வெள்ளி, 12 ஜூலை, 2013

திருமணமும் பிற மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் !


சகோதரியின் திருமணத்திற்காக விடுமுறையில் சென்று விட்டு திரும்பிய மாற்று மத நண்பரிடம் இன்று பேசினேன்... திருமணத்திற்கான செலவுகள் பற்றி பேசிய போது உள்ளக்குமுறலுடன் (நிஜமாகவே இனம் புரியா வேதனை அவரது பேச்சில் தெரிந்தது) அவர் பேச துவங்கினார்.

எல்லா செலவுகளையும் நாங்களே செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள், மாப்பிள்ளைக்கு கார், அவர் அணிவதற்கு 6 செட் ஆடை, கோட், சூட், பெல்ட் ஷு, மாப்பிள்ளையின் சகோதரனுக்கு ஆடை, சகோதரிக்கு பட்டு சேலை.. மாப்பிள்ளை பெற்றோருக்கு நகை. (இது என்ன புது வழக்கமோ?)
எல்லாம் போக, தமது தங்கைக்கு (அதான் மாப்பிள்ளைக்கு..) 78 சவரன் நகை..!!

இதுவும் போக, திருமணத்திற்கான மொத்த செலவு, மண்டபம், போக்குவரத்து, விளக்கு அலங்காரம், கச்சேரி சபா என அந்த செலவு..

போதாக்குறைக்கு தமது சொந்தக்காரர்களான சின்ன தாயார், பெரிய தாயார், அவர்களது பிள்ளைகள் என இவர்களுக்கு ஆடைகள்.. என அவர் மூச்சு விடாமல் பேச, மூச்சு என்னவோ எனக்கு தான் வாங்கியது..

தோராயமாக எவ்வளவு ஆகியிருக்கும்? என்று கேட்டதற்கு ஒரு 20.. என்று இழுத்தார்..

சுப்ஹானல்லாஹ்.. இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கிடைத்திருப்பதற்கு நான் பெருமைப்பட்ட பல்வேறு தருணங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது!!

எங்கள் மதத்தில் ஆண்கள் 5000 ரூபாயிலும் பெண்கள் அதை விடவும் குறைவாகவும் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று சொன்னேன். கொஞ்சம் அதிக செலவுடன் செய்யலாம் என்றால் கூட 20 ஆயிரத்தை தாண்டாமல் செய்து கொள்ளலாம், இங்கே பெண்ணை பெற்றவருக்கு லாபம், ஒரு செலவு இல்லை என்றெல்லாம் நான் பேச, அவர் மௌனமானார்..

விரக்தியால் மௌனமானாரா அல்லது சிந்தித்தாரா என்று தெரியவில்லை..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக