வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (F)


முன் சென்ற நபிமார்கள் இறந்து விட்டார்கள்

"ஈஸா நபி இறக்கவில்லை" (பாகம் 6)
-----------------------------------------------------------------

ஈஸா நபி இறந்து விட்டார் என்பதை நிரூபிக்கப் போகிறோம் என்று புறப்பட்டு, யாரும் இந்த உலகில் நிரந்தரமாக வாழ முடியாது என்று அல்லாஹ் சொல்கிற வசனத்தையும் அது போல், பூமியில் தான் வாழ முடியும் என்கிற வசனத்தையும் எடுத்துக் காட்டினார்கள் காதியானி மதத்தவர்கள்.

ஆனால், இந்த இரு வசனங்களுக்கும் ஈஸா நபியின் மரணத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்பது முந்தைய பாகங்களில் தெளிவாக்கப்பட்டன.

தங்கள் கொள்கைக்கு சான்றாய் இவர்கள் மேலும் இரண்டு சான்றுகளை எடுத்துக் காட்டுகின்றனர்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். (3:144)

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை.! அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! (5:75)

இவை இரண்டு தான் அந்த ஆதாரங்கள்.

இந்த வசனங்கள் ஈஸா நபி மரணித்து விட்டதை சொல்கிறதா? என்பதை பார்ப்போம்.

முதலில், முஹம்மது நபிக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள் என்கிற இறை வசனத்தின் மூலம், முஹம்மது நபிக்கு முன் வந்த ஈஸா நபியும் இறந்து விட்டார் என்பது இவர்கள் முன் வைக்கும் வாதம்.

பல காரணங்களால் இது தவறான புரிதலாகும்.

அவருக்கு முன் தூதர்கள் சென்றிருக்கிறார்கள் என்று தான் அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறானே அல்லாமல், அவருக்கு முன் வந்த அத்தனை பேரும் சென்று விட்டார்கள் என்று சொல்லவில்லை.

இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டதை போல் இவரும் செல்லக்கூடியவர், இவர் தூதர் என்பதற்காக இவரை கடவுள் என்று கருதக் கூடாது. எப்படி முன்பு வந்த தூதர்கள் இறந்தார்களோ அது போல இவரும் இறக்கக்கூடியவர். அவ்வளவு தான்.
முன் வந்த எல்லா தூதர்களில் ஒருவர் இறக்காமல் உயிருடன் இருக்கும் போதும் கூட இதே வாசகத்தை பயன்படுத்தலாம்.

வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவனைப் பார்த்து நீ வகுப்பில் ஃபர்ஸ்ட் ரேன்க் வர வேண்டும், உனக்கு முன் வந்தவர்கள் ஃபர்ஸ்ட் ரேன்க் வாங்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் இதன் மூலம் அந்த வகுப்பில் படிக்கும் அனைவருமே ஃபர்ஸ்ட் ரேன்க் வாங்கியவர்கள் என்கிற கருத்து வராது.

ஃபர்ஸ்ட் ரேன்க் வாங்கியவர்களும் இருப்பார்கள், வாங்காதவர்களும் இருப்பார்கள். ஆனால், அதை கூட இவ்வாறு பொதுப்படையாக சொல்லலாம்.

அடுத்து, ஒரு வாதத்திற்கு, உனக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்கு, உனக்கு முன் வந்த அனைவரும்... என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும் என்று வைத்துக் கொண்டாலும், அப்போதும், அந்த "அனைவரும்" என்பதில் ஈஸா நபி அடங்க மாட்டார் !

காரணம், எப்படி முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்று அல்லாஹ் 3:144 வசனத்தில் சொல்கிறானோ, அது போல், அதே கருத்தை சொல்கிற வேறொரு வசனத்தில் ஈஸா நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்றும் சொல்கிறான்.

இரண்டு வசனத்தையும் இணைத்து தான் முடிவு செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில், முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள், ஈஸா நபியை தவிர.. என்கிற முடிவை நோக்கி எளிதில் வரலாம்.

முஹம்மது நபியைப் பற்றி அல்லாஹ் கூறும் போது எப்படி முஹம்மது நபி மரணித்திருக்கவில்லையோ, ஈஸா நபியைப் பற்றி அல்லாஹ் கூறும் போது ஈஸா நபியும் மரணித்திருக்கவில்லை.

இதன் அடிப்படையிலும், முஹம்மது நபிக்கு முன் வந்தவர்களில் ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருப்பதை அறிய முடிகிறது.

இன்னும் சொல்லப்போனால், ஈஸா நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற வசனம் ஈஸா நபி இறக்கவில்லை என்பதற்கு நாம் வைக்கின்ற முதல் ஆதாரமாகும்.

என் தரப்பு ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தர துவங்கும் போது இதையும் விளக்கலாம் என்று கருதினேன்.
ஆனால், எது எங்கள் தரப்பு ஆதாரமோ, அதையே உங்களுக்கு ஆதாரமாக காட்டும் அளவிற்கு அறியாமையில் சுழலும் உங்களது நிலையினை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், இந்த இறை வசனத்தை விலாவாரியாகவே பார்த்து விடுவோம்.

இந்த வசனம் எப்படி ஈஸா நபி இறக்கவில்லை என்பதை சொல்கிறது? என்றால்..

ஈஸா நபி கடவுள் இல்லை என்பதை சொல்வதற்கு அல்லாஹ் அருளிய வசனம் இது.
கடவுள் இல்லை என்பதை எதைக் கொண்டு அல்லாஹ் நிறுவுகிறான்? என்றால், ஈஸா மரணித்து விட்டார் என்று சொல்லி நிறுவவில்லை.
மாறாக அவருக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்று சொல்லி நிறுவுகிறான்.

இறப்பது கடவுள் தன்மைக்கு எதிரானது என்பதை அல்லாஹ் பல்வேறு வசனங்களில் சொல்லியிருக்கையில், அதை மேற்கோள் காட்டி ஈஸா நபியும் இறக்கவில்லை என்று இந்த வசனத்தில் விளக்குகிறான்.

உண்மையில் ஈஸா நபி இறந்திருந்தார்கள் என்றால், மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை.! அவர் சென்று விட்டார்..

இப்படி தான் அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதை அல்லாஹ் சொல்லாமல், அவருக்கு முன் வந்த தூதர்கள் சென்று விட்டார்கள் என்கிறான்.

இவரும் மற்றவர்களைப் போல தூதர் தான், எப்படி அவர்கள் இறந்தார்களோ அவ்வாறு இவரும் இறந்து போகக்கூடியவர் என்பது இதன் பொருள்.

இதற்கு மறுப்பு சொல்லப் புகுந்த காதியானி கூட்டம்,

அவருக்கு முன் வந்த தூதர்கள் சென்று விட்டார்கள் என்றால்,
இவரும் மற்றவர்களைப் போல தூதர் தான், எப்படி அவர்கள் இறந்தார்களோ அவ்வாறு இவரும் இறந்து போகக்கூடியவர்

என்று புரியக் கூடாது..மாறாக, எப்படி அவர்கள் இறந்தார்களோ அவ்வாறு இவரும் இறந்து போனவர் என்று புரிய வேண்டும் என்று சொல்கின்றனர்.

இது அடிப்படையிலேயே தவறான வாதம்.

அவர் இறந்து போனவர் என்பது உண்மை என்றால், அவர் இறந்து போனவர் என்று மட்டுமே சொல்லியிருக்கலாம். மற்றவர்கள் எல்லாம் இறந்தவர்கள் என்று சொல்லத் தேவையில்லை.

இந்த வசனம் ஈஸா நபி மரணித்து விட்டதை சொல்லவில்லை, மாறாக அவரும் மரணிக்கும் தன்மை கொண்டவர் என்று சொல்கிற வசனம்.

அதனால் தான் அவர் தூதர் தான் என்று சொல்லி மற்ற தூதர்கள் எப்படி இறப்பார்களோ அது போல இவரிடமும் இறக்கும் தன்மை இருக்கிறது, ஆகவே இவர் கடவுள் இல்லை என்று நிறுவுகிறான் அல்லாஹ்.
இவரே இறந்து போயிருந்தால் மற்ற தூதர்கள் இறந்து விட்டதால் இவர் தூதர் இல்லை என்று சொல்ல தேவையில்லை, இவர் இறந்து விட்டதால் இவர் தூதர் இல்லை என்று நேரடியாகவே சொல்லலாம்.

மேலும், இவர் இறக்கவில்லை என்பதால் இவரது மரணத்தை அதற்கு ஆதாரமாக காட்ட முடியாது என்கிற எனது கருத்தை மேலும் உறுதியாக்குகிறது, இந்த வசனத்தின் அடுத்த தொடர்ச்சி.

அதில் இவர் உணவு உண்பவராக இருந்தனர் என்று சொல்லி, உணவு உண்பதால் இவர் கடவுளாக இருக்க முடியாது என்கிறான்.

இன்னும் சொல்வதானால், ஈஸா தூதரை தவிர வேறில்லை என்கிற வசனத்தின் மூலம் அவரும் மற்ற தூதர்களை போல் சென்று விட்டார் என்று தான் புரிய வேண்டும் என்றால்,

இதே வாசகம் தான் முஹம்மது நபி பற்றிய 3:44 வசனத்திலும் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்

இங்கே, முஹம்மது தூதர் தவிர வேறில்லை என்று, ஈஸா நபிக்கு சொன்னது போல தான் சொல்கிறான்.
அப்படியானால், முஹமம்து நபியும் மற்ற தூதர்களைப் போல இறந்து விட்டவர் என்றூ தான் அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறானா?
இந்த வசனம் இறங்கும் போது முஹமம்து நபி இறந்து விட்டிருந்தார்களா?

அல்லது, மற்ற தூதர்களைப் போல் இந்த முஹம்மதும் ஒரு நாள் இறந்து போவார் என்று வருங்காலத்தை அல்லாஹ் பேசுகிறானா?

ஒரே வாசக அமைப்பைக் கொண்ட ஒரு வசனத்திற்கு வருங்காலம் என்பீர்களாம், இன்னொரு வசனத்திற்கு கடந்த காலம் என்பீர்களாம்.

இதுவா நடு நிலை சிந்தனை? இதுவா நேரான ஆய்வு?

இன்னொரு வினோதமான வாதமொன்றும் இவர்களால் எழுப்பப்படுகிறது.
அதாவது,
ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்றாலும், அவர் இறந்தது, அந்த மக்களை அவரை கடவுளாக வணங்குவதை விட்டும் தடுக்காது, அவர்கள் பார்வையில் அவர் இறந்து, பின் உயிர்த்தெழுந்தவர், இறப்பு என்பதெல்லாம் ஒருவருக்கு கடவுள் தன்மையை நீக்கி விடாது என்று நம்பக்கூடியவர்கள், எனவே தான் ஈஸா நபியின் மரணத்தை அல்லாஹ் இங்கு சொல்லவில்லை

என்று வாதம் வைக்கின்றனர்.

இதுவும் மனமுரண்டாக, தண்ணீரில் மூழ்க கிடக்கும் ஒருவன் மேலே சாதாரண குச்சியையாவது பிடித்து தப்பிக்க முடியுமா என்று எண்ணுவது போன்று உள்ளது, இது போன்ற உப்புக்கு சப்பில்லாத வாதங்கள்.

ஈசா நபியின் இறப்பு அவர்களைப் பொறுத்தவரை பெரிய விஷயமில்லை என்பதால் தான் அவரது மரணத்தை அல்லாஹ் சொல்லவில்லை என்றால், ஈஸா நபி உணவு உண்பவராக இருந்தார் என்பதைக் கூட தான் அல்லாஹ் சொல்லியிருக்கக் கூடாது,
காரணம், ஈஸா நபி இவ்வுலகில் அவர்களோடு இருந்த காலத்தில் உணவு உண்பவராக தான் இருந்தார்.
அதை கண்ணால் கண்டு கொண்டு தான் அவரை கடவுள் என்றும் கடவுளின் குமாரர் என்றும் நம்பினர் அந்த மக்கள். எனவே உணவு உண்பதால் கடவுள் ஆக முடியாது என்கிற வாதத்தை அப்போதும் அவர்கள் ஏற்க மாட்டார்கள் தானே?
ஆக, இந்த வாதமும் அர்த்தமற்றது.

இன்னும் சொல்வதானால்,

இந்த வசனம் இறங்கும் போது ஈசா நபி இறந்திருந்தால், இறந்தவர் மீண்டும் எழுந்தாரா? என்று கேள்வி எழுப்பி அதன் மூலம் தான் அல்லாஹ் அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில், ஈசா நபி இறந்து விட்டார் என்று அவர்கள் நம்பியது போல, அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதும் தான் அவர்களது நம்பிக்கை ! பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஈசா நபி இறந்து விட்டது உண்மையெனில், அதை காரணம் காட்டி அவரது கடவுள் தன்மையை மறுக்க முடியாது என்றாலும், அவர் மீண்டும் எழுந்து வரவில்லை என்பதை காரணம் காட்டி அவரது கடவுள் தன்மையை மறுக்கலாம்!

அதற்கு இந்த வசனம் பொருத்தமான இடம் தான்!

அவர் மரணித்து விட்டார், மீண்டும் எழவுமில்லை என்று சொல்வதன் மூலம், மரணித்தவர் மீண்டும் வருவதால் அவர் கடவுள் தான் என்று ஈசா நபியை அந்த காரணத்தை வைத்து கடவுளாக நம்பியவர்களுக்கு அது மறுப்பாக தான் அமையும். அப்படி அல்லாஹ் இங்கு சொல்லவில்லை.
மாறாக, ஈசா நபிக்கு முன்பு எல்லா நபிமார்களும் இறந்து விட்டதை தான் சொல்கிறான் என்பதும் இங்கே சிந்திக்கத்தக்கது.

ஈசா நபிக்கு முன் எப்படி எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்களோ அதே போல இவரும் இறந்து போவார் ! என்பது தான் இதன் பொருளே தவிர, முன் சென்ற நம்பிமார்கள் மீண்டும் உயிர்தெழாதது போல இவரும் மீண்டும் உயிர்த்தெழவில்லை என்று சொல்கிற வசனமல்ல.
அப்படி சொல்வதற்கு பதில் நேரடியாக, ஈசா நபி இறந்து விட்டார் ஆனால் இன்று வரை உயிர்த்தெழவில்லை என்று அல்லாஹ் சொல்லியிருக்கலாம் , நேரடியாக ஒன்றை சொல்வதற்கு இடமிருக்கும் போது இங்கு அவசியமில்லாமல் முன் சென்ற நபிமார்களை அல்லாஹ் இங்கு சொல்லியிருக்க தேவையில்லை.

ஒரு வசனம் என்ன நோக்கத்திற்காக இறக்கப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் கருத்து இருக்க வேண்டும். நானோ நீங்களோ பேசும் போதே இப்படி தான் சிந்திப்போம் எனும் போது அல்லாஹ் நம்மையே படைத்தவன்.!

ஈசா நபி கடவுள் கிடையாது என்று சொல்லும் நோக்கில் இந்த வசனத்தை அல்லாஹ் இறக்குகிறான்!
அந்த மக்கள் ஈசா நபியை கடவுள் என்று நம்பிக்கொண்டிருகிறார்கள், உங்கள் கருத்துப்படி ஈசா இறந்து விட்டார், இருப்பினும், அவர் மீண்டும் உயிர் பெற்று வந்தார் என்று அவர்களே மீண்டும் நம்பி மீண்டும் அவர்களது கடவுள் நம்பிக்கையை தொடர்கிறார்கள்.

இப்போது அவர்களுக்கு மறுப்பு சொல்வதானால், ஈசா வெறும் தூதர் தான், அவர் மரணித்தார், மீண்டும் எழவில்லை என்று சொல்வதே போதுமானது!

ஆனால், உங்கள் கருத்துப்படி எங்கே, எதை பயன்படுத்த வேண்டுமோ அங்கே அதை அல்லாஹ் பயன்படுத்தவில்லை.

இந்த வசனம் இறங்கிய காலத்தில் ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் தான் இந்த வசனம் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆகிறது.

ஆனால், இந்த வசனம் இறங்கிய காலத்தில் நீங்கள் சொல்வது போல் ஈஸா நபி மரணமடைந்திருந்தால், இந்த வசனத்தில் ஏக குழப்பம், அல்லாஹ் அர்த்தமில்லாத வாதங்களை வைத்திருக்கிறான் என்று தான் பொருள் வரும், நவூதுபில்லாஹ்.

ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதை நிறுவ நீங்கள் வைக்கும் ஆறு ஆதாரங்களில் நாங்கு ஆதாரங்களின் நிலையை பார்த்திருக்கிறோம்.

இன்னும், பொய் கடவுள் இறந்து விட்டதாக அல்லாஹ் சொல்வதிலிருந்து ஈஸா நபி இறந்து விட்டதாக புரிகிறதா?

ஈஸா நபி வ‌ஃபாத் ஆகி விட்டதாக வரக்கூடிய வசனத்தின் கருத்து ஆகிய இரண்டை அடுத்தடுத்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.

தொடரும்.
 

புகையிலை விலையுய‌ர்வு


புகையிலை விலையை 3 ரூபாய் அளவிற்கு உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பது ஏதோ, அந்த அளவிற்கு வசதி வாய்ப்பு பெற்றவர்கள் மட்டும் புகைப் பிடித்தால் போதும் என்கிற சமூக அக்கறையின் வெளிப்பாடாக எடுக்கப்பட்ட்ட முடிவு என்று அவசரப்பட்டு யாராவது பேட்டி கொடுத்து மத்திய அரசுக்கு முட்டுக் கொடுத்து விட வேண்டாம்.

இவர்களுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை இருக்குமானால், அதை முழுமையாக தடை தான் செய்திருக்க வேண்டும். சமூகத்திற்கு அதனால் ஏற்படும் பாதிப்பை விட, அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் ஒன்றும் அரசுக்கு பெரிதில்லை என்று அப்போது நிரூபித்திருக்கலாம்.

அல்லது, கீழ்மட்ட, மட்டும் நடுத்தர மக்கள் இதை தொட்டுக் கூட பார்த்திராத அளவிற்கு, மேல் மட்ட மக்களுக்கு மட்டுமே உரித்தான பொருள் பட்டியலில் புகையிலையையும் சேருங்கள்.

ரோஸ் ராய்ஸ் காரின் விலையளவிற்கு புகையிலை விலையை உயர்த்தினால், ரோஸ் ராய்ஸ் கார் வாங்குகிறவன் மட்டும் தான் புகைப்பான், அவன் மட்டும் தான் வாங்குவான்.

பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு அது நன்மை.

அதை செய்யாமல், 2 ரூபாய் மூன்று ரூபாய் என விலையேற்றம் செய்வதால், அது வரை ஏழு ரூபாய் கொடுத்து வாங்கிய அன்றாடங்காய்ச்சி, வீட்டிற்கு செலவுக்காக ஒதுக்கும் பணத்தை மிச்சப்படுத்தி அதிகமாக 3 ரூபாய் இட்டு 10 ரூபாய்க்கு அதே புகையிலையை வாங்க தயங்க மாட்டான்.

தினக்கூலியின் வீட்டு அடுப்பெரியுதோ இல்லையோ, உதட்டில் நிச்சயம் அப்போதும் சிகரெட் எரிந்துக் கொண்டு தான் இருக்கும்.

இது அரசுக்கு தெரியும். இதை தான் அரசு எதிர்பார்க்கவும் செய்கிறது.

எனினும், அரசாங்கம் ஒரு வியாபாரத் துறை என்பதை அறிந்து கொண்டால் இதுவெல்லாம் பெரிதாக தெரியாது !!

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (E)


பூமியில் தான் வாழ முடியும்

"ஈஸா நபி இறக்கவில்லை" (பாகம் : 5)
--------------------------------------------------------

நிரந்தரமாக வாழும் வாழ்க்கையை எவருக்கும் கொடுக்கவில்லை என்கிற வசனம் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்கிற கருத்தை தராது என்பதை முந்தைய பகுதியில் பார்த்தோம்.

இதற்கு சான்றாக நல்லடியார் ஒருவரை 100 ஆண்டுகள் பூமிக்கு மேலே உறங்க செய்து, அதன் மூலம் அல்லாஹ் தனது அற்புதத்தை நிலை நாட்டியதை எடுத்துக் காட்டி, ஈஸா நபி 2000 வருடங்களாக உயிருடன் இருப்பதாக நம்புவது ஷிர்க் என்றால் இந்த மனிதர்ர் 100 வருடங்கள் தூங்கியே கழித்து, பின் விழித்ததாக நம்புவதும் ஷிர்கா என்று கேட்டிருந்தோம்.

2000 வருடங்களாக வாழ்வது நிரந்தரமாக எவருக்கும் வாழ்க்கையை கொடுக்கவில்லை என்கிற வசனத்திற்கு முரண் என்றால், இந்த நல்லடியார் பற்றிய சம்பவமும் முரணா? என்றும் கேட்டிருந்தோம்.

இதற்கெல்லாம் எந்த பதிலையும் உருப்படியாக சொல்லாத இந்த காதியானி மதத்தவர்கள், இந்த ஒட்டு மொத்த சம்பவமும் கனவு, அது கற்பனையாக அல்லாஹ் சொல்வது என்று

அல்லாஹ்வின் சிஃபத்தையே குழி தோண்டி புதைத்திருக்கிறீர்கள்.

சுப்ஹானல்லாஹ்.

எது கற்பனை? அந்த தொடரில் அல்லாஹ் எதையெல்லாம் சொல்லி வருகிறான்? முன் பின் வசனங்களையெல்லாம் வாசித்து விட்டு கற்பனையா என்று சொல்லுங்கள்.

எதிரிகள் அல்லாஹ்வை போல் நாங்களும் உயிர்கொடுப்போம், மரணிக்க செய்வோம் என்று இப்ராஹிம் நபியிடம் சொன்னதை முந்தைய வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
அவர்கள் கூறுவது பொய்.. அவ்வாறு அவர்களால் உயிர் கொடுக்க முடியாது என்பதை விளக்கும் பொருட்டு தான் இந்த சம்பவத்தை அல்லாஹ் சொல்கிறான்.
நல்லடியாரை 100 வருடங்கள் மரணிக்க செய்து, பின்னர் அல்லாஹ் அவருக்கு உயிர் கொடுக்கிறான்.
இது அல்லாஹ்வுக்கு மட்டும் தான் சாத்தியம் என்பதை நிரூபிக்க அல்லாஹ் செய்து காட்டிய அற்புதத்தை இங்கே அல்லாஹ் மேற்கோள் காட்டுகிறான்.

இது கனவா? காஃபிர்கள் சொல்லும் பதிலை அல்லவா சொல்கிறீர்கள்?

அல்லாஹ்வுக்கு மட்டும் தன் உயிர் கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதற்கு சான்றாக ஒரு சம்பவத்தை அல்லாஹ் எடுத்துக் காட்டும் போது, இது பொய், கற்பனை என்று தான் முஹம்மது நபி (சல்) அவர்களது சமுதாயத்தின் காஃபிர்கள் கூறினார்கள்.

இப்ப்போது மதம் மாறி சென்ற இந்த காதியானிக் கூட்டமும் அதையே சொல்கிறது.

சரி, அப்படியானால் தொடர்ந்து வரக்கூடிய 2:260 வசனத்தையும் கனவு, கற்பனை என்று இவர்கள் சொல்வார்களா?

நீ எப்படி உயிர்பிக்கிறாய் என்று எனக்கு காட்டு என்று மூசா நபி அல்லாஹ்விடம் கேட்க, அல்லாஹ் நான்கு கூறுகளாக வெட்டப்பட்ட பறவை ஒன்றினை உயிர்பிக்கிறான் என்று அந்த வசனம் சொல்கிறது.

இதுவும் கற்பனை தானா?

இது கற்பனை இல்லை என்றால் முந்தைய வசனம் மட்டும் எப்படி கற்பனை ஆனது?

இரண்டுமே, அல்லாஹ் தான் மரணிக்க செய்வான், அல்லாஹ் நாடினால் மரணித்தவர்களுக்கும் உயிர் கொடுப்பான் என்பதை சொல்வதற்கு அருளப்பட்ட வசனங்கள்.

/////உமது உணவும், பானமும் பாரும், அது கெட்டு போகவில்லை, மேலும் உமது கழுதையை பாரும் என்று மட்டுமே அல்லாஹு கூறுகின்றான்.
இதிலிருந்து, உணவும், பானமும், கேட்டுபோகவில்லை, கழுதையும் உயிரோடு இருக்கிறது என்று தான் பொருள்///////

இதுவும் தவறு. கழுதை கெட்டுப் போகாமல் உயிருடன் இருக்கவில்லை என்று அந்த வசனமே சொல்கிறது.

உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! உமது கழுதையையும் கவனிப்பீராக!

என்று அல்லாஹ் சொல்லி விட்டு, எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக! என்று கேட்கிறான்.

கழுதை செத்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் விட்டதால் தான் அதன் எலும்புகளை ஒன்று சேர்ப்போம் என்று சொல்கிறான்.

அவர் கொண்டு வந்த உணவும் பானமும் தான் கெட்டுப் போகவில்லை, மாறாக கழுதை இறந்து போனது. அது தான் இந்த வசனத்தின் கருத்து.

ஆனால் இது ஒரு பிரச்சனையல்ல. ஒரு வாதத்திற்கு, கழுதையும் உயிருடன் தான் இருந்தது என்று வைத்துக் கொண்டாலும் அதனால் இது கற்பனை என்று ஆகாது. அப்போதும் எனது கேள்வி நிற்கத்தான் செய்யும்.

அடுத்ததாக, பூமியில் தான் வசிக்க முடியும் என்று அல்லாஹ் சொல்கிற போது, நீங்கள் ஈஸா நபி வேறொரு உலகில் உயிருடன் இருப்பதாக நம்புவது இந்த வசனத்திற்கு முரண் என்கிற ஒரு வாதத்தை முன் வைக்கின்றனர்.

பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்! (7:10)

இந்த வசனம், மனிதனால் பூமி அல்லாத வேறு இடங்களில் வசிக்க முடியாது என்கிற கருத்தை சொல்கிறது என்பது உண்மை தான்.

ஆனால் இதை சொல்கிற அல்லாஹ் தான் ஈஸா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார் என்பதையும் சொல்கிறான்.
பூமியில் மட்டும் தான் வசிக்க முடியும் என்று ஒரு இடத்தில் சொல்லி விட்டு, இன்னொரு இடத்தில் ஈஸா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார் என்றும், மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்றும் சொன்னால், நான் ஏற்கனவே பல உதாரணங்களுடன் விளக்கியது போன்று, ஈஸா நபி மட்டும் இதில் விதிவிலக்கு பெற்றவர் என்று தான் விளங்க வேண்டும்.

ஈஸா நபி வர மாட்டார் என்கிற உங்கள் கூற்றினை நிரூபிக்க, அவர் உயர்த்தப்பட்டார் என்று கூறுவது தவறு என்றும், மீண்டும் வருவார் என்று சொல்வது தவறு என்றும் தான் நீங்கள் நிரூபிக்க வேண்டுமே அல்லாமல், இது போன்ற வசனங்களை மட்டும் எடுத்துக் காட்டி நிரூபிக்க முடியாது.

இன்னும் சொல்லப்போனால், பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதற்கு ஈஸா நபி அல்லாத இன்னொரு மனிதரிடமும் கூட விதிவிலக்கு இருக்கிறது.

ஒரு இரவு நபி (சல்) அவர்கள் இந்த பூமியில், இந்த உலகத்தில் இல்லை.
விண்வெளிப் பயணம் சென்ற அவர்கள், சொர்க்கம், நரகம், ஏழு வானம் என பூமியை விட்டு வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்திருந்தார்கள்.
அதை தான் மிஹ்ராஜ் பயணம் என்று குர் ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

மர்யம் என்றால் மிர்சா, ஈஸா என்றால் மிர்சா, ஈஸா வருவார் என்றால் ஈஸாவை போன்றவர் வருவார், பன்றியை கொல்வார் என்றால் தவறுகளை தடுப்பார், தஜ்ஜாலை கொல்வார் என்றால் கெட்டவைகளை அழிப்பார்..

இப்படி அல்லாஹ் சொல்வதையெல்லாம் சம்மந்தமேயில்லாமல் மாற்றிப் புரிந்து சாதனை புரிபவர்கள், மிஹ்ராஜ் விஷயமாக எப்படி சாதனை புரிந்திருக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை.
தங்கள் நிலையை நியாயப்படுத்த மிஹ்ராஜ் என்றால் அது ஒரு கற்பனை என்று உளரிக்கொட்டினாலும் ஆச்சர்யமில்லை.

ஆக, நபி (சல்) அவர்கள் பூமியில் வசிக்காத காலமும் இருந்தது. இருப்பினும், பூமியில் தான் வாழ முடியும் என்று அல்லாஹ் சொல்கிற இடத்தில், இந்த முஹம்மது மிஹ்ராஜ் சென்றதை தவிர.. என்று அல்லாஹ் சொல்கிறானா? என்றால் இல்லை.

நான் ஏற்கனவே சொன்னது போல, பொதுவான செய்திகளை சொல்கிற போது கூடவே விதிவிலக்குகளையெல்லாம் சொல்ல தேவையில்லை. அப்படி அல்லாஹ் சொல்லவும் மாட்டான்.
விந்து துளியால் மனிதனை படைத்தான் என்பது பொதுவான செய்தி. ஈஸா நபி விந்தினால் படைக்கப்படவில்லை என்றாலும், அதை இந்த வசனத்தில் கூறவில்லை.
வேறு இடங்களில் தான் அந்த விதிவிலக்கை சொல்கிறான்.

அது போல, பூமியில் தான் வாழ முடியும் என்கிற ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு மட்டும் அனைத்தையும் புரிந்து விடக் கூடாது.

ஈஸா நபி உடலுடன் உயர்த்தப்ப‌ட்டார், மீண்டும் இவ்வுலகில் வருவார் என்று தனியே வேறு இடங்களில் சொல்லப்பட்டிருக்கும் போது, பூமியில் தான் வாழ முடியும் என்பதில் ஈஸா நபி அடங்க மாட்டார் என்று விளங்குவது எளிது தான்.
முஹம்மது நபி மிஹ்ராஜ் பயணம் மூலம் பூமியில் வாழாத ஒரு நாளும் இருந்தது என்று வேறு இடங்களில் அல்லாஹ் சொல்வதால் பூமியில் மட்டும் தான் மனிதனால் வாழ முடியும் என்பதில் முஹம்மது நபியின் இந்த மிஹ்ராஜ் சம்பவம் விதிவிலக்கு பெற்றது என்று எளிதில் புரிய முடிகிறது.

ஆக, இந்த ஆதாரமும் ஈஸா நபி மரணித்து விட்டதற்கு சான்றாய் இல்லை. ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்றால் மரணித்து விட்டார்கள் என்று நேரடியாக காட்ட வேண்டும். அப்படி எந்த செய்தியும் குர் ஆன் , ஹதீஸில் இல்லை.

இவர்கள் முன் வைக்கும் ஆறு ஆதாரங்களில் இரண்டு ஆதாரங்களின் நிலையை பார்த்து விட்டோம்.

அடுத்தடுத்த ஆதாரங்களை தொடர்ந்து பார்போம், இன்ஷா அல்லாஹ்

தொடரும்..

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (D)

எவருக்கும் நிரந்தரமான வாழ்க்கை இல்லை

"ஈஸா நபி இறக்கவில்லை (பாகம் : 4)
------------------------------------------------------------------

குறித்த நேரத்தில் அனைத்து முஃமீன்களும் தொழ வேண்டும் என்று ஒரு இடத்திலும், பயணிகள் குறித்த நேரத்தில் தொழ வேண்டியதில்லை என்று இன்னொரு இடத்திலும் சொல்லப்படுவதை எவரும் முரண் என்று சொல்ல மாட்டோம்.

அது போல, நிரந்தரமாக வாழும் வாழ்க்கையை எவருக்கும் கொடுத்ததில்லை, முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்பது போன்று ஒரு இடத்திலும், ஈஸா நபி மீண்டும் இவ்வுலகிற்கு வருவார் என்று இன்னொரு இடத்திலும் சொல்லப்படுவதையும் முரண் என்று சொல்லக்கூடாது என்று முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

தொழுகை விஷயமாக பயணிகளுக்குரிய சலுகை என்பது ஹதீஸில் இல்லை, குர் ஆனிலேயே அல்லாஹ் சொல்லி விட்டான், ஆகவே இது விதிவிலக்கு என்று தானே புரிய வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும்.

ஆனால் அடிப்படையில் இது தவறான கேள்வி. முதலில், குர் ஆனில் பயணிக்குரிய சலுகை என்று எங்கும் இல்லை. அச்ச நேரங்களில் செயல்படுபவை பற்றி தான் உள்ளது.
பயணிக்குரிய சலுகை ஹதீஸில் தான் இருக்கிறது. ஆகவே இந்த வாதம் தவறு.

ஒரு பேச்சுக்கு, குர் ஆனிலேயே பயணிகள் குறித்த நேரத்தில் தொழ வேண்டியதில்லை என்று இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட, அப்போதும் எனது வாதம் ஒன்றும் அர்த்தமில்லாமல் போகாது.

மூமீன்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று தனியே ஒரு வசனம் இருக்கிறதா இல்லையா? அது தான் கேள்வி.
அதற்கு மாற்றாக குர் ஆனிலேயே வேறு இடங்களில் விதிவிலக்கு சொல்லப்பட்டால் அது ஏன் முரண் என்று புரியாமல் விதிவிலக்கு என்று புரிகிறீர்கள்? என்று அப்போதும் கேள்வி கேள்வியாக நிற்கத்தான் செய்யும்.

குர் ஆன் எப்படி அல்லாஹ்வின் வார்த்தையோ அது போல் ஹதீஸும் அல்லாஹ்வின் வார்த்தை தான்.

குர் ஆனில் ஒரு இடத்தில் பொதுவாகவும் இன்னொரு இடத்தில் அதிலிருந்து விதிவிலக்காகவும் ஒன்றை சொன்னால் எப்படி அதை விதிவிலக்கு என்று சரியாக புரிவோமோ அது போல தான் குர் ஆனில் ஒன்றை பொதுவாக சொல்லி ஹதீஸில் குறிப்பாக ஒன்றை சொல்லும் போதும், ஹதீஸ் விதிவிலக்கு என்று தான் புரிய வேண்டும்.

இந்த தொழுகை விஷயத்தை நான் உதாரணமாக காட்டியது போலவே, மனிதனை விந்துத் துளியால் படைத்தான் என்கிற பொதுவான இறை செய்தியையும் சான்றாக காட்டினேன்.

மனிதனை விந்துத் துளியால் படைத்தேன் என்று ஒரு இடத்தில் சொல்லி விட்டு, ஆதமை தன் கையால் படைத்தேன் என்று இன்னொரு இடத்தில் சொல்கிறான்.
ஈஸாவை தந்தையின்றி படைத்தேன் என்று வேறொரு இடத்தில் சொல்கிறான்.

(((ஆதமை கையால் படைத்தான் என்று குர் ஆனில் எங்கே இருக்கிறது ? ஆதாரம் காட்ட முடியுமா? என்று நிசார் அவர்கள் கேட்டிருந்தார்.. அவருக்காக இந்த ஆதாரம் :
ஆதமை கையால் படைத்ததாக அல்லாஹ் 38:75 வசனத்தில் சொல்கிறான்)))

மனிதனை விந்துத் துளியால் படைத்தேன் என்று சொன்ன வசனத்தில், ஆதமையும் ஈசாவையும் தவிர என்று அலலாஹ் சொல்லவில்லை.
பொதுவாக மனிதன் என்று பொதுப்படையாக தான் சொல்கிறான்.
மனிதன் என்று பொதுப்படையாக சொன்னால் ஆதமும் அதில் அடங்குவார், ஈஸாவும் அதில் அடங்குவார்.

ஆனால், வேறு வசனங்களில் ஆதம் விந்தால் படைக்கப்படவில்லை என்று தனியே சொல்லப்பட்டதால்,
ஈஸா விந்தால் படைக்கப்படவில்லை என்று தனியே சொல்லப்பட்டதால்,
மனிதனை விந்துத் துளியால் படைத்தோம் என்று அல்லாஹ் பொதுவாக சொல்வது ஈஸாவையும் ஆதமையும் தவிர.. என்று நாமாக புரிகிறோம்.

அது போல தான், முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்று அல்லாஹ் பொதுப்படையாக சொன்னால் அதில் ஈஸாவும் அடங்குவார் என்று தான் முதலில் அர்த்தம் வைக்க வேண்டும்.
அவ்வாறு அர்த்தம் வைத்து தான் இந்த காதியானிகள், ஈஸா மீண்டும் வர மாட்டார் என்று சொல்கின்றனர்.
ஆனால், குர் ஆனில், முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் ஹதீஸில் ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்பட்டு விட்டதால் ஈஸா நபியை தவிர வேறு அனைவரும் சென்று விட்டார்கள் என்று புரிகிறோம்.

கடந்த இரண்டு பாகங்களில், விதிவிலக்கு என்றால் என்ன, முரண் என்றால் என்ன? என்பதையே விளக்கி வந்ததன் விளைவு என்னவென்றால்,
ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று நம்புகிறவர்கள் கூட, மீண்டும் வருவார்கள் என்பதை மறுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஈஸா நபி வஃபாத் ஆகி விட்டார்கள் என்று குர் ஆனில் நேரடியாக சொல்லப்பட்டு விட்டது, எனவே அவர் இறந்து விட்டார் .. எனினும், மீண்டும் வர மாட்டார் என்று குர் ஆன் எங்குமே சொல்லாததால், ஹதீஸில் மீண்டும் வருவார் என்று சொல்லப்பட்டுவதை நம்பலாம் என்று இந்த காதியானிகளும் ஒரு படி இறங்கி தான் வந்தாக வேண்டும்.

ஏனெனில், ஒரு வாதத்திற்கு ஈஸா நபி இறந்து விட்டார் என்று வைத்துக் கொண்டால் கூட‌, மீண்டும் வருவார் என்று ஹதீஸ் சொல்வதை மறுக்கத் தேவையில்லை.
இறந்தவர் கூட அல்லாஹ் நாடினால் உயிர்பெற்று மீண்டும் வரலாம்.

இந்த காதியானிகள் மிர்சா மிர்சா எனும் போதையில் உழன்று வருவதால், இதற்கு பதில் சொல்ல முடியாது என்ற போதிலும்,

ஈஸா நபி இறந்து விட்டார் என்பது உண்மை.. ஆனால் மீண்டும் வருவார் என்பது ஹதீஸின் அடிப்படையில் சரி தான் என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நடு நிலையுடன் சிந்திக்கும் அவர்கள் மனசாட்சி அதை சரி காணவே செய்யும்.

ஆக, ஈஸா நபி இறந்து விட்டார்
மீண்டும் வர மாட்டார்..

ஆகிய இரண்டும் கொள்கைகளில் ஒரு கொள்கை தவிடு பொடியாகி விட்டது.

இனி ஈஸா இறந்து விட்டார் என்று இவர்கள் சொல்வது சரியா என்பதை மட்டும் கவனமாக பார்த்தாலே போதும்.

ஈஸா வஃபாத் ஆகி விட்டார் என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான் என்பது உண்மையா?
அந்த வசனத்தை வைத்து ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற முடிவுக்கு வரலாம் என்பது சரி தானா?

என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன், இவர்கள் வைக்கும் ஆதாரங்களை அதே வரிசையில் தொடராக பார்க்க துவங்குவோம்.

நிரந்தரமாக வாழும் வாழ்க்கையை எவருக்கும் கொடுக்கவில்லை என்கிற இறை வசனம், பூமியில் தான் வசிக்க முடியும் என்கிற இறை வசனம் போன்றவைகளின் அடிப்படையில் ஈஸா நபி இறந்து விட்டார் என்று புரிய முடிகிறது என்பது இவர்கள் வாதம்.

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்த வில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக் கூடியவர்களா? (21:34)

இந்த வசனத்தில் நிரந்தரமாக வாழும் வாழ்க்கையை எவருக்கும் நாம் கொடுக்கவில்லை என்று சொல்வதனுடைய அர்த்தம் எவருமே நித்திய ஜீவன் இல்லை என்பது.

அதனால் தான், நீ மரணித்து விடுவாய், அவர்கள் மட்டும் நிலையாக இருப்பார்களோ? என்று அல்லாஹ் கேட்கிறான்.

நித்திய ஜீவனாக எந்த மனிதனாலும் இருக்க முடியாது என்பதை விளக்கும் வசனம் தான் இது.
தொடர்ந்து வரக்கூடிய அடுத்த வசனத்திலும் (21:35), ஒவ்வொருவரும் மரணத்தை சுவைப்பவரே என்று அல்லாஹ் சொல்வதன் மூலம்..

மரணமே இல்லாத வாழ்க்கை எவருக்கும் தரப்படவில்லை என்பது தான் இந்த வசனத்தின் பொருள் என்பதை தெளிவாக புரியலாம்.

இதை எடுத்துக் கொண்டு, பாருங்கள், எவருக்கும் நிரந்தரமான வாழ்வை அல்லாஹ் கொடுக்கவில்லை.. ஆகவே ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்றூ வாதம் புரிவது மிகவும் பாமரத்தனமான, நுனிப்புல் மேயும் வாதம் தான் என்பது தெளிவு.

ஈஸா நபி அன்றைக்கும் இறக்கவில்லை, என்றைக்கும் இறக்கவே மாட்டார் என்று நாம் சொல்லியிருந்தால்.. அப்போது தான் இந்த இறை வசனத்தை இவர்கள் அதற்கு மறுப்பாய் காட்ட முடியும்.

ஈஸா நபி மரணிக்கவில்லை, ஆனால் ஒரு நாள் அவரும் மரணிப்பார்.

எந்த மனிதருக்கும் அல்லாஹ் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை !

ஒவ்வொருவரும் மரணத்தை சுவைப்பவரே (21:35)

அடிப்படை புரியாமல், ஆஹ்.. 2000 வருடமாக ஒருவர் உயிருடன் இருப்பதா? அய்யகோ இதென்ன கொடுமை.. என்ன ஒரு பெரிய ஷிர்கான கொள்கை இது..

என்றெல்லாம் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவர்களுக்கு ஷிர்க் என்றால் என்ன என்பதும் தெரியவில்லை.

அல்லாஹ்வுக்கு இணையாக ஒருவர் செய்ததாக நம்பி, அந்த நம்பிக்கைக்கு அல்லாஹ்விடம் அங்கீகாரம் இல்லையென்றால் தான் அது ஷிர்க்.

அல்லாஹ்வுக்கு இணையான ஒரு காரியத்தை ஒருவர் செய்து காட்டி, அதை அல்லாஹ்வும் அங்கீகரித்து கொண்டான் என்றால் அதை நம்புவது ஷிர்க் இல்லை.

இதே ஈஸா நபி வெண் குஷ்டத்தை கையால் தடவியே குணப்படுத்துவார்கள், குருடர்களுக்கு பார்வை வழங்குவார்கள், இறந்தவரை உயிர்ப்பிப்பார்கள்,
மூஸா நபி கைத்தடியை கீழே போட்டு அதை பாம்பாக மாற்றிக் காட்டுவார்கள், சுலைமான் நபி விலங்குகளிடம் கூட பேசுவார்கள், ஜின்களை வசப்படுத்தி வைத்திருந்தார்கள்

இதுவெல்லாம் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடிகின்ற, வேறெந்த மனிதருக்கும் செய்ய இயலாத காரியங்கள் தான்.

ஆனால் மூஸா நபி அப்படி செய்தார் என்று நம்புவது ஷிர்க் ஆகி விடுமா? என்றால் ஆகாது.
ஏன் ஆகாது என்றால், அப்படி செய்ததாய் அல்லாஹ்வே சொல்லி விட்டான். அதனால் அது ஷிர்க் இல்லை, அல்லாஹ்வின் குத்ரத்தில் நிகழ்ந்த அற்புதம் என்று புரிகிறோம்.

ஆக, ஷிர்க், ஷிர்க்.. என்று குதிப்பதற்கு முன், அப்படி நடந்ததாக அல்லாஹ் சொல்கிறானா இல்லையா? என்பதை தான் பேச வேண்டும்.
ஈஸா நபி உயிருடன் இருப்பதாக அல்லாஹ் சொன்னால், அதை நம்புவது ஷிர்க் இல்லை.

சரி நான் கேட்கிறேன், 2000 வருடங்கள் உயிருடன் வாழ்வதாக நம்புவது நிரந்தரமாக எவருக்கும் வாழ்க்கையை நான் கொடுக்கவில்லை என்கிற 21:34 வசனத்திற்கு முரண் என்றால்,

நூஹ் நபி 900 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தார்களே, அது இவர்கள் பார்வையில் நிரந்தரமில்லையா? நிரந்தரமாக எவருக்கும் வாழ்க்கை கொடுக்கவில்லை என்கிற 21:34 வசனத்தின் அடிப்படையில் 900 வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படும் நூஹ் நபியின் வரலாறு பொய் என்று இவர்கள் சொல்வார்களா?

ஆக, என்ன வாதம் புரிந்தாலும், அடிப்படையில் கோளாறு என்றால் எதுவுமே நிற்காது என்பதை காதியானி மதத்தவர்கள் புரிய வேண்டும்.

மேலும், 100 வருடங்கள் பூமிக்கு மேலே உயிரோடு வைக்கப்பட்ட ஒரு நல்லடியார் பற்றி அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறானே.. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்பதாக முந்தைய தொடர்களில் நான் எழுப்பியிருந்த கேள்விக்கு.

இது நிஜமல்ல, இது ஒரு கனவு நிகழ்ச்சி என்று நா கூசாமல் பொய் ஒன்றை சொல்லி, எதை அல்லாஹ் தனது ஆற்றலுக்கும் சிஃபத்திற்கும் சான்றாய் காட்டுகிறானோ அதை வெறும் கற்பனை கதையாக திரித்து தங்கள் கொள்கையை நிலைபெற முயற்சிக்கின்றனர் இந்த காதியானி மதத்தவர்கள்.

அது பற்றியும், தொடர்ந்து, ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதற்கு சான்றாக இவர்கள் எடுத்து வைக்கும் இன்னபிற ஆதாரங்கள் பற்றியும் அடுத்தடுத்து பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்

தொடரும்..

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (C)


முரண் என்றால் என்ன, விதிவிலக்கு என்றால் என்ன ??

ஈஸா நபி இறக்கவில்லை (பாகம் 3)
-------------------------------------------------------------------------------

விதிவிலக்கு என்றால் என்ன? முரண் என்றால் என்ன என்கிற அடிப்படை அறிவு இல்லாமல் போன காரணத்தால் தான் காதியானி மதமே உண்டாகியிருக்கிறது.

இந்த அடிப்படை புரியாத காரணத்தால் தான் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்கிற பாமரத்தனமான சித்தாந்தங்கள் சமூகத்தில் ஊடுருவத் துவங்கின.

மனிதனுக்கு இரண்டு கைகள் என்று பாலிய பாடத்தில் ஆசிரியர் நமக்கு சொல்லித் தந்திருப்பார்.

எப்படி? கடந்த 2003 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு கையோடு குழந்தையொன்று பிறந்ததாக எட்டாம் வகுப்பு ஆசிரியர் எங்களிடம் சொன்னாரே, அப்படியானால் இந்த ஆசிரியர் தவறாக சொல்கிறார் என்று எவனாவது கேள்வி கேட்டால் அது அறிவுள்ள கேள்வியாகுமா? என்றால் ஆகாது.

மனிதனுக்கு இரண்டு கைகள் என்பது பொது விதி. பொது விதியை தான் எல்லாரும் சொல்வார்கள். சொல்லும் போதே விதிவிலக்கையும் சேர்த்தே சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை.

ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாடம் எடுக்கையில், மனிதனுக்கு இரண்டு கைகள் என்று சொல்லிக் கொடுத்தாலே போதும். அந்த பொது விதியை தான் அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாமல்,

""மனிதனுக்கு இரண்டு கைகள், நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு குழந்தை, ஐரோப்பா கண்டத்திலுள்ள இரண்டு குழந்தை, ஆஸ்திரேலியாவில் ஐந்து குழந்தைகள் ஆகியவற்றை தவிர..""

இப்படி எந்த பள்ளிக்கூடத்திலும், எந்த ஆசிரியரும் பாடம் நடத்த மாட்டார்.

விதிவிலக்கை சொல்லாமல், மனிதனுக்கு இரண்டு கைகள் என்று மட்டுமே சொன்னதால், நாமக்கலில் ஒற்றை கையுடன் குழந்தை பிறந்ததை பொய் என்று எவரும் சொல்ல மாட்டோம்.

ஆசிரியர் பொதுவான விதியை சொன்னார், அதிலிருந்து விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகில் அற்புதங்கள் நடைபெறத்தான் செய்யும், அவை இந்த விதிவிலக்கை பொய்ப்பிக்காது, அல்லது அதை அர்த்தமற்றதாக ஆக்காது என்று அனைவருமே புரிந்து கொள்வோம்.

அப்படி தான் தொழுகை விஷயமாக நான் முந்தைய பதிவில் சொன்னதையும் புரிகிறோம்.

தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்வது பொது விதி.

அதிலிருந்து ஹதீஸில் சொல்லப்படும் பயணிகள் விதிவிலக்கு பெற்றவர்கள்.

விதிவிலக்கு பெற்றவர்களையெல்லாம் பொது விதிகளிலே இணைத்து தான் சொல்ல வேண்டும், இல்லையென்றால் அந்த விதிவிலக்கை முரண் என்று புரிந்து அதை மறுப்பேன் என்று எவராவது அடம்பிடித்தால்,சிந்தனை தடுமாற்றம் என்பது அவரிடம் தான் உள்ளது என்று பொருளாகுமே தவிர, சொல்லப்பட்டும் பொது விதியிலும், விதிவிலக்கிலும் எந்த தவறும் இருப்பதாக ஆகாது.

இது தான் விதிவிலக்கு என்பது.

இதே விதிவிலக்கு எப்போது முரண் என்கிற நிலையை அடையும்??

நாமக்கலில் ரமேஷுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இரண்டு கைகள் என்று ஒன்றாம் வகுப்பு மாணவருக்கு ஆசிரியர் பாடம் நடத்த..

மறுபுறம், அதே ரமேஷுக்கு பிறந்த குழந்தைக்கு ஒரு கை மட்டும் இருக்கிறது என்று எட்டாம் வகுப்பு ஆசிரியர் கூறினால், இரண்டும் முரண் என்று சொல்வோம்.

இது தான் முரண் என்பது.

முஃமீன்கள் அனைவருக்கும் தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமை என்று குர் ஆன் சொல்வதற்கு பதிலாக,

பயணிகளாக இருக்கும் முஃமீன்கள் அனைவருக்கும் தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமை என்று குர் ஆன் சொல்லியிருந்தால்,

ஹதீஸில் பயணிகள் மஹ்ரிபை பிற்படுத்தி தொழலாம் என்று வரக்கூடிய சட்டம் குர் ஆனுக்கு முரண் என்று ஆகும்..

அப்படியொரு நிலை இருந்தால் அந்த ஹதீஸை தூக்கிப் போட்டு விட்டு, குர் ஆனுக்கு முன்னுரிமை கொடுப்போம்.

இது தான் முரண் என்பது.

இவர்கள் ஈஸா நபி இறந்து விட்டார் என்பதற்கு சான்றாக

எவருக்கும் நிரந்தர வாழ்க்கையை கொடுக்கவில்லை, எவருக்கும் உணவு உண்ணாத உடல் இல்லை,
முஹம்மது நபிக்கு முன் வந்த தூதர்கள் இறந்து விட்டனர்..

போன்ற வசனங்களை எடுத்துக் காட்டி, இதன் காரணமாக ஈஸா நபி இறந்து விட்டார் என்றும் மீண்டும் இவ்வுலகில் வர மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், ஹதீஸ்களில் ஈஸா நபி இவ்வுலகிற்கு மீண்டும் வருவார்கள் என்று தெளிவாக சொல்லபட்டிருக்கிறது.

இப்போது குர் ஆன் வசனங்களையும் இந்த ஹதீஸ்களையும் இணைத்து புரிய வேண்டுமா அல்லது முரண் என்று கூறி ஹதீஸை களைய வேண்டுமா?

குர் ஆனில் சொல்லப்பட்டவைகளிலிருந்து ஹதீஸில் சொல்லப்பட்டவை விதிவிலக்கு பெற்றவை என்று புரிய முடிகிறதா
அல்லது குர் ஆனுக்கு ஹதீஸ் முரண் என்று புரிய இடமிருக்கிறதா?

என்பதை ஆராய.. நான் ஏற்கனவே சொன்னது போல், முரண் என்றால் என்ன, விதிவிலக்கு என்றால் என்ன? என்கிற விளக்கத்தை இதனுடம் ஒப்பிடுங்கள்.

ஹதீஸில் முஃமினான பயணிகள் தொழுகையை குறித்த நேரத்தில் தொழ வேண்டியதில்லை என்று உள்ளது.

குர் ஆனில், முஃமினான பயணிகள் தொழுகையை குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று இடம்பெற்றிருந்தால், ஹதீஸ் குர் ஆனுக்கு முரண் !

அப்படியொரு நிலை ஏற்பட்டால், பயணியாக இருந்தாலும் குறித்த நேரத்தில் தான் தொழ வேண்டும் என்று குர் ஆன் கூறும் சட்டத்தை தான் எடுத்திருப்போம்.

ஹதீஸில், பயணிகள் குறித்த நேரத்தில் தொழ வேண்டியதில்லை என்கிற சட்டத்தை உதாசீனப்படுத்தியிருப்போம்.

ஆனால், உண்மையில் குர் ஆனில் பயணிகள் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று இல்லை.
பொதுவாக எல்லா முஃமீன்களும் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று தான் உள்ளது.
பொதுவாக அதில் சொல்லப்பட்டதிலிருந்து ஹதீஸில் விதிவிலக்கை சொல்கிறது என்று புரிவதால் ஹதீஸை உதாசீனப்படுத்தாமல்,

குர் ஆனில் சொல்லப்பட்டது எல்லாருக்குமுரிய சட்டம், ஹதீஸில் சொல்லப்பட்டது பயணிக்கு மட்டும் உரிய சட்டம் என்று இணைத்து புரிகிறோம்.

அது போல, ....................................

ஹதீஸில் ஈஸா நபி இறக்கவில்லை, இவ்வுலகிற்கு மீண்டும் வருவார்கள் என்று உள்ளது.

குர் ஆனில் ஈஸா நபி இறந்து விட்டார்கள், இவ்வுலகிற்கு மீண்டும் வர மாட்டார்கள் என்று இடம்பெற்றிருந்தால் ஹதீஸ் குர் ஆனுக்கு முரண் !

அப்படியொரு நிலை ஏற்பட்டால், எல்லா நபியையும் போல் ஈஸா நபியும் இறந்து விட்டார், மீண்டும் வர மாட்டார் என்று குர் ஆன் கூறும் சட்டத்தை தான் எடுத்திருப்போம்.

ஹதீஸில், ஈஸா நபி மீண்டும் வருவார் என்கிற செய்தியை உதாசீனப்படுத்தியிருப்போம்.

ஆனால், உண்மையில் குர் ஆனில் ஈஸா நபி மீண்டும் வர மாட்டார் என்று இல்லை.

பொதுவாக முஹம்மது நபிக்கு முன்னுள்ள நபிமார்கள் இறந்து விட்டார்கள் என்று தான் உள்ளது.
பொதுவாக அதில் சொல்லப்பட்டதிலிருந்து ஹதீஸில் விதிவிலக்கை சொல்கிறது என்று புரிவதால் ஹதீஸை உதாசீனப்படுத்தாமல்,

குர் ஆனில் சொல்லப்பட்டது மற்ற எல்லா நபிமார்களைப் பற்றிய செய்தி , ஹதீஸில் சொல்லப்பட்டது ஈஸா நபியை பற்றி மட்டுமுள்ள செய்தி என்று இணைத்து புரிகிறோம்.

விதிவிலக்கை முரண் என்றும் முரணை விதிவிலக்கு என்றும் குழப்பி விடுவதால் ஏற்பட்ட அறியாமை தான் இதற்கு காரணம்.

ஈஸா நபி மரணித்து விட்டார், மீண்டும் வர மாட்டார் என்று குர் ஆனில் நேரடியாக சொல்லியிருந்தால், மீண்டும் வருவார் என்கிற ஹதீஸை நாம் தூக்கி போட்டிருப்போம்.

அப்படியான பல்வேறு ஹதீஸ்களை நாம் மறுக்கத் தான் செய்கிறோம்.

உதாரணத்திற்கு, முஹம்மது நபிக்கு சூனியம் செய்யப்படவில்லை என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.
ஆனால், ஹதீஸில் முஹம்மது நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வருகிறது.

இந்த இரண்டும் நேர் எதிராக மோதுகிறது என்பதால் ஹதீஸில் சொல்லப்பட்டது பொய்யான செய்தி என்று அதை தூக்கி போட்டு விடுகிறோம்.

இவ்வாறு இன்னும் பல ஹதீஸ்களை குர் ஆனுக்கு முரண் என்று நாம் மறுக்கத் தான் செய்கிறோம்.

அதற்கெல்லாம் காரணம், எதை ஹதீஸ் சொல்லுமோ அதற்கு நேர் எதிராக குர் ஆன் சொல்லியிருக்கும்.

அவ்வாறு நேர் எதிராக, எதிர் எதிரே முட்டி மோதக்கூடிய வகையில் தொழுகை சட்டமும் இல்லை, ஈஸா நபி மீண்டும் வருவார் என்பதும் இல்லை.

முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற வசனத்தை வைத்து ஈஸா நபி மீண்டும் வர மாட்டார் என்று வாதம் புரிகிறவர்கள்,

தொழுகை என்பது முஃமீன்கள் அனைவருக்கும் நேரம் குறிக்கப்பட்ட கடமை என்கிற வசனத்தை வைத்து, பயணிகள் தொழுகையை பிற்படுத்தி தொழக்கூடாது என்று தான் வாதம் வைக்க வேண்டும்.

தங்களுக்கு சாதகமான ஒன்றுக்கு ஒரு பார்வையும், பாதகமான இன்னொன்றுக்கு வேறொரு பார்வையும் கொண்டிருந்தால்,

ஒன்று அவர்கள் சிந்தனை தடுமாற்றமுடையவர்கள் என்று பொருளாகும்
அல்லது சந்தர்ப்பவாதிகள் என்று அர்த்தமாகும்.

இரண்டில் எது நிரூபணமானாலும் அவர்கள் வைப்பது தவறான வாதம் என்பதும் சேர்ந்தே நிரூபணமாகி விடும் !

தொடரும் இன்ஷா அல்லாஹ்

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)


பயணிகள் தொழுகையை ஜம்மு செய்யலாம் என்பது முரண்பாடா?

"ஈஸா நபி இறக்கவில்லை" (பாகம் 2)
-------------------------------------------------------------------------------

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று கூறுவோர் ஆறு வசனங்களை தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

அந்த ஆறு ஆதாரங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு முன்னால், குர்ஆன் ஹதீஸின் அணுகுமுறை குறித்த இவர்களது அறியாமையை முதலில் விளக்குவது இதை வாசிக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

குர் ஆனில் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கும், அதற்கான கூடுதல் விளக்கம், அதில் உள்ள விதிவிலக்கு போன்றவை ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும்.

இது தான் பல்வேறு சட்டங்களில் அல்லாஹ்வின் அணுகுமுறையாக இருக்கின்றது.

திறந்த மனத்துடனும், பொறுமையுடனும் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு எளிமையாக புரியும்.

முதலில் தொழுகை சட்டத்தை எடுத்துக் கொள்வோம்.

தொழுகை என்பது முஃமீன்கள் ஒவ்வொருவருக்கும் நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது என்று அல்லாஹ் சொல்கிறான்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (4:103)

இந்த வசனத்தின் படி, ஒவ்வொரு ஐவேளை தொழுகையையும் அந்தந்த நேரத்தில் கட்டாயம் தொழுதாக வேண்டும் என்றும், இதில் எவருக்கும் விதிவிலக்கு இல்லை என்றும் முஃமீன்கள் அத்தனை பேரையும் இந்த வசனம் குறிப்பதாகவும் புரிய முடிகிறது.

இப்போது, குர் ஆனுக்கு விளக்கமாக அமைந்த ஹதீஸ் என்ன சொல்கிறது என்று பார்போம்.

நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 1091

இந்த ஒரு அளவுகோலை மட்டும் இங்கே நான் விளக்க ஆசைப்படுகிறேன்.

குர் ஆனில் (4:103) வசனத்தில் ஒவ்வொரு தொழுகையையும் அதனதன் நேரத்தில் தான் தொழ வேண்டும் எனவும் அப்படி தொழுதால் தான் முஃமீன் என்று ஒருவன் அல்லாஹ்வால் கருதப்படுவான் எனவும் சொல்லப்ப‌டுகின்றது.

ஆனால் புஹாரியில் பதிவாகியுள்ள ஹதீஸில் பயணியாக இருக்கும் நபி (சல்) அவர்கள் மஹ்ரிபை அதன் நேரத்தில் தொழ மாட்டார்கள் என்று உள்ளது.

இப்போது இந்த இரண்டையும் நாம் எப்படி புரிவோம்? எப்படி புரிய வேண்டும்?

குர் ஆனில் அல்லாஹ் சொல்வது பொதுவான கட்டளை.

ஹதீஸில் நபி (சல்) அவர்கள் காட்டித் தந்தது விதிவிலக்கு பெற்றவர்களுக்கான சலுகை.

இப்படி ஏன் புரிகிறோம்? என்றால்..

குர் ஆனில் அல்லாஹ் பொதுவான செய்திகளை தான் சொல்வான். அது தான் குர் ஆனின் நடைமுறை.

ஒவ்வொன்றையும் விலாவாரியாக குர் ஆன் விளக்காது.

ஒவ்வொன்றையும் தனிதனியே பிரித்து விளக்கும் வேலையை குர் ஆன் செய்யாது.

அதை செய்ய தான் நபி (சல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அதை விளக்கும் வேலையை தான் அவர்கள் செய்தார்கள்.
அது தான் ஹதீஸ் நூல்களாக நம் கைகளில் உள்ளது.

தொழுகையை நிலைனாட்டுங்கள் என்று சொல்வான். ஆனால் எப்படி தொழ வேண்டும் என்று சொல்ல மாட்டான்.

சகாத் கொடுங்கள் என்று சொல்வான், எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்ல மாட்டான்.

ஹஜ் செய்யுங்கள் என்று சொல்வான், எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டான்.

எப்படி சட்டத்தை மட்டும் சொல்லி விட்டு அதன் செயல் முறையை நபி (சல்) அவர்கள் விளக்கும்படி விட்டு விட்டானோ அது போல தான், பொதுவாக அனைவரும் பேண வேண்டிய விஷயங்கள் என்று சிலவற்றை சொல்வான். அதில் விதிவிலக்குகளை சொல்ல மாட்டான்.

அந்த பொது விதியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் யார் யார் ? என்பதை நபி (சல்) அவர்கள் விளக்குவார்கள்.

முஃமீன்கள் அனைவருக்கும் தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று பொதுவாக அல்லாஹ் சொல்வான்.

அந்த முஃமீன்களில் பயணியாக இருப்பவர் பிற்படுத்தி தொழுது கொள்ளலாம் என்று நபியவர்கள் மூலம் (ஹதீஸின் மூலம்) விலக்கு அளிப்பான்.

குர் ஆனின் அணுகுமுறையை புரிந்து, குர் ஆனுடன் ஹதீஸும் தேவை என்பதை அறிந்த முஃமீன்கள் என்றால் இதை முரண்பாடின்றி அழகாக புரிவார்கள்.

அல்லாமல், குர் ஆனில் தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று எல்லா முஃமீன்களுக்கும் பொதுவாக தான் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்,

எனவே பயணியாக இருப்பவர் மஹ்ரிபை பிற்படுத்தி தொழலாம் என்று ஹதீஸில் வந்திருப்பது இந்த குர் ஆன் வசனத்திற்கு முரண் என்று எவராவது சொன்னால்

அவர் குர் ஆனை பேணியவராகவும் ஆக மாட்டார்,

குர் ஆனை விளக்க வந்தவர்கள் தான் நபி (சல்) அவர்கள் என்பதை நம்பியவராகவும் ஆக மாட்டார்.

நபி (சல்) அவர்கள் கொண்டு வந்த ஹதீஸை ஏற்றவராகவும் ஆக மாட்டார்.

மொத்தத்தில், இஸ்லாமிய வட்டத்தை விட்டே வெளியேறியவராக ஆவார்.

குர் ஆனில் முஃமீன்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று பொதுவாக அல்லாஹ் சொல்கிறான்.

ஹதீஸில் அந்த முஃமீன்களில் பயணியாக இருப்பவர் தாமதமாகவும் தொழலாம் என்று சொல்கிறான்.

இரண்டும் வஹி தான், இரண்டும் அல்லாஹ் சொன்னது தான்.

இங்கே முரண்பாடு கற்பிப்பது மடமை.

முரண்பாடு எப்போது வரும்?

பயணியாக இருக்கும் முஃமீன்களுக்கும் தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்லியிருந்து,

ஹதீஸில் நபி (சல்) அவர்கள் பயணிகள் தாமதமாக தொழுது கொள்ளலாம் என்று சொல்லியிருந்தால் அப்போது தான் இரண்டும் முரண் என்று ஆகும்.

இதை ஏன் சொல்கிறேன்? இது எப்படி ஈஸா நபி விஷயமாக காதியானி மதத்தவர்களுக்கு பொருந்துகிறது என்பதை அடுத்தடுத்த பாகங்களில் காணலாம்..

தொடரும், இன்ஷா அல்லாஹ்
 

விவாத அழைப்புக்கு நிசார் அவர்கள் அனுப்பிய பதில்


நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ள nashid க்கு எனது பதில்:

அன்புள்ள nashid, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்.

நீ , நேரடி விவாதம் செய்யலாமா என்ற எனது கருத்தை கேட்டுள்ளாய்.

Hasrat Mirsa Sahib subject ஐ முடித்துவிட்டதாகவும், இனிமேல் எழுதுவதில்லை என்றும் எழுதி உள்ளாய்.

நான் ஈஸா நபி subject-ஐ பற்றி 5 தொடர்களும், நபிக்கு பின் நபி subject-ஐ பற்றி 1 தொடரும், Hasrat Mirsa Sahib Subject-ஐ பற்றி 2 தொடர்களும் எழுதி உள்ளேன்.

நீ இதுவரை Hasrat Mirsa Sahib Subject-ஐ பற்றி குரான் ஹதீஸ் சான்றுகள் ஒன்று கூட வைக்காமல், உன் இஷ்டத்திற்கு 15 நாட்களாக உளறிக்கொட்டி உள்ளாய்.

மேலும் நேற்றய தேதியில் ஈஸா நபி subஐ பற்றி எழுதி உள்ளாய்.

எனது கருத்து என்ன வென்றால், முதலில் உன் தரப்பிலுள்ள எல்லா சப்ஜெக்ட் ஐயும் முடித்த பிறகு, நேரடி விவாதம் தொடர்பான உனது அழைப்பைப் பற்றி நான் எனது கருத்தை தெரிவிப்பேன். Insha Allah .