் மேற்கொண்டார்கள் என்றால் அதுவே மிகப்பெரிய பிரயத்தனம். உணவு தட்டுப்பாடு, குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத தருணங்கள் எதிரிகளின் அச்சுறுத்தல், தொலை தொடர்பு வசதிகள் இல்லா நிலை என, பயணம் என்பது அந்த காலத்தில் உயிருக்கு உத்திரவாதமற்ற நிலை !! அந்த நிலையில் தான் மேற்கண்ட ஹதீஸ்கள் இறங்குகின்றன. அந்த நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இன்று நாம் சாதாரண சைக்கிள் அல்லது மாட்டு வண்டியில் பயணம் செய்தால் கூட இது ஒரு சொகுசு பயணம் தான் !!! 
அந்த வகையில், பயணம் என்பது ஒரு வேதனை, பயணிகள் துஆ கேட்டால் அல்லாஹ் செவி சாய்ப்பான் என்கிற ஹதீஸ்கள் எல்லாம் இப்போது பொருந்தாது என்று இவர்கள் அறிவிப்பார்களா?

சரி, அப்படியானால் இந்த ஹதீஸ்கள் இந்த காலத்திற்கும் எப்படி பொருந்துகிறது?? அது தான் இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் என்பதற்கு ஆதாரமாய் உள்ளது.
வேதனை என்பது கால கட்டத்திற்கு மாறுகிற ஒரு விஷயம். சஹாபாக்கள் காலத்தில் வேதனை என்று எதை அறிந்திருந்தார்களோ அது அடுத்த தலைமுறைக்கு இருக்காது அதற்கு பகரம் வேறொரு விஷயம் வேதனை என்கிற பொருளில் பார்க்கப்படும் இது யதார்த்தம் ! எல்லா அர்த்தங்களையும் உள்ளடக்கிய ஒரு வாசகம் தான் பயணம் ஒரு வேதனை என்பது. இந்த காலத்தில் கூட, வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் குடும்பத்தை விட்டு, சொந்த ஊரையும் அங்குள்ள சந்தோஷங்களையும் விட்டு அல்லல் படுகின்றனர். 
இன்னும் சொல்லபோனால் ஒரு கோடீஸ்வரன் கூட, விமானம் ஆறு மணி நேரம் தாமதம் என்று அறிவிக்கப்பட்டு விட்டால் விமான நிலையத்தின் இருக்கைகளில் படுத்துக்கொண்டு தான் தூங்க வேண்டும். அது அவரை பொறுத்தவரை வேதனை தான். அந்த நேரத்தில் அவனது உடமைகளையும் பாஸ்ப்போர்ட் போன்ற ஆவணங்களையும் அவன் தான் பாதுகாக்க வேண்டும். அதுவும் ஒரு வேதனை தான்.
இது போன்ற வேதனை பயணம் அல்லாத நேரங்களில் அவனுக்கு இருக்காது. ஆகவே பயணமும் அதிலுள்ள வேதனையும் காலத்திற்கும் வேறுபாடும் என்றாலும் வேதனை என்பது இல்லாமல் போய் விடாது !



பயணம் என்றால் A வில் துவங்கி B யில் கட்டாயம் நிறைவேற வேண்டும் என்கிற சட்டம் இல்லையே.. A வில் துவங்கி B க்கு மட்டும் சென்று மீண்டும் A விற்கு திரும்பவில்லை என்றால் அது பயணம் ஆகாதா? என்றும் சிலர் வாதம் வைக்கிறார்கள் .


பயணம் என்றால் எங்கிருந்து துவங்குகிறோமோ அங்கேயே நிறைவேற வேண்டும் என்பது பொதுவான விதி. பொதுவான விதியை பற்றி பேசுகிற சமயத்தில் அதற்கு விதிவிலக்குகளை சுட்டிக்காட்ட கூடாது என்பது சாதாரண சிந்தனையுள்ளவர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஓன்று.

எனது சொந்த ஊராக நான் சென்னையை கருதி எனது குடும்பத்தையும் எனது வாழ்வாதாரத்தையும் அங்கேயே நிலை பெற செய்துள்ளேன் என்றால், வேறு ஏதேனும் தேவைக்காக நான் மதுரை வரை சென்றால், மீண்டும் மதுரையில் இருந்து சென்னை திரும்புவது வரை பயணம் தானே? ஏனெனில், எனது நோக்கவும் சிந்தனையும், சென்னை தான் எனது ஊர் என்று தான் சொல்லிக்கொண்டிருக்கும் !
ஏனெனில் எனது குடும்பமும் எனது வாழ்வாதாரமும் சென்னையை மையப்படுத்தி தான் உள்ளது. இதில் எப்போது விதிவிலக்கு வரும்? எனது பிறந்த ஊர் சென்னையாக இருந்தாலும் எனது குடும்பம் சென்னையில் வசித்தாலும், அந்த ஊர் இனி எனக்கு தேவையில்லை, என்று கூறி எனது பூர்வீகத்தையே மதுரைக்கு மாற்றி கொள்கிறேன் என்று சொன்னால் அப்போது அது ஒரு வழி பயணம் தான் !!

சில சகோதரர்களே சொன்னது போல, கன்னியா குமரி பூர்விகமாக இருந்தால் கூட, மும்பைக்கு எனது குடும்பம் சகிதமும், எல்லா தேவைகள் நிமித்தமும் மாற்றம் பெற்று விடுவேன் என்றால் மும்பை தான் எனது சொந்த ஊர். அதை நான், எனது மனது தான் தீர்மானிக்க வேண்டும். 

வேலையில் ஒரு வார விடுப்பு கிடைத்தால் கூட நான் பிறந்த ஊருக்கு செல்ல மாட்டேன் காரணம், பிறந்ததை தவிர வேறெந்த பந்தத்தையும் இப்போது அந்த ஊருடன் நான் வைத்துக்கொள்ளவில்லை. எனது அணைத்து தேவைகளையும் மும்பையிக்கே மாற்றிக்கொண்டேன்,  மன ரீதியாகவும் செயல்பாடுகள் ரீதியாகவும் !!!




சுருக்கமாக, 

  • ஒரு நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு நாம் வசிக்கும் ஊரை விட்டு வேறொரு ஊருக்கு சென்றால் அந்த நோக்கம் நிறைவேறி நாம் ஊர் திரும்புகிற வரை நாம் உலக வழக்கிலும் பயணி தான். இஸ்லாத்தின் பார்வையிலும்  நாம் பயணி தான். 
  • பயணம் என்பது ஒரு இடத்தில துவங்கி அதே இடத்தில முடிப்பதாகும்.
  • இதற்கு ஆதாரமாக 19 நாட்கள் வெளியூரில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் 19 நாட்களுமே பயணிக்குரிய சட்டத்தை பெற்றுக்கொண்டார்கள்.
  • அந்த 19 நாட்களும் அவர்கள் பயணம் செய்துக்கொண்டிருக்கவில்லை ஆனால் ""பயணத்தில்"" இருந்தார்கள் !!!
  • ஆக, பயணம் செய்து முடித்தாலும் மீண்டும் ஊர் திரும்புகிற வரை பயணி தான் !
  • அந்த நாட்களில் நபி (ஸல்) அவர்களுக்கு சிரமமாக இருந்திருக்கும் ஆகவே தான் அப்படி தொழுதிருப்பார்கள் என்று இவர்கள் வாதம் வைத்தால் அந்த வாதமும் ஆதாரமற்ற வாதமாக தான் இருக்கும் காரணம் சிரமமாக இருந்தது என்று ஹதீஸில் இல்லை. 
  • ஒரு வாதத்திற்கு இவர்கள் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டால் கூட, இத்தகைய சலுகை என்பது இந்த காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது என்று தான் இவர்கள் கூற வேண்டும், காரணம், இன்றைக்கு எதுவுமே சிரமமில்லை !

அல்லாஹ் அறிந்தவன் !





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக