ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

மரண தண்டனை சரியா? விவாதம் - ஜெய பிரகாஷ் 1



ஜெய பிரகாஷ்  17 february 2013


அன்பின் இம்ரான்

சட்டங்கள் மக்களை நல்வழிப்படுத்த அல்ல; என்றும் சட்டங்கள் மக்களை
நல்வழிப்படுத்தும் என்றும் அடுத்தடுத்த பத்திகளில் முரண்படும் உங்கள்
விவாதம் ஆச்சர்யப்பட வைக்கிறது. அரசு-நாடு-ஆட்சி-அரசாங்கம் என்பவற்றின்
தாத்பர்யம் மீதான உங்களின் முதிர்ச்சியின்மை மேலும் விவாதம்
செய்யத்தடையாக இருக்கும். நாடு சட்டம் இயற்றாது. அரசு தான் சட்டத்தை
இயற்றும். அரசு என்றால் மன்மோகன் தலைமையிலான அரசு போல. அரசாங்கம் என்பது
அரசின் அங்கம். அரசின் கொள்கை முடிவுகளை சட்டங்களை நிறைவேற்றி
பாதுகாக்கும் அரசின் துறைகள் நீதித்துறை போல. இது உங்கள் புரிதலுக்காக.

எந்த சட்டங்களும் மக்களை நல்வழிப்படுத்திவிட முடியாது. ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆண்டுகள் பாரம்பர்யமான இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள
நாடுகளில் குற்றங்கள் குறைந்து விட்டனவா? குற்றங்களூக்கும் மேலாக மக்கள்
நல்வழியை அடைந்து விட்டார்களா? சட்டங்கள் மதிக்கப்பட வேண்டியவை. பயப்பட
வேண்டியன அல்ல. இஸ்லாமிய சட்டங்கள் அதீத குரூர தண்டனைகளை முன்வைத்து
மக்களை பயப்படுத்துகின்றன. ராணுவத்தில் தான் இத்தனை ஒழுங்கும்
கண்டிப்பும் தேவை. சிவில் சமூகத்தில் சுதந்திரம் வேண்டும். சுதந்திரம்
என்றால் கட்டற்ற காட்டுமிராண்டித்தனம் அல்ல. பொறூப்பை உணர்ந்த
அடுத்தவனுக்கு தொல்லை தராததே சுதந்திரம். அப்படியான சுதந்திரத்தை
பெயரளவேனும் பிற அரச சடங்கள் வழங்குகின்றன. சல்மான் ருஷ்டிக்கு ஃபத்வா.
தாலிபன்கள் மதக் காவலர்கள். இதுவா இஸ்லாமின் சமூக நீதி?

மனித உரிமைப்பாதுகாப்பு என்பது நம் இந்தியச்சூழலில் எனக்கு ஒரு
கெட்டவார்த்தை. மக்களை அரசிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயல்சக்திகளின்
சதிவேலைகளின் பங்காகவே நான் மனித உரிமை அரசுசார தொண்டு நிறுவனங்கள்
இவற்றை பார்க்கிறேன். மரணதண்டனிக்கு எதிரான என் வாதங்கள் மனிதநேயத்தின்
அடிப்படையில் தான். மேலாக ஒரு நாகரீக சமூகத்தை நாடும் எனக்கு அந்தச்
சமூகத்தில் மரணதண்டனை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் தேவையற்றவையாகத்
தோன்றுகின்றன.

கோவையில் சிறு பெண்ணை சீரழித்துக் கொலை செய்த மோகன்ராஜை மக்களின் அல்லது
அந்தக்குழந்தையின் சமூகத்தை திருப்திப்படுத்த சுட்டுக்கொன்றது போலீஸ்.
அப்போதும் நான் எதிர்த்தேன். மறுமடியும் சொல்கிறேன். தனிமனிதன் தப்பு
செய்தால் அது பலவீனம். அதையே அரசும் சட்டமும் செய்தால் அநீதி.

டெல்லி சம்பவம் பற்றி. இதுவரை எத்தனை பெண்களை அப்படிக்கொன்று
இருப்பார்கள்? எத்தனை தண்டனைகள்? இருந்தும் குற்றங்கள் குறைய வில்லை.
பூலான் தேவி அனுபவிக்காத கொடுமைகளா? அவர் திருப்பி கொடுத்ததை
பார்த்துமாவது திருந்தினார்களா? மாட்டார்கள். வெறும் பயம் மட்டுமே மனிதனை
குற்றத்தில் இருந்து விலக்கிவைக்காது. மனத்தெளிவும் நாகரீகமும் வளரும்
போதுதான் குற்றங்கள் குறையும். இவற்றை எந்த மரண தண்டனையும் ஏற்படுத்தி
விட முடியாது. அந்த 6 பேரை தூக்கிலிட்ட பின்பு டெல்லியிலோ வேறெங்குமோ
இப்படி நடக்காது என்று யார் உத்தரவாதம் தருவார்கள்? இதெல்லாம் வெறும்
ஆவேசப்பேச்சுக்கள். நிதானிப்பவன் இப்படி பேசமாட்டான்.

பாதிப்புக்கு உள்ளானால் மட்டும் தான் வலி தெரியும் என்று இம்ரான் நாசித்
எத்தனை பாதிப்புக்கு உள்ளாகி வலியை தெரிந்துள்ளீர்கள்? இதெல்லாம் விவாதம்
செய்ய சரியாக இருக்கும். உண்மை நிலை என்னவென்றால் பகுத்தறியும் எல்லா
மனிதனுக்கும் மற்றவனின் வலி கண்டிப்பாக தெரியும்.

குற்றவாளிக்கு பாதிக்கப்பட்ட குடும்பம் தண்டனை விதிக்கலாம்-விலக்கலாம்
என்பது இஸ்லாமிய சட்டத்தின் மேன்மையென சொல்கிற என் சகோதரர்களே அதுதான்
இஸ்லாமிய சட்டத்தின் ஆகப்பெரும் பலவீனம். சட்ட்டங்கள் எல்லாருக்கும்
பொதுவில் இருக்க வேண்டியவை. அது நெகிழும் தன்மையோடிருந்தால் அது
சட்டமல்ல. சம்பிரதாயம்.

சட்டங்களின் கடுமை-நாகரீக சமூகம் குறித்து.
பொது இடத்தில் சிறிநீர் கழிக்காமல் இருப்பது; நாலு பேர் இருக்கிற
இடத்தில் எச்சில் துப்பாமல் இருப்பது; பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணம்
செய்வது இப்படி சமூகத்துக்கான நாகரீகம் இருக்கிறது. இதை மீறுபவர்களுக்கு
சட்டமும் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் குறைய வேண்டுமானால் சட்டம் மட்டும்
போதாது. நாகரீகம் வளர வேண்டும். இதே போலத்தான் பிற பெரிய குற்றங்களும்;
கற்பழிக்காமல் இருப்பது ஒரு சமூக மனிதனின் அடிப்படைக்கடமை. அதை விடுத்து
அவ்வாறு செய்பவன் சமூகத்தின் வியாதி. அத்ற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல.
காலங்காலமாக ஆணாதிக்கத்தை போற்றி வரும் ஒரு சமூகத்தின் வெளிப்பாடே அந்தக்
காமவெறியன்.

அந்த 10 மிருகங்களை அழித்தால் நாட்டில் கோடி மக்கள் நிம்மதியாக
இருப்பார்கள் என்கிற உங்கள் கருத்தையே வேறு வரிகளில் சமூகத்தின்
மனசாட்சியை திருப்திப்படுத்த  என்று சொல்லி அஃப்சல் குருவை
தூக்கிலேற்றிவிட்டார்கள். அஃப்சல் குரு அஜ்மல் கஸாப், பேரறிவாளன் அவ்வளவு
ஏன் ராஜபக்‌ஷே உட்பட யாரும் அரசால் கொல்லப்படக்கூடாது. சண்டையில்
சாவதற்கும் ஒரு சமூகத்தால் சாவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

குண்டு வைத்தால் தடா பொடா தேசியப்பாதுகாப்பு சட்டம் துக்குதண்டனை என்று
எத்தனையோ மிரட்டும் அங்கங்கள் இருந்தும் குண்டுகள் வெடிப்பது
குறைந்துள்ளதா? இஸ்லாமிய சட்டங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில்
உள்ள இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புகள் நடப்பதிலையா? பயத்தை விதைப்பதால்
நீங்கள் ஒன்றையும் அறுவடை செய்து விட முடியாது.

குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பதைக் கண்டறிந்து காரணிகளை சரி செய்யாமல்
குற்றம் செய்தவனைக் கொண்று விட்டால் அந்தக் குற்றத்தை அங்கீகரித்தது
போலாகும். எதனால் குற்றம் நடந்தது, மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும் என்று யோசிப்பதுதான் அறிவு.

உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி உள்ளேன். வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக