வியாழன், 9 ஆகஸ்ட், 2012

நாளின் துவக்கம் பகல் என்பதற்கு ஆதாரம் உள்ளதா ??



கேள்வி :


புஹாரி 2027. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன.  



இது போன்ற இத்திகாப் குறித்த செய்திகள் அனைத்தையும் பார்க்கும் போது நாள் பஜ்ர் இல் ஆரம்பாகிறது என்பதை தான் புறிந்து கொள்ள முடிகிறது. இதே ஹதீஸில் கூட ஒரு ஆண்டில் இருபத்தி ஒன்றாம் இரவின் காலையில் ? தான் வெளியேறுவார்கள் என்றும் வருகிறது. 
நாள் மக்ரிபில் ஆரம்பம் ஆகிறது என்று சொன்னால், இருபத்தி ஒன்றாம் இரவை முடித்து விட்டு தான் வெளியாருகிறார் என்று ஆகும். ஆக 30 நாட்கள் கொண்ட ராமதானில் கூட மீதம் உள்ள நாட்கள் 9 நாள். ஆனால் இருபத்தி ஒன்றாம் இரவை கழித்து விட்டு வெளியேறி பின்னர் மக்களை அழைத்து என்னோடு கடைசி பத்து நாட்களும் இத்திகாப் இருங்கள் என்று சொல்வதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாள்  பஜ்ர் இல் ஆரம்பிக்கும் போது தான் இந்த 10 நாட்கள் என்பது சரியாக இருக்கும்.



பதில் :

நாளின் துவக்கம் குறித்த உங்கள் கருத்து மிகவும் தவறானவை. எந்த ஹதீஸை நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு ஆதாரமாக காட்டுகிறோமோ அதையே பஜர் தான் துவக்கம் என்பதற்கு நீங்கள் ஆதாரமாக காட்டுவது வேடிக்கை !!

நீங்கள் அந்த ஹதீஸை வைத்து மிகவும் குழம்பிப்போய் இருக்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது.

அந்த ஹதீஸ் மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பதற்கு எப்படி மிக தெளிவான ஆதாரமாக உள்ளது என்பதை விளக்குவதற்கு முன், உங்கள் நிலைபாட்டில் உள்ள குழப்பத்தை பார்த்து விடுவோம்.

இதே ஹதீஸில் கூட ஒரு ஆண்டில் இருபத்தி ஒன்றாம் இரவின் காலையில் ? தான் வெளியேறுவார்கள் என்றும் வருகிறது. 
நாள் மக்ரிபில் ஆரம்பம் ஆகிறது என்று சொன்னால், இருபத்தி ஒன்றாம் இரவை முடித்து விட்டு தான் வெளியாருகிறார் என்று ஆகும்


நாளின் துவக்கம் மக்ரிப் என்றால் இரவை அடைந்து அந்த இரவின் பகல் என்று சொல்லாமல் அந்த இரவிற்கு பிறகுள்ள பகல் என்று சொல்லியிருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.

சரி, உங்கள் நிலை என்ன? நாளின் துவக்கம் பகல் என்பது.
அந்த ஹதீஸில் என்ன வருகிறது? 21 ஆம் இரவை அடைந்ததும் அந்த இரவின் பகலில் வெளியேறுவார்கள்.
அந்த இரவின் பகல் என்பது அந்த இரவுக்கு முந்தைய பகல் என்பது தான் உங்கள் கருத்து என்றால் அது சாத்தியமா??
21 ஆம் இரவை அடைந்த பிறகு, அந்த இரவின் பகலில் வெளியேறினார்கள் என்றால் இதற்கு ஒரே அர்த்தம் தான் இருக்க முடியும் - அந்த இரவை தொடர்ந்து வரக்கூடிய பகல் !
அந்த இரவை அடைந்த பிறகு அந்த இரவுக்கு முன்னுள்ள பகலில் வெளியேற முடியாது!

நாளின் துவக்கம் பகல் என்றால், அந்த இரவை தொடர்ந்து வரக்கூடிய பகல் உங்கள் கொள்கைப்படி 22 ஆம் பகல் தானே தவிர 21 ஆம் பகல் அல்ல.
ஆகவே உங்கள் கொள்கைப்படி உங்கள் வாதம் முரண்!

அடுத்து, அந்த ஹதீஸை பொறுமையாகவும் முழுமையாகவும் படித்தால் அது நாளின் துவக்கம் மக்ரிப் என்பதை தெளிவாக சொல்கிறது என்பதை புரியலாம்.

நபி (ஸல்) அவர்கள் ரமளானின் நடு பத்தில் இதிகாப் இருந்து விட்டு 21 ஆம் இரவை அடைந்ததும் இஹ்திகாபை முடிக்காமல் தொடர்ந்து வரக்கூடிய பகலில் முடித்து விட்டு வெளியேறுகிறார்கள் என்று அந்த ஹதீஸ் சொல்கிறது.

அதாவது நடு பத்து நாட்கள் என்பது இருபதாம் நாளுடன் முடியும்.
ஆகவே இருபத்தி ஒன்றாம் இரவு வந்ததும் அதை முடிக்க எண்ணுகிறார்கள், ஆனால் தொடர்ந்து வரக்கூடிய பகலில் தான் வெளியேறுகிறார்கள் என்று அந்த சஹாபி சொல்கிறார்கள்.

நீங்கள் சொல்வது போல 21 ஆம் இரவுக்கு முந்தைய பகல் என்றால் இது சாத்தியமேயில்லை. ஏனெனில், அந்த ஹதீஸில், 21 ஆம் இரவை அடைந்து விட்டார்கள் என்று வருகிறது அடைந்த பிறகு அந்த இரவிற்கு முந்தைய பகலில் வெளியேற முடியுமா? முடியாது!

21  ஆம் இரவை அடைந்த பிறகு அந்த இரவின் பகலில் வெளியேறினார்கள் என்றால் அந்த இரவு கழிந்து தூங்கி எழுந்ததும் வரக்கூடிய பகலை தான் இது குறிக்க முடியும். அந்த பகலை அந்த இரவின் பகல் என்று தான்  சொல்கிறார்கள். நாளின் துவக்கம் பகல் என்றால் தூங்கி எழுந்ததும் வரக்கூடிய பகல் அடுத்த நாள் ஆகி விடும். அந்த இரவின் பகல் என்று அதை சொல்ல முடியாது.

இது, நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு அந்த ஹதீஸ் சொல்லும் முதல் ஆதாரம்.


ஆனால் இருபத்தி ஒன்றாம் இரவை கழித்து விட்டு வெளியேறி பின்னர் மக்களை அழைத்து என்னோடு கடைசி பத்து நாட்களும் இத்திகாப் இருங்கள் என்று சொல்வதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாள்  பஜ்ர் இல் ஆரம்பிக்கும் போது தான் இந்த 10 நாட்கள் என்பது சரியாக இருக்கும்.

இல்லை !!! இருபத்தி ஒன்றாம் இரவை கழித்து விட்டு வெளியேறிய பின்னர் அவ்வாறு நபி அவர்கள் அழைக்கவில்லை.
இங்கு தான் உங்கள் மொத்த கருத்துக்கும் இன்னொரு மறுப்பு உள்ளது.

இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! 

இருபத்தி ஒன்றாம் இரவை அடைந்த பிறகு தான் அடுத்த பத்து நாட்களுக்கு நபி அவர்கள் அழைப்பு விடுக்கிறார்களே தவிர மறுநாள் காலை வெளியேறியதும் அவ்வாறு அழைக்கவில்லை.
மறுநாள் காலை வெளியேறிய பிறகு இவ்வாறு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுத்திருந்தால் நீங்கள் சொல்வது போல 10 நாள் என்கிற கணக்கு சரியாக வராது தான். ஆனால், அந்த ஹதீஸில், 21 ஆம் இரவை அடைந்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுக்கிறார்கள் என்று தான் உள்ளது. வெளியேறுவது தான் அடுத்த பகலிலேயே தவிர, அழைப்பு விடுப்பது என்பது அந்த இரவில் தான்.
அதாவது, 21 ஆம் இரவை அடைந்தால் அதன் பொருள், 20  நாட்கள் முடிந்து விட்டன. 20 நாட்களை முடித்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுக்கிறார்கள்.

இதன் மூலம் நாளின் முடிவு மக்ரிப் தான் என்பதும் புலனாகிறது. அதோடு, நீங்கள் சொல்லும் கருத்துக்கு மறுப்பும் உள்ளது.

மேலும், 21 ஆம் இரவை அடைந்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை நபி (ஸல்) அவர்கள் விடுக்கிறார்கள். அதை தொடர்ந்து அந்த இரவு மழை பெய்கிறது !!! 
எந்த இரவு? 21 ஆம் இரவு !
21  ஆம் இரவு மழை பெய்ததை தொடர்ந்து வரும் பஜர் தொழுகையில் நபியின் நெற்றியில் களி மண் படுகிறது என்று அந்த சஹாபி சொல்கிறார்.

ஒரு இரவை கடந்த பிறகு வரக்கூடிய பஜர் என்பது உங்கள் கொள்கையின்படி மறுநாள்.
ஆனால், இந்த ஹதீஸில், இரவை 21 ஆம் இரவு என்றும் தொடர்ந்து வரக்கூடிய பகலையும் 21 ஆம் பகல் என்று தான் சொல்கிறார்கள், 22 ஆம் பகல் என்று சொல்லவில்லை  .
இந்த அடிப்படையிலும் நாளின் துவக்கம் மக்ரிப் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து.

வஸ்ஸலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக